தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சையை முயற்சித்துப் பார்க்க விரைவில் அனுமதி கிடைக்கும் - மருத்துவக் கல்வி இயக்குநர்

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குப் பிளாஸ்மா சிகிச்சையை முயற்சித்துப் பார்க்க விரைவில் அனுமதி கிடைக்கும் என மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சை பெற்ற 30 பேர் குணமடைந்தனர். அவர்களை வழியனுப்பும் நிகழ்வில் மருத்துவக்கல்லூரி முதல்வரும், மருத்துவக் கல்வி இயக்குநர் பொறுப்பில் உள்ளவருமான நாராயணபாபு கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் எதிர்ப்பாற்றல் அதிக அளவில் இருக்கும் எனத் தெரிவித்தார்.
இதனால் அவர்கள் ரத்த தானம் செய்தால் அதிலுள்ள பிளாஸ்மாவைக் கொண்டு கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இந்தப் பிளாஸ்மா சிகிச்சையை முயற்சித்துப் பார்க்க மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் விரைவில் அனுமதி வழங்கும் எனவும் நாராயணபாபு தெரிவித்தார்.
Comments