தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
30,31 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும், 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், குமரிக்கடல் பரப்பில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments