முகப்பு
போலி காவல் நிலையம் நடத்தி வசூலை வாரிக் குவித்த இளைஞர் நிஜ போலீசிடம் சிக்கியது எப்படி?
Jun 13, 2025 01:22 PM
31
போலி காவல் நிலையம் நடத்தி வசூல்
போலி காவல் நிலையம் நடத்தி, போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் லட்சக்கணக்கான ரூபாயை, சுருட்டிய இளைஞரின் மோசடி சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பீகார் மாநிலம் மோஹானி கிராமத்தில் ராகுல் குமார் ஷா என்பவர், போலியான காவல் நிலையத்தை அமைத்து, போலீஸ் வேலை வழங்குவதாக கூறி அங்கிருக்கும் உள்ளூர் இளைஞர்களை நம்ப வைத்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருக்கிறார்.
ஹோம்கார்டு மற்றும் கான்ஸ்டபிள் போன்ற பதவிகளை வாங்கி தருவதாக கூறி, ஒவ்வொரு இளைஞரிடமிருந்தும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி, இந்த மோசடி சம்பவத்தை கனக் கச்சிதமாக அரங்கேற்றியிருக்கிறார்.
வேலைக்காக இவரிடம் பணத்தைக் கொடுத்தவர்களை நம்ப வைப்பதற்காக, ராகுல் குமார் ஷா-வே போலி நியமனக் கடிதங்களை உருவாக்கி அவற்றை வழங்கியிருக்கிறார். மேலும் அவர்களுக்கு போலீஸ் சீருடைகள், லத்திகள் மற்றும் போலி அடையாள அட்டைகளையும் வழங்கியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து கிராமங்களில் ரோந்து செல்லவும், வாகன சோதனை நடத்தவும் இளைஞர்களை ராகுல் பணியமர்த்தியுள்ளார். இந்த சோதனைகளில் இருந்து கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை ராகுல் வைத்துக்கொண்டு, மீதமுள்ள பணத்தை தனக்குக் கீழ் பணிபுரியும் போலி ஊழியர்களுக்கு விநியோகித்திருக்கிறார். மேலும், கடத்தல் காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மதுபானங்களை லஞ்சம் வாங்கி அவர்களிடமே திருப்பி கொடுத்திருக்கிறார்.=
கிராமத்தில் எப்போதும் போலீஸ் சீருடையில் மிடுக்குடன் திரிந்து வந்த ராகுல், உண்மையான போலீசாருடன் புகைப்படங்களை எடுத்து தனது பேஸ்புக்கிலும் பதிவிட்டு வந்திருக்கிறார். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளைத் தீர்க்க நடத்தப்படும் ஒரு சிறப்பு முகாமை, மோகினி பஞ்சாயத்துத் தலைவரை வைத்தே திறக்கவைத்துள்ளார். இதனால், அந்த ஊர் மக்களுக்கு ராகுல் மீது எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், இந்த போலி காவல் பணியில் சேர்ந்து, சுமார் 2 மாதங்கள் சென்ற பிறகு, சம்பளம் கிடைக்காததால் அவர்களுக்கு ராகுல் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த போலி காவலர்கள், ராகுலின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை பிடிக்க முற்பட்டனர். ஆனால், ராகுல் அதற்குள் அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார்.
அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ராகுல் மீது டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் ராகுல் குமார் ஷா இதுபோன்று 300 பேரிடம் சுமார் 50 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தலைமறைவான ராகுல் குமார் ஷா-வை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவருதாக பூர்னியா எஸ்பி கார்த்திகே சர்மா தெரிவித்துள்ளார்.. இந்த மோசடியில் வேறு ஏதேனும் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசரணை நடத்திவருகின்றனர்.
பீகாரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதேபோன்று, பாங்கா நகரில், போலி காவல் நிலையம் நடத்தி மக்களிடம் இருந்து பணம் பறித்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட ரவுடி கும்பலை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu