அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை கத்தியால் தாக்கி, கட்டிப்போட்டு கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில்,அதிகாலை 4 மணியளவில் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் வீட்டில் தனியாக இருந்த அரசு மருத்துவரை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டு, மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், கையில் ரத்தக்காயத்துடன் அலறியபடி மருத்துவர் அருகிலிருந்தவர்களிடம் பதைபதைப்புடன் உதவி கேட்ட காட்சி வெளியாகியுள்ளது.
பழனி அரசு மருத்துவமனையில், தலைமை மருத்துவராக பணியாற்றி வரும் உதயகுமார், அண்ணாநகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், நேற்று பணியை முடித்து வழக்கம்போல் வீடு திரும்பியுள்ளார்.
சென்னையில் மருத்துவ மேற்படிப்பு பயிலும் மகளை பார்ப்பதற்காக, அவரது மனைவி சென்னை சென்ற நிலையில், வீட்டில் தனியாக உறங்கிய அவரை, அதிகாலை 4 மணியளவில் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் எழுப்பியதை அடுத்து மருத்துவர் உதயகுமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கூச்சலிட முயன்ற மருத்துவர் உதயகுமாரை தாக்கி, கத்தியால் தாக்கி கட்டிப்போட்டுள்ளனர். நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு கொள்ளையர்கள் சென்றபிறகு மருத்துவர் உதயகுமாரின் கூச்சல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் வந்து பார்த்து, உதயகுமாரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் வைத்திருந்த 100 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரொக்க பணத்தையும் முகமூடி கொள்ளையர்கள் திருடி சென்று இருக்கலாம் என்றூ தெரிவிக்கபட்டுள்ளது
Comments