BIG STORIES
“எங்களுக்கு உயிர் முக்கியம்.. கம்பெனியை இழுத்து மூடுங்க” - சாயப்பட்டறை வெடிப்பு விபரீதம்..! பல வீடுகள் கழிவால் அழிந்த சோகம்
May 16, 2025 01:06 AM
1670
கடலூர் சிப்காட்டில் இயங்கி வரும் லாயல் சாயப்பட்டறையில் கழிவு நீர் சேகரிப்பு தொட்டி வெடித்த விபத்தில் ரசாயண கழிவு நீர் பாய்ந்து வீடுகள் சேதமடைந்த நிலையில், அமைதிப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது
கடலூர் சிப்காட் பகுதியில் இயங்கிவரும் லாயல் சாயப்பட்டறையில் அதிகாலை கழிவு நீர் சேகரிப்பு தொட்டி வெடித்து விபத்து ஏற்பட்டது. 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி வெடித்ததில் சிப்காட் சுவற்றையொட்டி அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த பல சின்னஞ்சிறிய குடிசை வீடுகளுக்குள் கரு நிற சாயக்கழிவு நீர் புகுந்து வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தது
வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தீயணைப்பு துறை ஊழியர்கள் மீட்டு கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். கிராமத்தில் ரசாயன கழிவுகள் சூழ்ந்து கொண்டதால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கண்ணெரிச்சல் மூச்சு திணறல் வாந்தி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்
இந்த விபத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர் காயமடைந்தனர், பலருக்கு வாந்தி மயக்கம் தலைசுற்றல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 35 பேர் வரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்துவதற்கு முன்பாகவே , இந்த விபத்து தொடர்பாக கடலூர் வட்டாட்சியர் மகேஷ் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரூபன்குமார் மற்றும் தொழிற்சாலை தரப்பினர் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காலையில் இருந்து மாலை வரை நீடித்தது இந்த பேச்சுவார்த்தை
அனைத்து துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தத நிலையில், மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்றால் எதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டது ? என்று அதிகாரிகளிடம் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டது. இதையடுத்து அமைதிப்பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே கடலூர் மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தின் மகனும் , மாவட்ட திமுக பொருளாளருமான எம் ஆர் கே பி கதிரவன் , மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்களை சந்தித்து சில பழங்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
சம்பந்தப்பட்ட சாயப்பட்டறை சிப்காட்டிற்குள் முறையான அனுமதி பெற்று சரியாக அமைக்கப்பட்டிருந்தாலும் , இந்த விபத்தினால் பலர் பாதிக்கப்பட்டதால் காவல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. விபத்திற்கு காரணமான சாயப்பட்டறை நிர்வாகம் மீது கடலூர் முது நகர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன்படி விபத்து எற்படுத்துதல், நோய் ஏற்படும் விபத்து , சுற்றுசூழல் பாதிப்பு, அஜாக்கிரதையாக நடத்தல், சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இரவில் அமைச்சர் சிவி கணேசன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu