தண்டவாளத்தில் நின்று சவால் விட்டு செல்ஃபி... அடிச்சு தூக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்..! கூடா நட்பு கேடாய் முடிந்த சோகம்
திருப்பூரில், நண்பர்களிடம் சவால்விட்டு ஓடும் ரயிலின் முன் நின்று செல்பி எடுத்த இரண்டு இளைஞர்கள் மீது ரயில் மோதியதில் உடல் சிதறி பலியான சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த பாண்டியன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் திருப்பூர் ரங்கநாதபுரத்தில் தங்கி, அப்பகுதியில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்தனர்.
ஞாயிறு விடுமுறையென்பதால், விஜய் மற்றும் பாண்டியன் இருவரும் உடன் தங்கியிருந்த நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, தாங்கள் இருவரும் ரயில் வரும் போது அதற்கு முன் நின்று செல்பி எடுத்து அனுப்புவதாக சக நண்பர்களிடம் சவால் விட்டு புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகின்றது.
அணைப்பாளையம் பகுதிக்கு மது போதையில் சென்ற இருவரும் தண்டவாளத்தில் நின்று கொண்டு, பின்னால் வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை செல்பி எடுக்க முயன்றனர். அப்போது அதிவேகமாக வந்த நெல்லை - பிலாஸ்பூர் ரயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபரீத விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செல்பி எடுக்க எவ்வளவோ பொழுது போக்கு இடங்கள் உள்ளன, அதை விடுத்து வேகமாக வரும் ரெயிலுக்கு அருகிலோ, ஆபத்தான அருவியின் பாறையின் விழிம்பிலோ நின்று செல்ஃபி எடுப்பது சாவை தேடிச்செல்வதற்கு ஒப்பாகும் என்று எச்சரிக்கும் போலீசார், தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்கும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Comments