முகப்பு
“பாதை இல்லை என்று சொல்லவேண்டியதுதானே? ” செல்ஃபோனை திருடிவிட்டு அகழியில் குதித்த திருடன் “காப்பாத்துங்க” என கதறல்!
Jun 29, 2025 12:33 PM
41
“பாதை இல்லை என்று சொல்லவேண்டியதுதானே?” செல்ஃபோனை திருடிவிட்டு அகழியில் குதித்த திருடன்
“அய்யோ.... எல்லா பக்கமும் ஓடிவர்றாய்ங்களே... ஆஹா ஒண்ணு கூடிட்டாங்கயா ஒண்ணு கூடிடாட்டாங்கயா...கடுகளவு கல்லு பட்டுதுக்கா இவ்வளவு பெரிய ஆயுதம்? ஒளியுறதுக்குக்கூட இடமில்லையே? அய்யோ எங்கிட்டு போனாலும் பள்ளமா இருக்கே சாமி... அய்யோ... குதிச்சிடுறா கைப்புள்ள...” என்கிற வின்னர் பட கைப்புள்ள வடிவேலுபோல, சுற்றுலா பயணியின் செல்ஃபோனை திருடியதால், பொதுமக்கள் துரத்தியதும், வேலூர் கோட்டையின் மேலே இருந்து அகழியில் குதித்த, கோழி என்கின்ற சரித்திர பதிவேடு குற்றவாளி கோபியின் கதறல் -உதறல்- ஓவர் ஆக் ஷன் காட்சிகள்தான் இவை...
அதுவும், ஆழம் குறைந்த இடத்தில் நின்றுகொண்டு, மூன்றாம் பிறை பட க்ளைமாக்ஸ் கமல்ஹாசனைப் போல, தண்ணீரில் தத்தளிப்பதாக, நீச்சலடித்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வீரர்களிடம் அவர் கொடுத்த ஓவர் ஆக் ஷன் தான், பார்ப்போரை டென்ஷன் அடைய வைத்தது.
“அவன் நின்னுக்கிட்டுத்தான் இருக்கான்... கொஞ்சநேரத்துக்கு முன்னாடி அந்த இடத்துல நடந்து போனான்...” என்று அந்த காட்சியை கண்டவர்கள், சொல்லிக்கொண்டிருக்க, கோழி கோபியோ, காலில் அடிபட்டதாக காலை தூக்கி தூக்கி காண்பித்துக்கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வீரர்களும் ஒரு நீண்ட கயிற்றை வீசி, கோழி கோபியை காப்பாற்ற சென்றபோது, மழை வெள்ள நேரங்களில் முழங்கால் அளவு தண்ணீர் இருக்கும் இடங்களில்கூட கீழே இறங்கி, நடந்து வராமல் அரசியல்வாதிகள் சிலர் படகுகளில் பயணித்து வருவார்களே, அப்படித்தான் அந்த இளைஞன் வருகிறார் என விமர்சிக்கப்பட்டார்.
செல்ஃபோனை திருடிக்கொண்டு ஓடி அகழியில் குதித்து, தப்பிக்கும்போது மாட்டிக்கொண்ட அந்த பரபரப்பான ரணகள சூழலில்கூட, தனது டி-ஷர்ட் கிழிந்துவிட்டதாக கோழி கோபி கூறியதுதான், பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
அகழியில் இருக்கும்போது, கால் அடிப்பட்டதாக கூறிய கோழி கோபி, காப்பாற்றப்பட்டு கரையேறியதும் கை அடிபட்டது போல் ஆக் ஷன் கொடுத்து, “சார்... ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போங்க சார்” என உதறல் எடுத்தபடி கதற ஆரம்பித்தார்.
“இப்போ என்ன அவார்டா கொடுக்கப்போறாங்க இருடா... டாக்டர் வந்துக்கிட்டிருக்காங்க இருடா” என்றபடி, சிகிச்சைக்கு அழைத்து சென்றனர், காவல்துறையினர்.
யார் இந்த கோழி கோபி? என்ன நடந்தது? அகழியில் குதிப்பதற்கு முன் நடந்தது இதுதான்...
வேலூர் மாவட்டம், வேலூர் விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கோழி என்கின்ற கோபி. இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படுகிறது.
29 ஆம் தேதி, வேலூர் கோட்டையில் சுற்றி பார்க்க வந்த, பொது மக்களிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓடியபோது, பொதுமக்கள் கோபியை துரத்தி உள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கோட்டையின் மேலே இருந்து அகழியில் குதித்துள்ளார்.
பின்னர், அகழியிலிருந்து என்னை காப்பாற்றுங்கள் என கதறி அலறியுள்ளார்.
உடனடியாக பொதுமக்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார், தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கோபியை அகழியில் இருந்து மீட்டனர்.
அப்போதுதான், இன்ஸ்டா இம்சை அரசன்களைவிட, கோழி கோபியின் ஓவர் ஆக் ஷன், டென்ஷனை வரவழைத்தது. கோழி கோபியை கோழி அமுக்குவதுபோல் அமுக்கி, வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், “தம்பி உன்னை ரவுடி வேலைக்கு தப்பா ஆள் எடுத்திருக்காங்க. நீ பன்ற ஹெவி பெர்ஃபாமன்ஸுக்கும் ஆக்டிங்குக்கும் இன்ஸ்டாவுல வீடியோ போட்டன்னு வை, ‘இன்ஸ்டா பிராப்ளம்’ திவாகரையே மிஞ்சிடுவ. அதுக்கப்புறம், நீ செல்ஃபோனை திருடி இப்படியெல்லாம் குதிக்கணும்ங்குற அவசியமே இல்ல. உன்னை தேடி செல்ஃபோன், கார் எல்லாம் வரும்.
பொழைக்க தெரியாத புள்ளையா இருக்கியே” என விமர்சித்துவருகிறார்கள், அவரது ஓவர் ஆக்டிங்கை நேரில் பார்த்து மிரண்டுபோன பொதுமக்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu