மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பெண்.... அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கையில் போலீசார் தாக்கியதாக கதறல்...!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் வழங்குவதற்காக வந்த போது அறுவை சிகிச்சை செய்த கையில் போலீசார் தாக்கியதாகக் கூறி பெண் ஒருவர் கதறி அழுதார்.
பழனி பழைய ஆயக்குடியில் உள்ள தங்கள் வீட்டின் முன்புறம் உள்ள குடிநீர் குழாயைச் சுற்றி தண்ணீர் தேங்கியது தொடர்பான தகராறில் உறவினர்களால் தாங்கள் தாக்கப்பட்டதாகக் கூறி தனலட்சுமி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாக தெரிகிறது.
அந்த புகாரின் பேரில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனலட்சுமியும் அவரது மகள் மகாலட்சுமியும் மனு அளித்தனர்.
பின்னர் வெளியே வந்த போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனலட்சுமியின் பையை காவல்துறையினர் சோதனை செய்வதற்காக இழுத்ததாகவும் பையை தர மறுத்ததால் காவல்துறையினர் தனலட்சுமியின் கையை தட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கையிலேயே போலீசார் தாக்கியதால் வலி ஏற்பட்டதாகக் கூறி தனலட்சுமி கதறி அழுதார். தனலட்சுமியுடன் இருந்த அவரது மகள் மகாலட்சுமி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Comments