மதுரை த.வெ.க மாநாட்டில் விஜய் பேசியது என்ன..?
Aug 21, 2025
BIG STORIES
திருமலா பால் நிறுவன மேலாளர் கொலையா..? கை கட்டப்பட்டு சடலம்..! ரூ.45 கோடி விவகாரம் போலீஸ் மறுப்பு
Jul 11, 2025 01:25 AM
243
திருமலா பால் நிறுவன மேலாளர் கொலையா..? கை கட்டப்பட்டு சடலம்..! ரூ.45 கோடி விவகாரம் போலீஸ் மறுப்பு
சென்னையில் பிரபல திருமலா பால் நிறுவனத்தில் 45 கோடி ரூபாய் மோசடி புகாருக்குள்ளான மேலாளர் நவீன் என்பவர் இரு கைகளும் பின்புறம் கட்டப்பட்டு தூக்கில் சடலமாக கிடந்த நிலையில் கொலை செய்யப்பட்டாரா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்
சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர் , முதல் தெருவில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது நவீன் பொல்லினேனி என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக கடந்த மூன்று வருடங்களாக பணிபுரிந்து வந்தார். வருடாந்திர கணக்கு சமர்ப்பிக்கும் போது நவீன் 45 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக திருமலா நிருவனத்தின் உயரதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள் கடந்த மாதம் 25 ந்தேதி கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜனிடமும், சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடமும் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் நவீன் அந்தப்பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான காலி இடத்தில் இருந்த குடிசைக்குள் கைகள் பின் புறமாக கட்டப்பட்டு, பச்சை நிற நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவர் ஓட்டிச்சென்ற கர்நாடக பதிவெண் கொண்ட தார் கார் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நவீன் சடலமாக தொங்கிய அந்த குடிசைக்குள் எந்த ஒரு சேரும் காணப்படவில்லை . அவர் எப்படி மேலே ஏறி தூக்கிட்டார் ? இரு கைகளையும் அவராக பின் புறம் கட்டிக் கொண்டு , குடிசையின் உள்பகுதியில் ஏறி எப்படி தூக்கிட்டு கொள்ள முடியும் ? என்ற கேள்விகள் எழுந்ததால் அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் தற்கொலை கடிதம் என்று நவீனின் மெயில் ஐடியில் இருந்து, திருமலா நிறுவன அதிகாரிகளுக்கும், உறவினரின் மெயில் ஐடிக்கும் மெயில் ஒன்று வரப்பெற்றது.
அதில் பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறியும் நிறுவன அதிகாரிகள் புகார் அளித்ததால் பயந்து தற்கொலை முடிவு எடுத்ததாக நவீன் குறிப்பிட்டது போன்ற வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன
தற்கொலைக்கு நிறுவனத்தின் அதிகாரி திராஜ் ஜா, முகம்மது வதூத் தான் காரணம் என்றும் மனிதவள இயக்குநர் நரேஷ், Lactalis India நிறுவன MD ஆண்டனி உள்ளிட்ட 5 பேர் தற்கொலைக்கு காரணம் என நவீன் குறிப்பிட்டது போன்ற தகவல்கள் அந்த மின்னஞ்சலில் உள்ளது
முறைகேடு செய்த தொகையில் 50%-ஐ திராஜ் ஜா கேட்டதாகவும், மறுத்ததால் தன்னை பழி வாங்கும் நோக்கில் அவர் செயல்பட்டதாகவும், முறைகேடு செய்த பணத்தில் முதலில் ரூ.5 கோடியை கொடுத்ததாகவும் 3 மாதங்களில் மீதியை திருப்பி கொடுப்பதாக கூறியதாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது
பணத்தை முழுவதும் கொடுத்துவிட்டு ராஜினாமா செய்ய முடிவு செய்த நிலையில், மிரட்டல்களால் தற்கொலை செய்வதாகவும் , தனது சடலத்தின் மீது பணத்தை வசூல் செய்து கொள்ளுங்கள் என்றும் அந்த மின்னஞ்சலில் வாசகங்கள் இடம் பெற்று உள்ளன
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை காவல்துறை அறிக்கை ஒன்ரை வெளியிட்டது. அதில் திருமலா பால் நிறுவனத்தில் நவீன் ரூ 40 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக கடந்த 25 ஆம் தேதி கொளத்தூர் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் மாதவரம் குற்றம் பிரிவு காவல் ஆய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்ட மனு விசாரிக்கபடவில்லை. அதே போல மத்திய குற்றபிரிவில் அளிக்கப்பட்ட புகாரும் விசாரிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 4 ந்தேதி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி நவீன் தாக்கல் செய்த மனு 7 ந்தேதி விசாரணைக்கு வந்து 11 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்றும் நவீன் மீது அளிக்கப்பட்ட மோசடி புகார் தொடர்பான வங்கி கணக்கு விவரங்களோ , ஆவணங்களோ சமர்பிக்கபடாததால் அந்த புகார் விசாரிக்கபடாமலே இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த வழக்கை போலீசார் விசாரிக்கவே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விவகாரத்தில் துணை ஆணையர் தொடர்பு பற்றி செய்தி வெளியானதால் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu