''சட்டத்தின் பயத்தை காட்டினால் மட்டுமே அரசுத் துறைகளில் ஊழலை கட்டுப்படுத்த முடியும்..'' - நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்..!

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சிவன் தங்கலைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், மனைவி தனலட்சுமி, மகன் டில்லிராஜா ஆகியோர் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் ஒன்றை வாங்கியுள்ளனர்.
11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக மூன்று பேருக்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி 3பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2010ம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசுத்துறைகளில் அதிகளவில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்காததால், நாளுக்கு நாள் லஞ்ச லாவண்யம் மலிந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் அரசு அதிகாரிகளுக்கு சட்டத்தின் பயத்தை காட்டினால் மட்டுமே அரசுத்துறைகளில் ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார்.
ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலனை நியமித்து,விசாரணையை ஜூன் 7 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
Comments