பெங்களூரு போலீஸாரால் தேடப்பட்ட நைஜீரியர் கைது
Jun 13, 2025
மேற்கு வங்க மாநில பெண் கொலை- 2 பேர் கைது
Jun 13, 2025
BIG STORIES
யப்பா டேய்.. பலே ஆளுடா.. வீட்டு ஓனரையே வீடு மாறி ஓடவிட்ட பரபரப்பு சம்பவம்..! வீட்டை வாடகைக்கு விடுவோர் கவனத்திற்கு
May 20, 2025 02:03 AM
439
யப்பா டேய்.. பலே ஆளுடா.. வீட்டு ஓனரையே வீடு மாறி ஓடவிட்ட பரபரப்பு சம்பவம்..!
“காலங்காத்தால உனக்கு குரல்வளை வரைக்கும் சோத்த போட்டு, கூட்டிக்கிட்டு வந்ததுக்கு, உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட” என்பதுபோல், வீட்டை காலி செய்ய மறுத்த வாடகைதாரரை, காலி செய்ய வைப்பதாக கூறிய வழக்கறிஞர் ஒருவர், வீட்டு ஓனரையே சொந்த வீட்டை காலி செய்து ஓட வைத்திருக்கிறார்.. சினிமாவில்கூட நடக்காத, ஜெகஜ்ஜால கில்லாடிகளின், சதுரங்க வேட்டை சம்பவ பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
சென்னை, போரூர், மங்களம் நகரைச் சேர்ந்தவர், 28 வயதுடைய பெண். இவர், தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக உள்ளார். இவர், அதேப் பகுதியில் சொந்த வீட்டில் தந்தை சிவகுமார், தாய் மற்றும் தம்பி உடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டின் கீழ் தளத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக வெங்கடேசன் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார். அவர் கடந்த சில மாதங்களாக முறையாக வாடகை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பலமுறை கேட்டபோதும் பதிலளிக்காமல் அலட்சியம் காட்டி வந்துள்ளார். இதனால், வீட்டை காலி செய்யச் சொல்லியும் கேட்காததால், பெண் மருத்துவக் குடும்பத்தினர், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக, துபாயில் இருக்கும் வழக்கறிஞர் வெங்கட் ஆச்சார்யா என்கிற ஜெயக்குமார் வெங்கட்ராமனை சட்ட உதவிக்காக அணுகியிருக்கிறார்கள். அவரும், தில்லு முல்லு படத்தில் வரும் அய்யம்பேட்டை அறிவுடை நம்பி, கலியபெருமாள் சந்திரன் கேரக்டர் போலவே பேசி, வாடகைதாரரை காலி செய்ய வைப்பதாக, உறுதி அளித்துள்ளார்.
அதற்காக, துபாயில் இருந்தே வாடகைதாரர் வெங்கடேசனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் வக்கீல் வெங்கட் ஆச்சார்யா . ஆனால், வாடகைதாரர் வெங்கடேசனோ, அந்த நோட்டீஸை முறையாக பெறாததால், அந்த நோட்டீஸ், மீண்டும் வழக்கறிஞருக்கே திரும்பி சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து வெங்கட் ஆச்சார்யா , “வாடகைதாரர் வெங்கடேசனிடம் நேரில் சென்று, வாடகை கொடுங்கள் அல்லது வீட்டை காலி செய்யுங்கள் எனக்கூறி, அது தொடர்பாக பேசப்படும் உரையாடல்களை ஆதாரத்துக்காக வீடியோ பதிவுசெய்து எனக்கு அனுப்புங்கள்” என பெண் மருத்துவர் குடும்பத்தினரிடம் ஆலோசனை கூறியுள்ளார்.
உடனே, பெண் மருத்துவரும் அவரது தந்தை சிவக்குமாரும் வாடகைதாரர் வெங்கடேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, அதனை செல்ஃபோனில் பெண் மருத்துவர், வீடியோ பதிவுசெய்துள்ளார். அப்போது, வாடகைதாரர் வெங்கடேசன், தனது 6 வயது மகளை, அவரின் மடியில் தூங்க வைத்தபடியே பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்த வீடியோ பதிவை, பெண் மருத்துவர், வழக்கறிஞர் வெங்கட் ஆச்சார்யாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பின், இது தொடர்பாக போரூர் காவல் நிலையத்தில், பெண் மருத்துவரின் தந்தை சிவக்குமார் புகார் ஒன்றையும் அளித்தார். போலீஸ் விசாரணை என்கிற பெயரில் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், கடந்த ஏப்ரல் மாதம் பெண் மருத்துவரின் குடும்பத்தாரை தொடர்புகொண்ட வழக்கறிஞர் வெங்கட் ஆச்சார்யா, அதிர்ச்சி தகவலை அடுத்தடுத்து கூறினார். அதாவது, “வாடகைதாரர் வெங்கடேசன் உங்கள் மீது சிவில் மற்றும் குற்ற வழக்குகள் தொடர்ந்துள்ளார். நீங்கள், வாடகைதாரர் வெங்கடேசனின் 6 வயது மகளையும் சேர்த்து வீடியோ எடுத்ததுதான் காரணம்” எனக் கூறியவர், “இந்த வழக்கை தீர்க்க வேண்டும் என்றால், 4 லட்ச ரூபாய் பணம் செலவாகும்” எனவும் கூறியுள்ளார்
இதனால் பயந்து போன பெண் மருத்துவர் குடும்பம், சென்னையில் வக்கீல் உள்ள ஞானம் என்கிற ஞானசேகரிடம் 4 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளது,
சில நாட்களுக்குப்பின், பெண் மருத்துவரின் குடும்பத்தைத் தொடர்புகொண்ட வாடகைதாரர் வெங்கடேசன், “என்னோட 6 வயது மகளை நீங்க வீடியோ எடுத்திருக்கீங்க. அதனால், மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கேன். உங்கள் அப்பா சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக்கூறி இன்னும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதனால், பயந்துபோன பெண் மருத்துவரின் தந்தை சிவக்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர், மீண்டும் வழக்கறிஞர் வெங்கட் ஆச்சார்யாவைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
“போக்சோ வழக்கு என்பது சாதாரண வழக்கு அல்ல. மிகவும் கடுமையான சட்டம். உங்களை யார் 6 வயசு பெண் குழந்தையை வீடியோ எடுக்கச் சொன்னது?” எனக்கூறி பயமுறுத்திய வெங்கட் ஆச்சர்யா, “பிரச்சனை, இருக்க இருக்க பெரிசாகிக்கிட்டே போகுது. இந்த வழக்கை நடத்தணும்னா, இன்னும் 10 லட்ச ரூபாய் பணம் தேவைப்படும்” என கூறியுள்ளார். அவர், சொன்னபடி 10 லட்ச ரூபாயை தயார் செய்து, பெண் மருத்துவரின் தம்பி காரில் சென்று, சென்னை நந்தனத்திலுள்ள தனியார் நிறுவனத்தின் அருகே லட்சுமி என்கிற பெண்ணிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதேபோல், சிவகுமாருடன் சேர்த்து உங்களை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யாலாம் என கூறி பயமுறுத்தி சிறுக, சிறுக 35 லட்சம் ரூபாய் வரை சென்னையில் பல்வேறு இடங்களில் அவரின் கூட்டாளிகளை வைத்து பணம் பெற்றுள்ளார், வழக்கறிஞர் என சொல்லப்படும் வெங்கட் ஆச்சார்யா என்கிற ஜெயக்குமார் வெங்கட்ராமன்.
மேலும், வழக்கு மேலும் தீவிரமடைந்ததாக கூறி சிவகுமாரை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் வழக்கறிஞர் வெங்கட் ஆச்சார்யா மிரட்டி உள்ளார், என கூறப்படுகிறது
அதன்பின், போலீஸ் கைது செய்ய வருவதாகவும், நீங்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்தில் தங்கி இருக்குமாறும் அறிவுறுத்தி, பெண் மருத்துவரின் குடும்பத்தை, வெளியில் வாடகை வீட்டில் தங்கவும், வழக்கறிஞர் வெங்கட் ஆச்சார்யா அறிவுறுத்தியுள்ளார். இதனால், பெண் மருத்துவரின் குடும்பத்தினர், சொந்த வீட்டையே காலி செய்துவிட்டு, அவர் சொன்ன இடத்தில் குடும்போத்தோடு தங்கியுள்ளனர்.
சிவகுமாரை போலீஸ் தீவிரமாக தேடி வருவதாக மிரட்டி, அவரை துபாய்க்கு வர வைத்து, யாரிடமும் பேச கூடாது என்று சிவகுமாரின் செல்போனையும் பிடிங்கி வைத்து கொண்டு, அங்கு அவரை ஒரு அறையில் வெங்கட் ஆச்சார்யா, அடைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம், வாடகைதாரர் வெங்கடேசனிடம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளதாதாகவும், வழக்கை வாபஸ் பெற வெங்கடேசன் ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு 4 கோடி ரூபாய் வெங்கடேசன் கேட்பதாகவும் வெங்கட் ஆச்சார்யா, கேட்டுள்ளார். அவ்வளவு பணம் இல்லை என பெண் மருத்துவர் குடும்பத்தினர் கூறியுள்ளனர். அதற்கு, “சிறைக்கு சென்று அவமானப்பட போறீங்களா? வீட்டை விற்று மானத்தோட வாழப்போறீங்களா? அதனால, வீட்டை விற்றாவது இந்த கேஸை முடிக்கவேண்டும்” என வெங்கட் ஆச்சார்யா கேட்டுள்ளார்.
இதற்குப்பிறகுதான், தாங்கள் ப்ளாக்மெயில் செய்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ என மிக மிக....தாமதாக சந்தேகப்பட ஆரம்பித்த, பெண் மருத்துவர் குடும்பத்தினர், அவரது மற்றொரு உறவினரான வழக்கறிஞரை அணுகியுள்ளனர்.
அவரது ஆலோசனையின்படி, பெண் மருத்துவர் குடும்பத்தினர், ஆவடி காவல் ஆணையர் சங்கரை நேரில் சந்தித்து, புகார் அளித்துள்ளனர். அவரது, உத்தரவின்படி போரூர் உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், இன்ஸ்பெக்டர் மதன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், போக்சோ உள்ளிட்ட புகார்கள், வழக்குகள் எல்லாமே போலி என்பதும், துபாயில் உள்ள வழக்கறிஞர் வெங்கட் ஆச்சார்யா என்கிற ஜெயக்குமார் வெங்கட்ராமன் தான் டபுள் கேம் ஆடி, பண மோசடி செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, துபாயில் உள்ள வெங்கட் ஆச்சார்யாவுக்கு உடந்தையாக இருந்த, ஞானம் என்கிற ஞானசேகர், டானியல், லட்சுமி ஆகிய மூவரை போலீசார் தேடி வந்தனர்.
இதில், ஏற்காட்டில் பதுங்கி இருந்த ஞானம் என்கிற ஞானசேகரனை கைது செய்தனர். மேலும் பணம் வாங்கிச்சென்ற சென்னை மாங்காட்டைச் சேர்ந்த லட்சுமியையும் கைது செய்த நிலையில், இந்த மோசடியில் ஈடுபட்ட மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சட்ட உதவிக்காக நம்பி வந்தவர்களை ஏமாற்றி, இந்த ஒட்டுமொத்த மோசடிக்கும் மூலக்காரணமாக இருந்த வழக்கறிஞர் வெங்கட் ஆச்சார்யாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டு, இண்டர்போல் போலீஸ் மூலம் கைது செய்வதற்கான நடவடிக்கை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“வாடகைதாரரை வீட்டை விட்டு காலிசெய்யக்கூறி, உன்கிட்ட சட்ட உதவி கேட்டு வந்து, நீ கேட்கும்போதெல்லாம் ஃபீஸைக் கொடுத்ததுக்கு, உன்னால ஆனதை பண்ணிட்ட. அதுவும் எங்களையே சொந்த வீட்டைவிட்டு ஓட வெச்சு, வாடகை வீட்டுல தங்கவெச்சு, இப்போ எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க பார்த்தியா?” என்கிற அளவுக்கு, பணத்தை இழந்து நிற்கிறது, அந்த பெண் மருத்துவரின் குடும்பம். இவ்வளவு ப்ளாக்மெயில்... இவ்வளவு பணம் மோசடி... இவ்வளவு போராட்டம்.... இவ்வளவு பிரளயத்துக்குப்பிறகும்கூட, வாடகைதாரர் வெங்கடேசன் அந்த வீட்டை காலி செய்யாமல், இருந்துவருகிறார் என்பதுதான், ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
பெண் மருத்துவர் குடும்பத்தினர், புகார் கொடுத்தபோதே, போரூர் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுத்திருந்தாலோ அல்லது சரியான சட்ட வழிகாட்டுதலைக் கொடுத்திருந்தாலோ இந்தளவுக்கு மோசடியில் சிக்கியிருக்க மாட்டார்கள் என்றும் நல்ல வேளையாக காவல் ஆணையர் சங்கரை சந்தித்ததால் பெண் மருத்துவர் குடும்பம் தப்பி இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது
காவல்நிலையங்களில் மோசடி வழக்குகளை அப்படியே கிடப்பில் போடுவதாலும், போலீசார் புகார்களை எடுக்காமல், உயர் அதிகாரிகள் உத்தரவிற்காக காத்திருப்பதாக கூறுவதாலும், வழக்கறிஞர்கள் போர்வையில் சிலர் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்து இப்படி பணத்தை பறிப்பதாகவும், இதுபோன்று சிவில் வழக்குகளில் நீதிமன்றம் தலையிட்டு குறிப்பிட்ட காலத்திற்கு தீர்வு காண வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அச்சத்தில் செய்தாலும் அவசரத்தில் செய்தாலும் குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu