BIG STORIES
இயக்குனர் பா.ரஞ்சித் இப்படி செய்யலாமா? ஒரு உயிர் போச்சுப்பா..! பாய்ந்தது போலீஸ் வழக்கு
Jul 15, 2025 02:43 AM
381
இயக்குனர் பா.ரஞ்சித் இப்படி செய்யலாமா?
திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் கார்களை வானில் பறக்க விடும் போது ... உள்ளே இருப்பவர்களுக்கு அடிபடாதா? என்று என்று சிலர் அனுதாபத்துடன் கேள்வி எழுப்ப, அங்க பாருடா எங்க தலைவரோட கார் வானில் பறக்குது.. என்று வியந்து ஒரு கோஷ்டி விசிலடிக்கும்..
கார் விழுந்து நொறுங்கும் நிலையில் நாயகன் அந்த காரை மின்னல் வேகத்தில் ஓட்டிச்செல்வது போல வெட்டி ஒட்டி சினிமாவில் மேஜிக் நிகழ்த்தப்படும்... ரசிகர்களும் தூள் பறக்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்தப்படம்.. எங்க தலைவர் டூப் போடாமலேயே நடிச்சிருக்கார் என்று சாட்டிங்கில் சண்டை போட்டுக் கொள்வார்கள்...
அப்படி நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் காருடன் பறக்கும் வித்தையை ஒரிஜினலாக செய்த நிஜ நாயகன் எஸ்.எம்.ராஜ் என்கிற மோகன் ராஜ்... கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் ... முதல் முறையாக அவரது கரணம் தப்பி இருக்கின்றது... நடந்தது என்ன ? பா.ரஞ்சித் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்ய என்ன காரணம் ? விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் "வேட்டுவம்" . இந்த படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தின் சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் படமாக்கி வந்தார்.
நாகை மாவட்டத்தின் கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டன.
100க்கும் மேற்பட்ட ஒரு கார் சாகச காட்சிகளில் உயிரை பணயம் வைத்து வெற்றிகரமாக நடித்துக் கொடுத்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ், வேட்டுவம் படத்திற்காக கார்கள் வானத்தில் பறப்பது போன்ற சில காட்சிகளில் அசலாக ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து நடித்தார்.
தலைக்கவசம் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு அதிவேகமாக காரை ஓட்டி வந்து சாய்தளத்தில் ஏற்றியதும் கார் வானில் பறந்து தரையில் விழுந்து சில பல்டி அடித்து நின்றது.
காட்சி வெற்றிக்கரமாக படமாக்கப்பட்டு விட்ட மகிழ்ச்சியில் மொத்த யூனிட்டும் மோகன்ராஜை நோக்கி ஓடி வந்தது. காருக்குள் மோகன் ராஜ் மூச்சு பேச்சில்லாமல் கிடந்தார். விபத்துக்குப் பின்னர், இயக்குநர் பா.ரஞ்சித் , திலீப் சுப்பராயன் படக்குழுவினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கார் விழுந்த வேகத்தில் அவர், மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனிடையே ஸ்டண்ட் செய்யும்போது அவர் காருடன் பறந்து சென்று கீழே விழுந்து உயிர் இழந்த அந்த பரபரப்பான காட்சிகள் வெளியானது.
முதலில் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், காருடன் மேலே பறந்து விழும்போது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில், காரின் உள்ளே சிக்கி வெளியே வர முடியாமல் மோகன்ராஜ் பலியானது தெரியவந்தது.
இந்த துயர சம்பவம் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இது போன்ற சண்டைக் காட்சிகளில் ஈடுபடுத்தப்படும் நபர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனுப்பி வைக்கப்படுவர். பாதுகாப்பையும் மீறி இந்த விபரீத உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிணகூறாய்வுக்கு பின்னர் உடல் மோகன்ராஜ் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் அஞ்சலிக்காக வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனிஅனில் வைக்கப்பட்டது. பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி, ஸ்டண்ட் மாஸ்டர் பெப்சி விஜயன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
இதற்கு முன்பு பல படங்களில் இதுபோன்று காரில் பறந்து கீழே விழும் பல்வேறு மொழி படங்களில் நடித்த பெருமைக்குரியவர் ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ். பறக்கும் காட்சி என்றாலே மோகன்ராஜை அழையுங்கள் என்று சொல்லும் அளவுக்கு ஏராளமான படங்களில் இது போன்ற சாகச காட்சிகளில் நடித்திருக்கிறார் மோகன்ராஜ் எப்படி இது போன்ற சம்பவம் நடந்தது என்று வியப்பாக இருப்பதாக பெப்ஸி விஜயன் தெரிவித்தார்.
இந்த படத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் உயிரை பணயம் வைத்து மோகன் ராஜ் உயிரிழந்திருக்கிரார், அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்தார்.
எதிர்பாராத விதமாக இந்த அசம்பாவித சம்பவம் நடந்து விட்டதாக படக்குழு தெரிவித்த நிலையில், கவனக்குறைவாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியதாக படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித், சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காட்சிகள் இயல்பாக வரவேண்டும் என்பதற்காக பழைய முறையில் சண்டைக்காட்சிகளை செய்ய வைத்ததாகவும், தன்னுடைய படம் ஒரிஜினலாக இருக்க வேண்டும் என்று பா.ரஞ்சித் விரும்பியதாலும் நிலையில் இந்த உயிர்பலி ஏற்பட்டதாக சொல்லப்படுகின்றது. படம் வெற்றி பெற்றால் எப்படி இது ரஞ்சித் படம் என்று கொண்டாட படுகின்றதோ, அதே போல படப்பிடிப்பில் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கும் அதனை செய்ய தூண்டிய அவர் தானே பொறுப்பேற்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.
முதல் நாள் முதல் காட்சியில் திரையரங்குகளில் தங்கள் ஆதர்ச நாயகன் பறந்து பறந்து சண்டையிடுவதாகவும், காருடன் பாய்வதாகவும், ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டு செல்வதாகவும் கொண்டாடும் ரசிகர்களின் பாராட்டுக்களுக்கு அசல் சொந்தகாரர்கள் இந்த ஸ்டண்ட் கலைஞர்கள்...!
கடலில் உயிரை பணயம் வைத்து மீன் பிடித்து வரும் மீனவர்களின் தீரத்துக்கு இணையானது அன்றாடம் சண்டை சாகசங்களை செய்து திரையரங்குகளில் ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும் ஸ்டண்ட் கலைஞர்களின் உழைப்பு. திரையுலகில் CG பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் தகுந்த பாதுகாப்புடன் சண்டை காட்சிகளை கிரீன் மேட் மற்றும் புளூ மேட்டில் உருவாக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு மட்டுமல்ல காலத்தின் கட்டாயமும் கூட..!
சாகசமாக நினைத்து செய்தாலும்... சண்டைக்காட்சிக்காக செய்ய வைத்தாலும் குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu