உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும் யோகா... இன்று சர்வதேச யோகா தினம்..!
உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகாவின் சிறப்புகளை விளக்கும் இந்த செய்தித் தொகுப்பு இதோ உங்களுக்காக...
உலகிற்கு இந்தியா அளித்த கொடைதான் யோகா! உடலையும், மனத்தையும், உள்ளத்தையும் ஒருங்கிணைத்து, அனைத்துப் புலன்களையும் ஆளுமை கொள்வது யோகக் கலையின் தனிச்சிறப்பு!
மன சஞ்சலமே வாழ்க்கை, மனப்போராட்டமே தொழில், உடலை வருத்திக் கொள்வதே கொள்கை என சோகம், கோபம், பதற்றத்துடன் கூடிய வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவர்கள் மனஅழுத்தத்திற்கும் விரக்திக்கும் ஆளாகின்றனர். உடல் தளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி, மூச்சுத் திணறல், மூட்டுவலி என ஒருகட்டத்தில் நோய்கள் இவர்களைத் தேடி வருகின்றன. இவற்றில் சிக்காமல் உடலைப் பாதுகாப்பதுதான் யோகா பயிற்சி!
உடலுக்கு உகந்த உணவுடன், தேவையான உடற்பயிற்சியும் சேரும்போது உடலும் மனமும் வலுவடைகின்றன. ஆசனம், பிராணாயாமம், தியானம் போன்றவற்றை தொடர்ச்சியாகச் செய்வதால் உடல் உறுப்புகள் தூய்மையாகி சீராக இயங்குகின்றன.
சீரான மூச்சுக்கும், நாடித் துடிப்புக்கும் உதவுகிறது யோகா பயிற்சி.. கூடும் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, எப்போதும் புத்துணர்ச்சியை அளிக்கிறது யோகா பயிற்சி.. உடலையும் மனத்தையும் உறுதியாக்கி எதையும் தாங்கும் பக்குவத்தையும், நோய்களை நெருங்கவிடாத எதிர்ப்பு சக்தியையும் கிடைக்கச் செய்கிறதுயோகா பயிற்சி... முதுமைத் தோற்றத்தை தள்ளிப்போட வைக்கிறது யோகா பயிற்சி..
உடல், மனம், ஆன்மாவைத் தூய்மையாக்கும் யோகாப் பயிற்சியை செய்வது ஒவ்வொருவருக்கும் அவசியம்; தினசரி யோகா செய்தால் முதுமையோ, நோய்களோ நெருங்க விடாமல் செய்யும் என்பது நிச்சயம்!
Comments