தமிழகம், புதுச்சேரியில் செவ்வாய் முதல் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

இந்தியப் பெருங்கடல், தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதால் செவ்வாய் முதல் வியாழன் வரை தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யவும், ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கோட்டுப் பகுதி, தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதி ஆகியவற்றின் மீது நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 36 மணி நேரத்தில் இது மேலும் தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும், அதையடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இது வரும் புதன் காலை தமிழகம், புதுச்சேரிக் கடற்கரையை அடையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாகத் தீபகற்பப் பகுதியில் மழை பெய்யும் வாய்ப்புகள் நாளை முதல் அதிகரிக்கும் என்றும், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் செவ்வாய் முதல் வியாழன் வரை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் வரும் 25ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
Comments