BIG STORIES
குடும்பமே சேர்ந்து வரதட்சணை கொடுமை.. கணவர் தாக்கியதால் ஐ.சி.யூவில் மனைவி
Jul 19, 2025 01:33 AM
261
குடும்பமே சேர்ந்து வரதட்சணை கொடுமை.. கணவர் தாக்கியதால் ஐ.சி.யூவில் மனைவி
மதுரையில் வரதட்சணை கேட்டு போலீஸ்காரராக பணிபுரியும் கணவர் தாக்கியதில் ஆசிரியரான மனைவி படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியை கொடூரமாக தாக்கியது குறித்து காவலர் விரிவாக விளக்கமளிப்பதும், அதனை சிரித்துக்கொண்டே அவரது தங்கை கேட்பதும் போன்ற ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான தங்க பிரியா என்பவருக்கும் மதுரையைச் சேர்ந்த காவலர் பூபாலன் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகனும், ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர். மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் பூபாலனின் தந்தை செந்தில்குமார், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
திருமணத்தின்போது 60 சவரன் நகைகள், புல்லட் பைக் உள்ளிட்டவற்றை தங்க பிரியாவின் குடும்பத்தினர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு வரதட்சணை போதவில்லை குடும்பத்திடம் மேலும் வாங்கி வர வேண்டும் எனக்கூறி தங்க பிரியாவுடன் அவரது கணவர் பூபாலன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. தம்பதிக்கு இடையே பிரச்சனை வரும்போதெல்லாம் பல லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி தர வேண்டும், நகை கூடுதலாக வேண்டும் என பூபாலன் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு பூபாலன் தனது மனைவியை கடுமையாக சித்ரவதை செய்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தங்க பிரியா மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தன் மனைவியை எவ்வாறு கொடுமைப்படுத்தி கொடூரமாக தாக்கினேன் என்பதை தனது தங்கையிடம் காவலர் பூபாலன் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது
அதில், மனைவி அதிகமாக பேசியதால் வாயில் நகத்தால் கீறியதாகவும், சத்தத்துடன் கத்தியதால் அவரது தொண்டையில் தாக்கியதாகவும், முட்டியிலும் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் பூபாலன் தனது தங்கையிடம் கூறியது போன்ற ஆடியோ அதில் இடம்பெற்றுள்ளது. இதனை சிரித்தபடியே கேட்ட அவரது தங்கை, ''ஓவரா வாய் பேசினால் இப்படி தான் நடக்கும்'' எனக்கூறுவது போன்றும் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த தங்க பிரியாவின் தந்தை, மகளை சித்ரவதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், தங்க பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பூபாலன் மற்றும் காவல் ஆய்வாளரான மாமனார் செந்தில்குமரன் , மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் மீது அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வரதட்சனை கொடுமையில் ஈடுபட்ட போலீஸ் பேமிலியை பிடிக்க மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவில் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி பாலசுந்தரம் தலைமையில் ஆய்வாளர் சாந்தி, சார்பு ஆய்வாளர்கள் கார்த்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படை போலீசார் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu