BIG STORIES
சீமானின் வீட்டின் காவலாளி போலீசாரால் இழுத்துச்சென்று கைது செய்யப்பட்டது ஏன் ?.. ஆரம்பம் முதல் அங்கு நடந்தது என்ன ?
Feb 27, 2025 04:49 PM
502
சீமானின் வீட்டின் காவலாளி போலீசாரால் இழுத்துச்சென்று கைது செய்யப்பட்டது ஏன் ?
நடிகை அளித்த திருமண மோசடி புகாரில் விசாரணைக்கு ஆஜராகாத சீமான் வீட்டில் போலீசார் 2 வது சம்மனை ஒட்டிச் சென்ற நிலையில் அது கிழிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டின் காவலாளியான முன்னாள் ராணுவவீரரை போலீசார் தர தரவென்று இழுத்துச்சென்றனர். அவர் வைத்திருந்த துப்பாக்கியும் அதில் இருந்து 20 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
15 வருடமாக சீமானை விரட்டும் நடிகையின் புகார் உச்சக்கட்டத்தை எட்டி இருப்பதாகவே பார்க்கப்படுகின்றது... அண்மையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்ககோரிய சீமானின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் நடிகையின் புகார் குறித்து விரைவாக விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் 28 ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் இல்லையென்றால் கைது செய்ய நேரிடும் என்றும் எச்சரிக்கும் வகையில் 2 வது சம்மனை சீமான் வீட்டு வாசலில் ஒட்டிச்சென்றனர்
சம்மன் ஒட்டிச்சென்ற சில நிமிடங்களில் அதனை வீட்டில் இருந்த பணியாளர் கிழித்துபோட்டார். இதையடுத்து அங்கு ஆவேசமாக வந்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ், சீமான் வீட்டுக்குள் நுழைய முயன்றார் அவரை அங்கிருந்த தனியார் பாதுகாவலர் அமல்ராஜ் என்பவர் தடுத்ததால் என்னை தடுத்தால் உன்னை கொன்று விடுவேன்..” என்று மிரட்டியபடியே பிரவீன் ராஜேஷ் உள்ள நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது
இதனை படம் பிடித்த செய்தியாளர்களையும் காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் கடுமையாக மிரட்டினார்
சீமானின் வீட்டுக்குள் நுழைந்து அமல்ராஜை சட்டையை பிடித்து இழுத்த காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் ,மற்றும் சாதாரண உடையில் இருந்த போலீசார் அவரை தர தரவென இழுத்துச்சென்று காவல் வாகனத்தில் ஏற்றினர்.
அமல்ராஜை போலீஸ் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றும் போது, தனது இடப்பில் துப்பாக்கி இருப்பதாகவும், தவறுதலாக சுட்டு விடும் என கையில் எடுத்த நிலையில் அவரிடமிருந்த துப்பாக்கியை கைப்பற்றினர்.
இதனை பார்த்து வீட்டில் இருந்து வெளியே வந்த சீமானின் மனைவி கயல்விழி ,வெளியே வந்து போலீசாரிடம் மன்னிப்புக்கேட்ட நிலையில் போலீசார் , அவரை சத்தம் போட்டுவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டுச்சென்றனர்.
தொடர்ச்சியாக சம்மன் நோட்டீசை கிழித்ததாக வீட்டு ஊழியர் சுதாகர் என்பவரையும் போலீசார் வீட்டிற்கு வந்து அழைத்துச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நாம் தமிழர் கட்சியின் வழக்கறி ஞர்கள் நீலாங்கரை காவல் நிலையம் சென்றனர். அங்கு அசம்பாவிதங்களை தடுக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டது.
சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் ஓய்வு பெற்ற துணை ராணுவவீரர் என்றும் அவர் வைத்திருந்தது அனுமதி பெற்ற துப்பாக்கி என்றும் வழக்கறிஞர் ரூபன் தெரிவித்தார்
அமல்ராஜ் போலீசாரை துப்பாக்கி காட்டி மிரட்டியதாக கூறி உள்ள போலீசார் அது அனுமதி பெற்ற துப்பாகியாக இருந்தாலும், அதனை தனது காவல் பணிக்கு பயன் படுத்தியது சட்டவிரோதம் எனக்கூறி துப்பாக்கியையும் 20 தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளதாக அறிவித்தனர்.
இதற்கிடையே கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமாண், போலீசாரின் செயல் கேவலமான நடவடிக்கை , தான் எங்கும் ஓடிபோகபோவதில்லை என்றும் விசாரணைக்கு நாளை ஆஜராக போவதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்
மேலும் சீமானின் வீட்டிற்கு முன்பு நாம் தமிழர் கட்சியினர் குவிந்து வருவதை தடுக்க உடனடியாக அவரது வீட்டுக்கு செல்லும் சாலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போலீசார், தொண்டர்களை அவரது விட்டுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.
மாறாக சீமான் வீட்டுக்கு செல்ல விடாமல் தடுத்த போலீசாரிடம் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோடு , எங்கள் அண்ணி வீட்டில் தனியாக உள்ளார், எங்கள் அண்ணன் வீட்டுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என்று கூறி தடையை மீறி கட்சியினர் திரண்டு வருவதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகின்றது.
இதற்கிடையே சட்ட ஆவணமான சம்மனை கிழித்ததாக வளசரவாக்கம் போலீசார் அளித்த புகாரின் பேரிலேயே, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் , சீமான் வீட்டுக்குள் சென்றதாகவும், துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் பாதுகாலவர் அமல்ராஜையும் , சம்மனை கிழித்ததால் சுதாகரையும் கைது செய்ததாகவும் பெருநகர சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அமல்ராஜ் மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
தனது கணவர் 25 வருடம் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றியவர் என்றும் 2018 ஆம் ஆண்டு முதல் முறையான அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பதாகவும், தனது கணவரை கைது செய்தது அராஜகம் என்றும் அமல்ராஜின் மனைவி குற்றஞ்சாட்டி உள்ளார்.
நிலைமை விபரீதமானதை உணர்ந்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் உள்ளிட்ட 3 போலீசாரும் தாங்கள் காயம் அடைந்து விட்டதாக கூறி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து திரும்பியது குறிப்பிடதக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu