காதல் மனைவி குடும்பத்திற்கு எமனாய் வந்த சாதி மறுப்பு காதலன்.. 5 பேர் தீயில் கருகினர்..!
கடலூர் அருகே குடும்பத்தகராறில் உடல்மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்ற கணவனை மனைவி தடுத்த போது, எரிந்துக் கொண்டிருந்த அடுப்பில் பெட்ரோல் பட்டு தீ வீடு முழுவதும் பரவியதில் கணவன் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
சிதம்பரத்தைச் சேர்ந்த சற்குருவும், கடலூர் அருகிலுள்ள செல்லாங்குப்பத்தைச் சேர்ந்த தனலட்சுமியும் கடலூரிலுள்ள மருத்துவமனையில் ஒன்றாக பணிபுரிந்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தன்னை ஜாதி மறுப்பாளராக காட்டிக் கொண்ட சற்குரு, தனலட்சுமியை திருமணம் செய்துக் கொண்ட பிறகு, மதுபோதைக்கு அடிமையாகி ஒழுங்காக வேலைக்குச் செல்லவில்லையென கூறப்படுகிறது.
இதுவே குடும்ப பிரச்சனைக்கு காரணமாக இருந்துள்ள நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் செல்லாங்குப்பத்தில் வசித்து வந்த சகோதரி தமிழரசி வீட்டிற்கு தனது 9 மாத குழந்தை லக்சனுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனலட்சுமி சென்றார்.
விவாகரத்து குறித்து பேசி வந்த சற்குரு, அதற்கான பத்திரத்தில் கையெழுத்திட வேண்டுமென தனலட்சுமியை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில், இன்று காலையில் செல்லாங்குப்பம் சென்ற சற்குரு மீண்டும் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட வேண்டுமென வற்புறுத்தியதால் அதற்கு தனலட்சுமி மறுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சற்குரு வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது தனலட்சுமி பெட்ரோல் கேனை தட்டி விட்ட போது கேனிலிருந்த பெட்ரோல் வீடு முழுவதும் சிந்தியதோடு எரிந்து கொண்டிருந்த விறகு அடுப்பிலும் பட்டதால் உடனடியாக அந்த அறை முழுவதும் தீ பரவியதாக சொல்லப்படுகிறது.
வீட்டிலிருந்த தனலட்சுமி, அவரது அக்காள் தமிழரசி, மாமியார் செல்வி, குழந்தைகள் ஹாசினி, லக்சன் ஆகியோர் மீதும் தீ பற்றிக் கொண்டது.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவி செய்யத வந்த போதும் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை.
தகவலறிந்த, தீயணைப்புத்துறையினர் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று உடல்கருகி கிடந்த தமிழரசி, அவரது 4 மாத குழந்தை ஹாசினி, 9 மாத குழந்தை லக்சன் ஆகியோரை சடலமாக மீட்டனர்.
சற்குரு, தனலட்சுமி, மாமியார் செல்வி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சற்குரு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Comments