BIG STORIES
3 பள்ளிக் குழந்தைகள் அநியாயமாய் பறிபோக இவர் தான் காரணமாம்..! அலட்சியத்துக்கு யார் பொறுப்பு ?
Jul 09, 2025 02:35 AM
280
3 பள்ளிக் குழந்தைகள் அநியாயமாய் பறிபோக இவர் தான் காரணமாம்..!
கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணாக்கர்களின் உயிரை பறித்த கோர விபத்து குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சிலரின் அவசரத்தால் நிகழ்ந்த உயிர்ப் பலி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
பள்ளிக்குச்சென்ற தங்கள் வீட்டுப் பிள்ளைகள் சடலமாக கிடப்பதை பார்த்து உற்றாரும் பெற்றோரும் கதறி அழுத சோகக் காட்சிகள் தான் இவை..!
கடலூர் கிருஷ்ணசாமி சி.பி.எஸ்.இ பள்ளிக்கூட வேனில் சுப்பிரமணியபுரத்தில் இருந்து சாருமதி, செழியன், நிமிலேஷ், நிவாஸ் உள்ளிட்ட 4 மாணவர்கள் பள்ளிக்கு புறப்பட்டனர். பள்ளி வேனை ஓட்டுனர் சங்கர் ஓட்டிச்சென்றார். காலை 7:40 மணியளவில் செம்மங்குப்பத்தில் ரயில் தண்டவாளத்தை பள்ளி வாகனம் கடக்க முயன்றுள்ளது. அப்போது, 80 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய வேகத்தில் பள்ளி வாகனத்தை இடித்து 50 மீட்டர் தூரம் தூக்கி வீசியது. இதில் பள்ளி வாகனம் முற்றிலும் உடைந்து நொறுங்கி சின்னாபின்னமானது.
மாணவி சாருமதி, மாணவர் நிமிலேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். உயிருக்கு போராடிய மாணவர் செழியனை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
சத்தம் கேட்டு சம்பவ இடத்தில் கூடிய பொதுமக்கள் ரெயில்வே கேட்டை மூடாமல் அறையில் அலட்சியமாக தூங்கியதாக கூறி கேட்கீப்பர் பங்கஜ் சர்மாவை அடித்து உதைத்தனர்
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் பங்கஜ் சர்மாவை மீட்டு விசாரணைக்காக அழைத்துச்சென்றார்.
அதற்குள்ளாக பள்ளி வேன் ஓட்டுனர் மீது குற்றஞ்சாட்டி தெற்கு ரெயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வேன் ஓட்டுனர் பள்ளிக்கு செல்ல வேண்டும், கேட்டை திறந்து விடுங்கள் என்று சொன்னதால், கேட் கீப்பர் கேட்டை திறந்து விட்டதாகவும் ரெயில்வே விதிமுறையை மீறி கேட்டை திறந்து விட்ட பங்கஜ் சர்மாவை சஸ்பெண்ட் செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்
தெற்கு ரெயில்வேயின் இந்த அறிக்கை கூடுதல் குழப்பதை ஏற்படுத்தியது. மூடப்படாமல் ரெயில்வே கேட் திறந்தே கிடந்ததாக தெரிவித்த பொதுமக்கள், மூடப்படாத ரெயில்வே கேட்டை எப்படி திறந்துவிட முடியும் ? என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஓட்டுனர் சங்கர் மற்றும் மாணவர் நிவாஸ் ஆகியோர், ரெயில்வே கேட் திறந்திருந்ததாகவும் ரெயில் வரும் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்றும் தெரிவித்தனர்
இந்த ரெயில்வே கேட் அமைந்திருக்கும் பகுதி மேடான பகுதி என்றும் கீழெ இருந்து மேலே ஏறும் வாகனங்கள் ரெயில் வருவதை எளிதில் தெரிந்து கொள்ள இயலாத வகையில் இரு புறங்களிலும் மரங்கள் அடர்ந்து காணப்படும் என்று தெரிவித்த காவல் உயர் அதிகாரி ஒருவர், பள்ளி பேருந்தில் சிசிடிவி பொருத்தப்பட்டு உள்ளது, அந்த காட்சிகளை எடுத்து ஆய்வு செய்தால் பள்ளி ஓட்டுனர், கேட் கீப்பரிடம் கேட்டை திறந்துவிட சொன்னாரா ? அல்லது இவர் கூறியபடி ரெயில்வே கேட் திறந்தே தான் கிடந்ததா ? என்பதுக்கு எல்லாம் விடை கிடைத்து விடும் என்றார்.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் ஆய்வுக்காக வந்த தெற்கு ரெயில்வே டி.ஆர்.எம் கூறியது மேலும் குழப்புவதாக இருந்தது. ரெயில் வரும் தகவல் அறிந்து காலை 7.06 மணிக்கு ரயில் கேட்டை மூடியதாகவும், தண்டவாளத்தின் இரு பக்கமும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றுள்ளன. நீண்ட நேரம் வாகனங்கள் காத்துகிடந்ததால், இருசக்கரவாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டதால் காலை 7.20 மணிக்கு கேட் கீப்பர் பங்கஜ், தனது மேலதிகாரிகள் யாரிடமும் முன் அனுமதி பெறாமல், ரயில்வே கேட்டை திறந்துவிட்டதாகவும் அதற்குள்ளாக இந்த விபத்து நிகழ்ந்து விட்டதாக கேட்கீப்பர் தன்னிடம் செல்போனில் தெரிவித்ததாக கூறினார்
காலை 7: 40க்கு கடந்து செல்லும் ரெயிலுக்காக 7:06 மணிகே ரெயில்வே கேட் மூடப்பட்டதாக கூறப்படுவது நம்பும் படியாக இல்லை ? என்றும் 7;20 மணிக்கு கேட் கீப்பர் ரெயில் வரும் சமயத்தில் கேட்டை திறந்து விட்டதாக கூறுவதும் ஏற்புடையதாக இல்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். குறிப்பாக பூட்டிய கேட்டை திறக்க வேண்டுமானால் நிலைய மேலாளர் அனுமதி வேண்டும் என்ற நிலையில் அதனை மீறி பங்கஜ் சர்மா இதனை எப்படி செய்திருப்பார் என்றும் அவர் கேட்டை பூட்டுவதாக தகவல் தெரிவித்து விட்டு அலட்சியமாக படுத்து உறங்கியதே இந்த கோர விபத்து நிகழ காரணமாகிவிட்டதாக குற்றச்சாட்டினர்
அதனை உறுதிபடுத்துவது போல கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது கடலூர் ரெயில்வே போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயலும் பொழுது கேட் போடாமல் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் அதில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu