BIG STORIES
திடீர் பிரேக், சோகம்.. 50 ஆண்டுகால ‘வருத்தம்’.. அறிமுகப்படுத்திய இளையராஜாவை புறக்கணித்தாரா சுஜாதா மோகன்?!
May 23, 2025 01:12 PM
1546
12 வயதிலேயே பாட ஆரம்பித்தவர்...18 வயதில் நடந்த திருமணம்... வாழ்வில் வந்த திடீர் பிரேக்... அடுத்தடுத்து நடந்த சோகம்... 50 ஆண்டுகால இசைப்பயணம்... தேசிய விருது மிஸ்ஸிங்... ஆனாலும் திரையுலகில் ஜெயித்த சுஜாதா மோகன்... வெற்றிப் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
குரலில் இனிமை... வயது தான் 61. ஆனால், எப்போதும் மாறாத இளமை... உற்சாகம் குறையாத அழகிய சிரிப்பு...அவர்தான், `புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது… இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது...’ என்ற பாடலைப் பாடி, இதயம் நனைய வைத்த சுஜாதா மோகன்.
‘ஒரு இனிய மனது', ‘நேற்று இல்லாத மாற்றம்', ‘ஆத்தங்கர மரமே', ‘தாமரைப் பூவுக்கும்', ‘பூப் பூக்கும் ஓசை', ‘சொட்டச் சொட்ட நனையுது', ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்', ‘காற்றின் மொழி' என ஒவ்வொரு பாடலிலும் நம்மை கரையவைத்துவிடுவார், பாடகி சுஜாதா மோகன். ஆனால், பாடகி ஆவதற்கு முன் அந்த வாய்ப்பு அவ்வளவு சீக்கிரம் அமைந்துவிடவில்லை.
இரண்டு வயது இருக்கும்போதே தந்தை இறந்துவிடுகிறார். சுஜாதா மோகனின் அம்மாவிற்கு அப்போது 26 வயதுதான். ஒரே மகள் என்பதால், அம்மாவின் உலகமே சுஜாதா மோகன்தான் என ஆகிவிட்டது.
ஏற்கனவே, பள்ளி கல்லூரிகளில் படிக்கும்போது, பாட்டு போட்டிகளில் கலந்துகொள்வார், சுஜாதா மோகனின் தாயார். அதைவைத்துதான், சுஜாதாவிற்கு பாடக் கற்றுக் கொடுத்துள்ளார், அவரது தாய். இதனைத் தொடர்ந்து சங்கீதமும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார், சுஜாதா மோகன்.
தங்களது குடும்பம் மிகவும் கட்டுப்பாடானது. சொந்தக்காரர்களிடம் நிறைய கண்டிஷன்கள் வந்துள்ளது. ஆனாலும், தனது தாயார் உறுதுணையாக நின்றதாகக் கூறியுள்ளார், சுஜாதா மோகன்.
கணவரை இழந்த தனது தாயார் வெளியில் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், கச்சேரிகளுக்குப் பாடப் போகும்போது தன்னுடன் பாட்டியையும் சித்தியையும் துணையாக அனுப்புவார் எனவும் கூறியுள்ளார்.
‘மகளை பாட வைத்து பணம் சம்பாதிக்கிறாள்’ என யாராவது சொல்லிவிடுவார்கள் என கவலைப்பட்ட தாயார், தான் பாடின எந்தக் கச்சேரிக்கும் பணம் வாங்கியதே இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
யேசுதாஸ், ஜென்சி ஆகியோர் பாடிய நிறைய மேடைகளில் பாட ஆரம்பித்த சுஜாதாவிற்கு பாராட்டுகள் குவியத் தொடங்கியது. பாடுவதில் எப்படி பாராட்டு வாங்குவாரோ அதேபோல் படிப்பிலும் மெரிட்டாக வந்து பாராட்டுகளை குவிக்க ஆர்மபித்துள்ளார், சுஜாதா.
முதல் வாய்ப்பு மலையாளத்தில்தான் கிடைத்துள்ளது. இசைஞானி இளையராஜா தமிழில் ‘கவிக்குயில்' மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டவர்தான், சுஜாதா மோகன். அதற்குப்பிறகு, ‘காயத்ரி', ‘ஜானி', படங்களில் பாடியுள்ளார்.
அறிமுகப்படுத்திய இளையராஜாவின் இசையில் தொடர்ந்து பாடாமல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடியதற்கான காரணத்தையும் கூறியுள்ளார், சுஜாதா மோகன். அதாவது, கேரளாவிலிருந்து சென்னைக்கு அழைத்து செல்ல ஆள் இல்லாததால் ஆரம்பத்தில், இளையராஜா கொடுத்த வாய்ப்புகளை மிஸ் செய்ததாக கூறியுள்ளார்.
அதற்குப்பிறகு, 18 வயதிலேயே திருமணம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுஜாதா மோகன் கூறும்போது, “எனக்குத் திருமணமாகி, இசைப் பயணத்தில் சின்ன பிரேக் விழுந்துவிட்டது.
ஏனென்றால், இரண்டு முறை கருவுற்றேன். இரண்டு முறையும் அபார்ஷனாகி கலங்கிட்டேன். ‘இனி குழந்தை பிறக்குமா, பிறக்காதா?’ என பயம் வந்துவிட்டது. மூன்றாவதாக கருவுற்றபோது, 9 மாதங்கள் பெட் ரெஸ்ட் எடுத்து ஸ்வேதாவைப் பெற்றெடுத்தேன்.
என் வாழ்க்கையிலேயே நான் ரொம்ப சந்தோஷப்பட்ட தருணம் அது” என சுட்டிக்காட்டியுள்ளார். இவரது மகள் சுவேதா மோகனும் எக்கச்சக்கமான இனிமையான பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறார், என்பது குறிப்பிடக்கத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, இவரது கணவர் மோகன் மீண்டும் பாடச்சொல்லி ஊக்கப்படுத்தியபிறகே மீண்டும் பாட ஆரம்பித்துள்ளார்.
அதுவும், தான் கம்பேக் கொடுப்பதற்கு காரணமே ஏ.ஆர். ரஹ்மான் தான் என குறிப்பிட்டுள்ளார். அதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “எனக்காக கடவுள் அனுப்பிய ‘ஏஞ்சல்கள்’ யேசுதாஸ் அண்ணா, பிரியதர்ஷன் சார், ஏ.ஆர். ரஹ்மான் சார். நான், கம்பேக் கொடுக்கக் காரணமே ஏ.ஆர்.ரஹ்மான் சார்தான். ‘காதல் ரோஜாவே' பாட்டோட ஹம்மிங்கையும் என்னைப் பாடவைத்தார். அது, மணிரத்னம் சாருக்கு மிகவும் பிடித்துபோனது.
‘புதுவெள்ளை மழை' பாட வாய்ப்பு வந்தது. பாடும்போதே அப்படியொரு சந்தோஷம். பாட்டும் பெரிய ஹிட். ரஹ்மான் சாருக்கு மிகவும் பிடித்த பாட்டு ‘நேற்று இல்லாத மாற்றம்’தான்.
எந்தப் பாட்டு பாடினாலும் ‘நேற்று இல்லாத மாற்றம் ஃபீலில் பாடுங்க' என சொல்வார். ரஹ்மான் சார் பாடகர்களுக்கு ரொம்பவே சுதந்திரம் கொடுப்பார். எல்லோரும் பேமிலி மாதிரி இருந்தோம்” எனவும் கூறியுள்ளவர், 50 ஆண்டுகால இசைப்பயணத்தில் தனக்கு ஏற்பட்ட வருத்தத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல்லாயிரக்காண பாடல்கள், பல்லாயிரக்கணக்கான மேடைகளில் பாடியிருந்தாலும் தேசிய விருது கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் இப்போதும் உள்ளது.
மலையாளத்தில் ‘தட்டம் பிடிச்சி வலிக்கலே' பாட்டிற்காக தேசிய விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்போற கடைசி சில மணிநேரத்துல, வட இந்திய லாபியால் இன்னொரு பாடகிக்குப் போய்விட்டது.
மலையாள இயக்குநர் ‘சிபி மலயில்’ தேசிய விருது நடுவர் மன்ற உறுப்பினராக இருந்தார். சமீபத்தில், அவர் அளித்த பேட்டியில் அவர் சொன்னப்போதான் இது எனக்கே தெரியும். இப்படி இரண்டு மூன்று பாடல்களுக்கு கிடைக்காமல் போயிவிட்டது” என்கிறவர்,
“தேசிய விருது கிடைக்கவில்லை என்றால் என்ன? மக்கள் என்னை அங்கீகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்போதுகூட விஜய் நடித்த ‘லியோ' படத்தில் நான் பாடிய ‘தாமரைப் பூவுக்கும்’ பாடல் வைரல் ஆனது. மக்கள் முன்பைவிட அதிகமாக எனது பாடல்களை நேசிக்கிறார்கள். அவங்களுக்காகவே நிறைய பாடவேண்டும் என நினைக்கிறேன்” என உருக்கமாக கூறியுள்ளார், சுஜாதா மோகன்.
தேசிய விருது வாங்கவில்லை என்றாலும் 50 ஆவது ஆண்டைக் கடந்து, இசையுலகில் அதே இனிமை, அதே இளைமைக் குரலோடு மக்களின் மனதை எப்போதே ஜெயித்துவிட்டீர்கள், சுஜாதா மோகன், என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu