சென்னை : உயிரைப் பணயம் வைத்து பால் ஊற்றும் விஜய் ரசிகர்!

தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் மாஸ்டர் படத்தை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று வெளியானது. இந்த படத்தை காண காலை முதலே தியேட்டர்களில் ரசிகர்கள் திரண்டனர். தமிழகமெங்கும் அதிகாலை 4 மணி முதலே தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் அலை மோதினர். பல தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைக்கு பதிலாக முழுதாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்றும் டிக்கெட்டுகள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை போனதாகவும் குற்றச்சாட்டும் எழுந்தது. அதோடு, தமிழகம் முழுவதுமே தியேட்டர்களில் நடிகர் விஜய்க்கு கட்டவுட் வைத்து பால் ஊற்றினர். இந்த நிலையில், சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர் ஒருவர் தன் உயிரைப்பணயம் வைத்து கட்டவுட்டுக்கு பால் ஊற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை கோயம்பேட்டில் ரோகிணி தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரிலும் மாஸ்டர் படம் வெளியானது. படத்தை காண வந்த ரசிகர்கள் சிலர் தங்கள் கையில் பால் பாக்கெட்டுடன் வந்திருந்தனர். தியேட்டர் முன், விஜய் கட்டவுட்டுக்கு பால் ஊற்றினர். அப்போது, தியேட்டர் வாசலில் உள்ள வயிற்கதவு மேல் ஏறி கூர்மையான கம்பிகளுக்கிடையே நின்று கொண்டே இளம் ரசிகர் ஒருவர் நடிகர் விஜய்யின் கட்டவுட்டுக்கு தன் கையில் வைத்திருந்த பால் பாக்கெட்டை உடைத்து ஊற்றினார். சற்று கால் வழுக்கினாலும் அந்த இளைஞர் கம்பியில் சிக்கி உயிருக்கே ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார். ஆனாலும், தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் விஜய் படத்துக்கு பால் ஊற்றிய அந்த ரசிகரை திரையரங்க ஊழியர்களும் தடுக்கவில்லை.
Comments