முகப்பு
“அண்ணன் என்ன தம்பி என்ன..சொந்தமென்ன பந்தமென்ன” செண்டிமெண்டாக அழுத செயின் பறிப்பு திருடன்...
Jul 06, 2025 08:06 AM
392
செண்டிமெண்டாக அழுத செயின் பறிப்பு திருடன்... அவன் ரூட்டிலேயே பதிலடி கொடுத்த போலீஸ்
செயின் பறிப்பில் ஈடுபட்டு, போலீஸில் சிக்கியதும், செண்டிமெண்டான பதிலைக் கூறி தப்பிக்கப் பார்த்த புருடா திருடனின் பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...
சென்னையை அடுத்த அம்பத்தூர், விஜயலட்சுமி புரத்தைச் சேர்ந்த 65 வயதான ருதா பகவான் தாஸ் என்ற மூதாட்டி, கடந்த 3 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள கடையில் சிக்கன் வாங்கி கொண்டு நடந்து வந்துள்ளார்.
அப்போது, அதிவேகமாக பல்சர் பைக்கில் வந்த வழிப்பறி கொள்ளையன், ருதா பகவான் தாஸ் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் எஸ்கேப் ஆன சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மூதாட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழிப்பறியில் ஈடுபட்டு, தப்பி சென்றவனை, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸார் சி.சி.டி.வி ஆதாரங்களைக் கொண்டு விசாரிக்க ஆரம்பித்தனர்.
“திருடுனவனைப் பார்த்தா புது கை மாதிரி தெரியல. ஏற்கனவே, எக்ஸ்பிரியன்ஸா இருக்கிற கை மாதிரி தெரியுது” என்ற போலீஸார், ஏற்கனவே வழிப்பறி வழக்கில் கைதாகி சிறையிலிருந்து, ஜாமினில் வெளி வந்தவர்களின் பட்டியலை தூசி தட்டி எடுத்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக ஜாமினில் வெளி வந்த அம்பத்தூர் கல்லிக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அஜித் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில், அவர்தான் திருடியுள்ளார் என்பது தெரியவந்தது. அதுவும், இந்த அஜித்தின் செண்டிமெண்ட் வாக்குமூலம் போலீசாரையே டென்ஷன் ஆக்கியது.
உடன் பிறந்த சகோதரராலும், பெற்ற தாய் தந்தையாலும் ஆதரவில்லாமல் தவித்து வரும் தான், அன்றாட செலவுக்கு என்ன செய்வது என்பது தெரியாமல் இதுபோன்று திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டதாக, போலீசாரிடம் கண்கலங்கியபடி வாக்குமூலம் அளித்துள்ளார். அப்படியே உருக்கமாக வாக்குமூலம் அளித்துவிட்டு, விசாரணை அதிகாரியின் மனம் இறங்குகிறதா? என ஏறிட்டுப் பார்த்துள்ளார்.
ஆனால், இருக்கமான முகத்துடன் அவனிடம் பேச ஆரம்பித்த விசாரணை அதிகாரி, “ஏண்டா, உனக்கு என்ன வயசாகுது? 27 வயசு ஆகுது. அதாவது, கல்யாணம் பண்ணி ஒரு குடும்பத்தையே நிர்வகிக்க ஆரம்பிக்கவேண்டிய வயசு. அவன் அவன் பார்ட் டைம் வேலை பார்த்துக்கிட்டே ஸ்கூல், காலேஜ் ஃபீஸ் கட்டி படிச்சுக்கிட்டிருக்கான். நீ, என்னடான்னா 27 வயசுல அண்ணன் காரனுங்க பார்த்துக்கல, அப்பா- அம்மா பார்த்துக்கலன்னு கதை விட்டுக்கிட்டிருக்க. 27 வயசுல உன் அப்பா -அம்மாவை நீதாண்டா பார்த்துக்கணும்.
அதைவிட்டுட்டு செயின் பறிப்புல ஈடுபட்டிருக்கியே? உன், பாட்டி வயசுல இருக்கிற அந்தம்மா நீ செயினை புடிச்சி இழுக்கும்போது, கீழ விழுந்து மண்டை அடிப்பட்டு செத்துப்போச்சுன்னா, உசுரு திரும்பி வருமா? குற்றம் செஞ்சுட்டு என்ன காரணம் சொல்லாம்னு யோசிக்கிறதை விட்டுட்டு, இனிமே உழைச்சு சாப்பிடுறதுக்கு என்ன வழின்னு பாரு” என பதிலடி கொடுத்துள்ளார், விசாரணை காக்கி. மேலும், அஜித் வழிப்பறி செய்த நகையை மீட்டதோடு, அஜித் திருடி வைத்திருந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
சில நாட்கள் கழித்து ஜாமினில் வெளியில் வந்த பிறகு, திருந்தி வாழ்வாரா? அல்லது அடுத்த முறையும் இதே போன்ற குற்றத்தை செய்துவிட்டு, வேறு ஏதாவது காரணத்தை சொல்லப்போகிறாரா? என காத்திருப்போம்...
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu