முதலமைச்சரின் கடித விவகாரம் : இ.பி.எஸ். கண்டனம்

தனது குடும்பத்தின் மீதும், சக அமைச்சர்கள் மீதும் உள்ள குற்றச்சாட்டுகளை மறைக்கவே குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து மீள மத்திய அரசிடம் சரணாகதி படலத்தை தி.மு.க. தொடங்கியுள்ளதாகவும், அதன் முதல் படியாக குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார். எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி மீது, பொய் வழக்கு போட்டுவிட்டு, தாமே நீதிபதியாக மாறி, குற்றம் சுமத்தியவர்களை குற்றவாளிகள் என முதலமைச்சர் குறிப்பிடுவதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பை வைத்துள்ள சட்டத் துறை அமைச்சர் மீதான ஊழல் வழக்கில் விசாரணை விரைவுபடுத்தப்படுமா? என்றும் கைதி எண் பெற்று சிறைத் துறை காவலில் உள்ள செந்தில் பாலாஜியை துறையில்லா அமைச்சர் என முதலமைச்சர் அறிவித்தது ஏன் ? என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமையும்போது, தி.மு.க.வினரின் அனைத்து வழக்குகளும் மீண்டும் திறக்கப்பட்டு, மேல்விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments