முகப்பு
ஒரே நேரத்தில் ரூ.500 கோடியில் படங்கள் தயாரிப்பு.. சிம்பு, தனுஷ் பட தயாரிப்பாளர் வீட்டில் சோதனை.. யார் இந்த 'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன்?
May 16, 2025 02:42 PM
289
ஒரே நேரத்தில் ரூ.500 கோடியில் படங்கள் தயாரிப்பு.. சிம்பு, தனுஷ் பட தயாரிப்பாளர் வீட்டில் சோதனை..
தமிழ் திரையுலகில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என 3 முக்கிய நடிகர்களின் படத்தை ஒரே நேரத்தில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு அடுத்தடுத்து பெரிய படங்களை தயாரிக்கும் அளவுக்கு குறுகிய காலத்தில் உயர்ந்த ஆகாஷின் பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு....
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் துவங்கப்பட்ட நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நிலையில் அந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஆகாஷின் டான் பிக்சர்ஸ் ஏற்றதாக சொல்லப்படுகிறது. அதேபோல், சுதா கொங்காரா இயக்கும் பராசக்தி படத்தையும் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆகாஷ் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
சிம்புவின் 49வது படத்தை தயாரித்து வரும் ஆகாஷ், அதர்வா முரளி நடிக்கும் இதயம் முரளி திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.
தமிழ் திரையுலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஒரே நேரத்தில் சுமார் 500 கோடி ரூபாய் வரை செலவழித்து முன்னணி நாயகர்களான சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்புவை வைத்து ஆகாஷ் பாஸ்கரன் படம் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பட தயாரிப்புக்காக சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஆகாஷ் பாஸ்கரன் ஈடுபட்டுள்ளாரா? என்ற சந்தேகத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். வீட்டில் ஆகாஷ் இல்லாத நிலையில் அவரது கார் ஓட்டுநரான துரை என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆகாஷ் பாஸ்கரன் யாரை அடிக்கடி சந்திக்கிறார்? அவர் எங்கேல்லாம் வழக்கமாக் செல்வார்? என ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பிய அதிகாரிகள், ஆகாஷுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளது? என்ற விவரங்களையும் கோரியதாக கூறப்படுகிறது.
ஆகாஷ் சொல்லி எங்காவது பணம் கொண்டு சென்றுள்ளீர்களா? யாருக்கெல்லாம் பணம் கொடுக்கச் சொல்கிறார்கள்? என ஆகாஷின் ஓட்டுநரின் துருவி துருவி கேள்வி எழுப்பிய அமலாக்கத்துறையினர் அவரை காரில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே சேலத்தில் PRR ஸ்வர்ண மாளிகை எனும் நகை கடையை நடத்தி வரும் பாஸ்கரனின் மகன் தான் ஆகாஷ் பாஸ்கரன். அந்த நகைக்கடையை தவிர்த்து ஸ்ரீ வேலவன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தையும் ஆகாஷின் தந்தை பாஸ்கரன் நடத்தி வருகிறார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்து சினிமா ஆசையுடன் சென்னை வந்த ஆகாஷ் உதவி இயக்குனராக சிறிது காலம் பணியாற்றி வந்துள்ளார்.
அக்காலக்கட்டத்தில் ஆகாஷின் சகோதரியை அமைச்சர் ஒருவரின் உறவினரான வாலாடி கார்த்தி என்பவர் திருமணம் செய்துள்ளார். வாலாடி கார்த்தியின் உறவினராக பிறகு ஆகாஷ் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்துள்ளார். மேலும், 2021ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஆகாஷின் எழும்பூர் வீட்டில் வைத்து வருமான வரித்துறையினர் 5 கோடி ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த சூழலில், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆகாஷின் தந்தையின் ஸ்ரீ வேலவன் டிரான்ஸ்போர்ட் கிடுகிடுவென வளர்ச்சியை சந்தித்ததாக கூறப்படுகிறது. 10 முதல் 15 வாகனங்கள் மட்டுமே இருந்த ஸ்ரீ வேலவன் டிரான்ஸ்போர்ட்டுக்கு தற்போது 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அந்த அமைச்சரின் பரிந்துரையில் ஆகாஷுக்கு கெவின்கேர் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் மகள் தாரணியுடன் திருமணம் நடைபெற்றது. சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
கெவின்கேர் ரங்கநாதனின் மகளுடன் திருமணம் நிச்சயமான பிறகே ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்சர்சை தொடங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சுமார் 500 கோடி ரூபாய் செலவில் திரைப்படங்களை தயாரித்து வருவதாகவும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் வாரிசுகளுடனுடம் ஆகாஷ் பாஸ்கர் நட்புடன் வலம் வருவதாக கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu