3-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல் - ஈரான் மோதல்
Jun 15, 2025
முகப்பு
75 ஆவணங்கள்; 29 சாட்சிகள்... 157 நாட்கள்...தமிழக அரசியலில் புயலை கிளப்பிய ‘பொல்லாத’ சேகரனின் வழக்கில் நடந்தது என்ன?
May 29, 2025 03:29 PM
269
புயலை கிளப்பிய ‘பொல்லாத’ சேகரனின் வழக்கில் நடந்தது என்ன?
அதிமுக ஆட்சிக்கு ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கு’ என்றால், திமுக ஆட்சிக்கு ‘அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு’ என்னும் அளவுக்கு, தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலை கிளப்பிய விவகாரத்தில், 157 நாட்களில் அதாவது 2025 மே 28 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகி மீண்டும் பரபரப்பை பற்றவைத்திருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர், 2024 டிசம்பர் 23 ஆம் தேதி, இரவு உணவுக்குப் பிறகு, தனது ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென வந்த அடையாளம் தெரியாத நபர், செல்ஃபோனில் வீடியோ எடுத்ததோடு, தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில், அந்த மாணவி புகார் அளித்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டையே அதிர்ச்சி அடையவைத்து, பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை, மாணவி அடையாளம் காட்டினார். இதையடுத்து, டிசம்பர் 25 ஆம் தேதி 37 வயது ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், கோட்டூர்புரத்தில் உள்ள நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவி, தன்னைத் துன்புறுத்திய நபர் செல்போனில் யாருடனோ பேசியதாகவும் அவரை 'சார்' என அழைத்ததாகவும் தனது புகாரில் கூறியிருந்தார். இதை வைத்து எதிர்க்கட்சிகள் "யார் அந்த சார்?" எனக் கேள்வியெழுப்ப ஆரம்பித்தன.
இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி அ.தி.மு.க. வழக்கறிஞர் வரலட்சுமி, பா.ஜ.க. வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து, டிசம்பர் 28 ஆம் தேதி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், கடந்த ஜனவரி 5 ஆம் தேதி உத்தரவிட்டார்.
வழக்கின் புலனாய்வு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், பிப்ரவரி 24 ஆம் தேதி சைதாப்பேட்டை ஒன்பதாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், ஞானசேகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு மார்ச் 7ஆம் தேதியன்று, சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஞானசேகரனுக்கு என வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாத நிலையில், சட்டப் பணிகள் குழுவின் சார்பில் அவருக்காக இரண்டு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
இதன்பிறகு, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை, மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அன்றைய தினமே அவர் மீதான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.
ஏப்ரல் 23 ஆம் தேதியன்று மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பாக சாட்சிகளின் விசாரணையை ஆரம்பித்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காவல்துறை தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மே 20 ஆம் தேதி முதல் மே 23 ஆம் தேதிவரை இரண்டு தரப்பிலும் தங்களுடைய இறுதி வாதங்களை முன் வைத்தனர். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கபட்டதால், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இரண்டு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் மே 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில்தான், ஞானசேகரன் மீது பதியப்பட்ட 11 பிரிவுகளிலும் அரசுத் தரப்பு வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, ஞானசேகரன் குற்றவாளிதான் என தீர்ப்பளித்த நீதிபதி எம். ராஜலட்சுமி, தண்டனை விவரங்கள் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஞானசேகரனோ `அப்பா இறந்துவிட்டதால் தாயை பராமரிக்க வேண்டும் என்பதால், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். தனக்கு 8 வது படிக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும், நீதிமன்றம் கருணை காட்ட வேண்டும்’ எனவும் கோரிக்கை வைத்து கதறியுள்ளார்.
ஆனால், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ, ``அரிதிலும் அரிதான இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும்.குற்றவாளிக்கு எந்த கருணையும், இரக்கமும் காட்ட கூடாது. அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில்தான், தண்டனை விவரம் ஜூன் -2 ஆம் தேதி அறிவிக்கப்படும் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu