வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவில்லை எனக் கூறி ஆசிரியர் கடத்தல்.. 3 பேர் கைது..!

திருவாரூரில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தாத அரசு பள்ளி ஆசிரியரை காரில் கடத்தி அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக கந்து வட்டி கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பனங்குடி கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான சதீஷ் என்பவர் நெடுஞ்சேரி பகுதியை சேர்ந்த ரேவதி என்பவரிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்ச ரூபாய் கடனாக பெற்று, அதற்கு 6 மாத வட்டியாக 15 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லை எனக்கூறி கடந்த இரு ஆண்டுகளாக சதீஷ் கடன் நிலுவைத்தொகையை செலுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் தனக்கு தெரிந்த வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் ரேவதி கடந்த 20 ஆம் தேதி தம்மை தனியாக வரவழைத்து காரில் கடத்திச் சென்று, குடவாசலிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததாக சதீஷ் தமது குடும்பத்திடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் திருமண அரங்கில் இருந்து சதீஷை மீட்ட போலீசார், அங்கிருந்த 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரேவதி மற்றும் அவரது வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
Comments