BIG STORIES
10 நிமிடம்கூட நிற்க முடியாது.. மகளை தோளில் சுமந்து படிக்க வைத்த தந்தை.. மேற்படிப்புக்கு உதவுமா அரசு?
Jul 03, 2025 03:51 PM
104
10 நிமிடம்கூட நிற்க முடியாது.. மகளை தோளில் சுமந்து படிக்க வைத்த தந்தை.. மேற்படிப்புக்கு உதவுமா அரசு?
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள, கீழ மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுடலைமணி. இவரது மனைவி சித்திர வடிவு. இவர்களது மகள் கற்பகவல்லி. இவர் மாற்றுத்திறனாளர். கற்பகவல்லி கீழமங்கலத்திலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர், பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி படிப்பு வரை படித்தார்.
இதையடுத்து, நாகம்பட்டி மனோமணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பி காம் முடித்துவிட்டு, வறுமையின் காரணமாக மேற்படிப்புக்கு பணம் இல்லாததால், படிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கற்பகவல்லி மாற்றுத்திறனாளர் என்பதால், அவரது தந்தை தான் பள்ளி முதல் கல்லூரி வரை அவரை அழைத்துச் சென்று வந்துள்ளார். சில நேரம் இரு சக்கர வாகனம் அல்லது ஆட்டோவில் தனது மகளை அழைத்துச் செல்லும் சுடலைமணி, தனது மகளை தோளில் சுமந்து சென்ற காலங்களும் உண்டு. பத்து நிமிடம்கூட நிற்கமுடியாத நிலை, வறுமை சூழல் என்றாலும், தன்னம்பிக்கையோடு தனது படிப்பை தொடர்ந்துள்ளார் கற்பகவல்லி.
இந்த சூழ்நிலையில்தான், கற்பகவல்லி குடும்பத்தினர் வாழ்ந்த வீடு சேதம் அடைந்து காணப்படுவதால், அங்கு வாழ முடியாமல், அருகில் உள்ள மற்றொரு வீட்டில் சிலரது உதவியுடன் வாழ்ந்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய, எந்தவித உதவிகளும் கற்பகவல்லிக்கு கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, கற்பகவல்லி கூறுகையில், தனது பெற்றோர் தனக்கு உறுதுணையாக இருந்து படிக்க வைத்ததாகவும், தனது தந்தைதான், தன்னை தோளில் சுமந்து தனக்கு பக்க பலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தற்போது வீடு இல்லாத நிலை இருப்பதால், தமிழ்நாடு அரசு வீடு வழங்க வேண்டும் என்றும் இருசக்கர வாகனம் வழங்குவது மட்டுமின்றி, தன்னுடைய மேல் படிப்பிற்காக உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
கல்வி கற்க வேண்டும், அரசுப் பணிக்கு சென்று தன்னை தோளில் சுமந்து பாதுகாத்த பெற்றோரை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற மாற்றுத்திறன் கொண்ட மாணவியின் லட்சியத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu