BIG STORIES
பஹல்காம் படுகொலை.. தீவிரவாதிகள் அட்டூழியம்.. மதமென பிரித்து தாக்குதல்..! 28 சுற்றுலா பயணிகள் பலி
Apr 23, 2025 01:30 AM
521
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தளத்தில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொலை வெறியாட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 28 சுற்றுலாபயணிகள் கொடூரமாக சுட்டுகொல்லப்பட்டுள்ளனர். பைசரன் பள்ளத்தாக்கில் நிகழ்ந்தப்பட்ட பயங்கரவாதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
சுற்றுலாவால் வளம் பெற தொடங்கிய காஷ்மீரத்து மக்களின் நிம்மதியான வாழ்வில் மீண்டும் தங்களின் துப்பாக்கியால் வேட்டு வைத்துள்ளனர் துஷ்ட தீவிரவாதிகள்..!
மினி சுவிட்சர்லாந்து என்று சுற்றுலா பயணிகளால் அதிகம் நேசிக்கப்படும் பகுதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம், பைசரன் பள்ளத்தாக்கு..!
பனிமலை சூழ இயற்கை அழகு பசுமையாக கொட்டிக்கிடக்கும் இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முக்கிய காரணம் உலர் பழங்கள் மற்றும் கிரிக்கெட் பேட் தொழிற்சாலைகள்தான் என்று சொல்லப்படுகின்றது.
இங்குள்ள பசுமையான புல்வெளி பகுதியில் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலாபயணிகள் பொழுதை கழித்துக் கொண்டிருந்தபோது 22ந்தேதி மாலை 3 மணி அளவில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாத கும்பல் சுற்றுலாபயணிகளை சுற்றி வளைத்ததாக கூறப்படுகின்றது.
அங்கிருந்த ஒவ்வொருவரையும் யார் ? எந்த நாடு ?எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ? என்ன மொழி பேசுபவர் ? எந்த மதத்தை சேர்ந்தவர் ? என்பதை விசாரித்து ஒவ்வொருவராக சுட்டு தள்ளியதாக கூறப்படுகின்றது.
தங்கள் மதத்தை சாராதவர்களை, அவர்கள் சுடுவதை தெரிந்து கொண்டு சிலர் தங்களும் அந்த மதத்தை சேர்ந்தவர் என்று கூறியதால் சந்தேகம் அடைந்த பயங்கரவாத கும்பல், ஆண்களை ஆடைகளை இறக்கச்சொல்லி சுட்டுக் கொலை செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் வேதனை தெரிவித்தார்
பலர் சிதறி ஓட பயங்கரவாதிகள் ஈவு இரக்கமின்றி கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் தனது துணையை பறிகொடுத்த இளம் பெண் ஒருவர் மிகுந்த துயரத்தோடு அவர் அருகே அமர்ந்திருந்தது காண்போரை கலங்க செய்தது
இந்த தாக்குதல் சம்பவம் காஷ்மீரின் அழகை ரசிக்க செல்லும் சுற்றுலா பயணிகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அதுவும் மதமென பிரிந்தது போதும் என்று உரக்க கத்திக் கொண்டிருக்கும் சூழலில், மதம் என்ன வென்று கேட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் பல உயிர்கள் காவு வாங்கப்பட்டிருப்பது நெஞ்சத்தை உலுக்குவதாக உள்ளது
பயங்கரவாதிகளின் தாக்குதலில் நேபாளத்தை சேர்ந்த சந்தீப், ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த உத்வானி பிரதீப் குமார் , கர்நாடகம், ஹரியானா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், குஜராத் ஆகிய மா நிலங்களை சேர்ந்தவர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சென்னை டாக்டர் பரமேஸ்வரன், சந்துரு, பாலசந்திரா ஆகிய 3 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஒட்டு மொத்தமாக இந்த கோர தாக்குதலில் 28 பேர் பலியாகி உள்ளதாகவும் 10 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில் 16 பேரது உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியே பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு தாயகம் திரும்பினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu