கேரளா தங்கக் கடத்தல்... ரூ.100 கோடிக்கு ஹவாலா பரிவர்த்தனை?

கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கர்களில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணமும், ஒரு கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை ஹவாலா மூலம் பரிவர்த்தனை நடந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரளாவில் உள்ள ஐக்கிய அமீரக தூதரகத்தின் பெயரில் 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் சுவப்னா சுரேஷ் அவரது கூட்டாளிகள் ரமீஸ், சந்தீப் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை ஒருபக்கம் என்.ஐ.ஏ, மறுபக்கம் சுங்க துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. சுவப்னா சுரேஷின் கூட்டாளி ரமீஸை சுங்கத் துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
முன்னதாகக் கடத்தப்பட்ட தங்கம் திருச்சியில் உள்ள பிரபல நகை கடைக்கும், மகாராஷ்டிராவில் ஷாங்கிலி எனும் பகுதிக்கும் விற்கப்பட்டதாக ரமீஸ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, தங்கம் கடத்தலில் சம்மந்தப்பட்ட திருச்சி நகைக் கடையில் சோதனை நடத்தவும், நகை கடை உரிமையாரை விசாரிக்க சம்மன் அனுப்பவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே திருவனந்தபுரத்தில் சுவப்னா சுரேஷின் 2 வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம், 982 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக மாநில முன்னாள் ஐ.டி. துறை செயலர் சிவசங்கரிடம் வரும் திங்கள் அன்று மீண்டும் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது,
எற்கனவே அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவதற்கு முன்னர் குற்றவாளிகள் சிவசங்கரை சந்தித்ததாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும் என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனிடையே கடத்தல் தங்கம் மூலம் பெறப்பட்ட பணம், ஹவாலா பணமாக ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை நடந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட சுவப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோர் கொச்சியிலுள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, விசாரணையின் போது மன ரீதியாக தான் துன்புறுத்தப்பட்டதாக சுவப்னா குற்றம்சாட்டினார்.
அவர்கள் இருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை, வரும் 5 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரையும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக சரித்தையும் வரும் 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டப்பட்டது.
Comments