RECENT NEWS

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

முகப்பு

“வடிவேலு சாருடன்...” ஹவுஸ் அரெஸ்ட்... நடிகை ஷோபனா மர்மம்... அக்கா ஆனந்தி; அதிர்ச்சித் தகவல்!

Apr 23, 2025 04:26 PM

1249

“வடிவேலு சாருடன்...” ஹவுஸ் அரெஸ்ட்... நடிகை ஷோபனா மர்மம்...
அக்கா ஆனந்தி; அதிர்ச்சித் தகவல்!

“வடிவேலு சாருடன்...” தொடரும் ஷோபனா மர்மம்... அக்கா ஆனந்தி; அதிர்ச்சித் தகவல்!

அன்று 2011, ஜனவரி-10 ஆம் தேதி, காலை நேரம்...
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஹவுசிங் போர்டு குடியிருப்பில் நகைச்சுவை நடிகை ஷோபனா, தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது, திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், தற்கொலை முயற்சியில் ஈடுபட நினைப்பவர்கள்கூட நடிகை ஷோபனா -வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகளைப் பார்த்தால், அந்த எண்ணத்தை கைவிட்டு, மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்தளவிற்கு, அவருடைய வாய்ஸ் மாடுலேஷன்களும் காமெடி பெர்ஃபாமன்ஸ்களும் இருக்கும்.

அதுவும், ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில், ஒரு பெண்ணின் இடுப்பை கிள்ளியதால், பஞ்சாயத்தில் கும்மாங்குத்துகளை வாங்கிவிட்டு, உடையை மாற்றிக்கொண்டு ஃப்ரெஷ்ஷாகவும் கெத்தாகவும் வீட்டை நோக்கி வரும் வடிவேலு, மனைவி பெயரை கூப்பிடுவதற்கு பதிலாக இடுப்பை கிள்ளிய அந்த பெண்ணின் பெயரான “குருவம்ம்ம்ம்ம்ம்மா...” என மாற்றி அழைத்துவிட்டு, பிறகு பதறிப்போய் “செல்லத்தாயீஈஈஈஈ...” என்றபடி உள்ளே வருவார். அந்த ‘செல்லத்தாயி’ கதாப்பாத்திரத்தில் வடிவேலுவுக்கு ஈக்குவலாக மெயிண்ட்டெய்ன் செய்து, நடித்த ஷோபனாவின் காமெடி பெர்ஃபாமன்ஸை, 19 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடியாது.

“என்னமா கீழ சத்தம்?” என்று கேட்டால், “பேச்சிக்கிட்டிருக்கேன் மாமா...” என்கிற வடிவேலு - ஷோபனா காட்சியின் டயலாக்கத்தைத்தான் இப்போதும் சொல்லி காமெடி அடித்துக்கொண்டிருக்கிறார்கள், மருமகன்கள் பலரும்! அதுமட்டுமல்ல, முத்த தினங்களில் ‘நகரம்’ பட வடிவேலு -ஷோபனா ‘ரத்த’க்காட்சிதான் மீம்ஸ்களாக வந்துகொண்டிருக்கின்றன.

‘விழுதுகள்’ சீரியலில் ஆரம்பித்து, பல்வேறு சின்னத்திரை சீரியல்களில், ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.வீ.சேகர் நகைச்சுவை மேடை நாடகங்கள் என நடித்துக்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரபல தொலைக்காட்சியில் வெண்ணிற ஆடைமூர்த்தியுடன் நடித்து ‘மீண்டும் மீண்டும்’ சிரிக்கவைத்தவர். இதனைத் தொடர்ந்து, மற்றொரு பிரபலத் தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சிகளால் செம லொள்ளு பண்ண, இன்னும் தமிழ் ரசிகர்களின் வீட்டிற்குள் நுழைந்தார், ஷோபனா. இதையெல்லாம் தாண்டி, வடிவேலுவுடன் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் ஆடிய காமெடி கதகளிதான், ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் பிரபலம் அடையவைத்தது.

 கோவை சரளாவுக்கு அடுத்தபடியாக, காமெடியில் வடிவேலுவுடன் செம்ம ஜோடியாக வலம் வர ஆரம்பித்தார். ‘நாயகியாகவோ, குணச்சித்திர நடிகையாகவோ வரவேண்டியவர்’ என பேசப்பட்டாலும் இவரது நகைச்சுவை திறமையால் உச்சத்துக்கு செல்ல ஆரம்பித்தார். இந்தநிலையில்தான், அவர் தனது வீட்டில் தூக்குபோட்டு உயிரை மாய்த்துக்கொண்டது, பல்வேறு வதந்திகளுடன் மர்மமாகவே தொடர்ந்து வருகிறது. நடிகை ஷோபனாவின், மரண மர்மம் குறித்து, அவரது அக்கா ஆனந்தி வெளியிட்ட தகவல்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அவர் கூறும்போது, “தங்கையின் மரணத்திலிருந்து இப்போதுவரை மீண்டு வரமுடியவில்லை. அவருடைய இழப்பு என்பது மிகப்பெரிய இழப்பு. அப்பா, அம்மாவுக்கு நாங்கள் இரண்டு பேர்தான். எனக்கு உடன் பிறந்த ஒரே தங்கை, ஷோபனாதான். அவரை, ஷோபா என்றுதான் அழைப்பேன். எந்த விஷயமாக இருந்தாலும் இரண்டு பேரும் தகவலை பகிர்ந்து கொள்வோம். எனக்கு ஷோபனா ஒரு தங்கையாக மட்டுமல்ல. தங்கைக்கு மேல். அதாவது, நல்லத் தோழி. அவர், இல்லாததால் மிகுந்த வேதனையாக உள்ளது. எல்லாவற்றையுமே எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ளமுடியாது. ஆனால், அவளிடம் மனம் விட்டு என்னால் பேசமுடியும், பகிர்ந்துகொள்ளமுடியும். ஆனால், அவள் என்னை விட்டு போனதிலிருந்து அதை நான்ரொம்பவே மிஸ் பன்றேன்” என கூறியவர், “ஏன், அவளுக்கு இப்படி நடந்தது? என்று இப்போதும் யோசித்துக்கொண்டே இருக்கிறேன்” என மன வருத்தத்தோடு பேசியுள்ளார்.

அக்கா ஆனந்திக்கு பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, எந்த சூழலிலும் நான் உனக்கு இருக்கேன், கவலைப்படாதேக்கா என துணையாக இருந்துள்ளார், ஷோபனா. ஏதாவது, வேண்டும் என ஆனந்தி கேட்டால், உடனே நேரில் வந்து, வாங்கிக்கொடுத்துவிட்டு செல்வாராம். மகள் திருமணத்துக்குக்கூட ‘நான் இருக்கிறேன், கவலைப்படாதே அக்கா’ என நம்பிக்கையூட்டியிருக்கிறார். சொந்தபந்தங்கள் மத்தியில் பெரிதாக கனெக் ஷன் இல்லை. அம்மாவுக்கு அடுத்தபடியாக தனக்கு இன்னொரு அம்மாவாக இருந்தவர் தனது தங்கை ஷோபனா என குறிப்பிட்டுள்ளவர், ‘ஷோபனா மிகவும் போல்டானவர். என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என தைரியமாக இருப்பவர்’ என கூறியுள்ளார், அக்கா ஆனந்தி.

அப்பா ஜெயராமன், அம்மா வைரம் ராணி. இருவருமே ட்ராமா ஆர்டிஸ்ட்தான். பெரியார் நாடக மன்றத்தில்தான் அவரது அம்மா இருந்துள்ளார். சிவாஜி, ஆர்.எஸ். மனோகர் ஆகியோரின் நாடகங்களில் நடித்துள்ளார், ஷோபனாவின் தாய் வைரம் ராணி என கூறப்படுகிறது.

அதுவும், தங்கை ஷோபனாவுக்கு முன் திரைத்துறைக்குள் நாயகியாக எண்ட்ரி ஆனது ஆனந்திதான். ‘ஒரு ஊமையின் ராகம்’ படத்தில் நடித்து, அப்படத்தின் நாயகனையே திருமணம் செய்துகொண்டார். சினிமாவில் பெரிதாக ஜெயிக்கவேண்டும் என எண்ட்ரி ஆனவருக்கு, திருமணம் எண்ட் கார்டு போட்டுவிட்டது, என கூறப்படுகிறது.

ஆனால், சினிமா ஆசை எதுவும் இல்லாமல் ‘திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டும்’ என அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்த ஷோபனாவை, திரைத்துறை தானாக இழுத்துக்கொண்டது என கூறுகிறார், அவரது அக்கா ஆனந்தி. அதாவது, தாங்கள் விரும்பியதற்கு எதிராக, இரண்டு பேருடைய வாழ்க்கையுமே அப்படியே தலைகீழாக மாறிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

அதுவும், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் வாய்ப்பு ஆனந்திக்குத்தான் முதலில் வந்ததாம்! ஆனால், ஏற்கனவே ஒரு படத்தில், அக்ரிமெண்டில் சைன்போட்டிருந்ததால் நடிக்கமுடியாமல் போய்விட்டதாம். அதற்குப்பிறகுதான் கனகா அந்த படத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டாராம்.

தங்கை ஷோபனா, சின்னத்திரை சீரியல்கள், காமெடி சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்தபோது, நடிகர் சந்தானம் ‘எப்படி இப்படியெல்லாம் டயலாக் பேசுகிறீர்கள்? இந்த டயலாக் ரொம்ப கஷ்டமாச்சே?’ என்றெல்லாம் கூறி பாராட்டியுள்ளாராம்.

அதேபோல், நகைச்சுவை ஷோக்களின்போது, ‘யோகிபாவுவை பலரும் என்ன இப்படி இருக்கிறார்?’ என்று கூறும்போது, ‘அவரை அப்படியெல்லாம் சொல்லாதீங்க. ஒருநாள் இல்லை என்றாலும், ஒருநாள் அவரோட கால்ஷீட்டுக்காக நிற்கவேண்டியிருக்கும்’ என ஷோபனா கூறினாராம்.

பிரபல தொலைக்காட்சிகளில் காமெடி காட்சிகளில் நடிக்க ஆரம்பித்ததும், பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. வடிவேலுவுடன் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதுவும் ஸ்கிரிப்ட்டில் இருப்பதை தாண்டி ஷூட்டிங் ஸ்பாட்டில் காமெடி பெர்ஃபாமன்ஸ் செய்து கலக்கிவிடுகிறவர், வடிவேலு. அதனால், அவர் திடீரென சொல்லும் டயலாக்கிற்கு ஏற்றபடி நடிக்கவேண்டியிருக்கும். அதற்கு, எப்படியெல்லாம் நடிக்கவேண்டும் என கோவை சரளாதான் ஐடியா கொடுத்தாராம்.

“காமெடியில் அவரை மிஞ்சவே முடியாது. வடிவேலு- காம்பினேஷன் காமெடி சரியாக செட் ஆகிவிட்டது. இரண்டு பேரும் பேசி வைத்துக்கொண்டு ஆன் தி ஸ்பாட்டில் காமெடியில் கலக்க ஆரம்பித்துள்ளார்கள்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார், ஷோபனாவின் அக்கா ஆனந்தி.

‘காஞ்சனா’ படத்தில் கோவை சரளாவுடன் மருமகளாக நடிக்க ராகவா லாரன்ஸ், ஷோபனாவுக்குத்தான் வாய்ப்பை கொடுத்துள்ளார். ஆனால், அப்போதுதான் ஷோபனாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், நடிக்கமுடியாமல் அதற்குபதிலாக தேவதர்ஷினி நடித்தார்’ என கூறியுள்ளார், ஷோபனாவின் அக்கா ஆனந்தி. மேலும், அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பதையும் கூறியுள்ளார்.

அதாவது, “வடிவேல் சாருடன் அதிகமாக நடித்ததால், வடிவேல் சார் ஆர்டிஸ்ட் என பெயர் வந்தது. இதனால், ‘குரு என் ஆளு’ படத்தில் மட்டும்தான் விவேக் சாருடன் அவளால் நடிக்க முடிந்தது. அதுவும் மற்றவர்களுடன் நடிப்பதற்கு வடிவேல் சார் எதுவுமே சொல்லவில்லை. ஆனாலும் அப்படியொரு பெயர் வந்துவிட்டது.

ஷோபனா, முருக பக்தை. செவ்வாய் கிழமை வந்துவிட்டால், வீட்டை கழுவி சுத்தப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்துவாள். தெய்வபக்தி அதிகம். பாண்டிச்சேரி அன்னையை கும்பிடுவாள். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு, சனிக்கிழமை பாண்டிச்சேரி அன்னைக்காக விருதம் இருப்பாள். திடீரென ராகவேந்திராவுக்கும் விரதம் இருப்பாள். ஒருவர் ஒன்றை சொல்லிவிட்டால் அதை அப்படியே பிடித்துக்கொள்வாள். இதனால், தொடர்ந்து விரதம் இருப்பதாகக் கூறி சாப்பிடாமல் இருந்ததால் வயிற்றிலும் தொண்டையிலும் புண் ஏற்பட்டது. இதனால், ஷோபனாவின் குரல் ஒருமாதிரி ஆகிவிட்டது. இதனால், ‘சிறுத்தை’ யிலும் தொடர்ந்து நடிக்கமுடியவில்லை. ‘எம்டன் மகன்’- படத்திலும் முழுமையாக நடிக்கமுடியவில்லை.

ஆனால், அவள் இறந்துபோனதால், என்னன்னவோ வதந்திகளைப் பரப்பிவிட்டார்கள். வடிவேல் சாருடன் சேர்த்துவைத்து பேசினார்கள். மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒரு ஆர்டிஸ்ட் என்றால் அப்படித்தான் கேவலபப்டுத்தி பேசுவார்களா? அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காதா? நோய், நொடியெல்லாம் வராதா? என்று வேதனையில் இருந்தோம்.

‘அப்படித்தான் பேசுவாங்க. அதையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது’ எனக்கூறி அம்மாதான்ஆறுதல் படுத்தினார். ஆனால், ஒருகட்டத்தில் அம்மாவும் வெளியில் போகமுடியாத சூழலில் தவித்தார். ‘எதனால், இப்படி ஆனது? ஏன் அப்படி செய்தாள்? நீங்கள் என்ன சொன்னீங்க?’ என பலரும் கேட்க ஆரம்பித்ததும், அம்மாவும் மிகவும் அப்செட் ஆகிவிட்டார். கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி ஆனதுபோல் வீட்டிற்குள்ளேயே முடங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

அம்மா, அந்த வீட்டிலிருந்து என் வீட்டுக்கு வருவார், பிறகு திரும்பி செல்வார். அம்மா, தங்கை ஷோபனா இறந்த அதே வீட்டில் தனியாகத்தான்வாழ்ந்தார். ‘ஷோபனா இருந்த இடம். நான் இங்கேயே இருந்துகொள்கிறேன்’ என கூறிவிட்டார். ‘ஷோபனா அங்கே நிற்கிறது, இங்கே நிற்குது’ என புரளியை கிளப்பிவிட்டார்கள். அதனால், குடியிருப்பிலுள்ளவர்கள் அந்தப்பக்கம்கூட வரவே அச்சப்பட்டார்கள்.
ஆனால், அம்மா இறக்கும்வரை ‘என் பொண்ணு என்கூட துணையா இருக்கிறாள்’ எனச் சொல்லிக்கொண்டு அங்கேயே இருந்தார்.

ஷோபனா இரண்டு மூன்று வருடங்களாக விரதம் இருந்துள்ளார். அதுமட்டுமல்ல, டீ அதிகமா குடிப்பார்.தொடர்ந்து சாப்பிடாமல் விரதம் இருந்ததால், வயிறு சுறுங்கிப்போய் ஷோபனாவால் சாப்பிடமுடியாமல் போய்விட்டது. கடைசி காலங்களில் எந்த உணவும் சாப்பிட முடியவில்லை. அல்சர் மாதிரியும் ஃபார்ம் ஆகிவிட்டது. ஜெலுசல் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இதனால், அவளுக்கு பயங்கர கோபம் வரும். . ‘பட்டினி இருந்து... பட்டினி இருந்து இப்போ ட்ரிப்ஸ் ஏத்துற அளவுக்கு வந்துட்டியே’ என டாக்டரும் திட்டின்னார். ‘டிரிப்ஸ் வேண்டாம். டேப்ளட் மட்டும் கொடுங்க’ எனக்கூறிவிட்டாள், ஷோபனா.

வயிறு புண்ணாகிவிட்டதால் அவளது குரலும் மாறிவிட்டது. அதனால், டப்பிங்கிற்குக்கூட போகமுடியவில்லை. உடம்பு முடியாத சூழலிலும் ஒய்.ஜி. மகேந்திரன் சாரோட ஸ்டேஜ் புரோகிராம் எல்லாம் செய்துகொண்டுதான் இருந்தாள். அங்கேயும் சாப்பிடமுடியாமல் சோர்வாகி பாதியிலேயே வந்துவிடுவாள்.

இதோடு, சிக்குன் குன்யாவும் வந்ததால் மூட்டுவலியால் அவதிப்பட்டாள். என் மகனையும் மகளையும் அழைத்து உடம்பின் மீது ஏறி மிதிக்கச்சொல்லி கேட்பாள். ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கவேண்டும் என்றாலும் எங்களை அழைப்பாள். சிக்குன் குன்யா வந்ததிலிருந்து எனக்கு ஏதோ ஆகிவிட்டது என சொல்லிக்கொண்டே இருப்பாள். இந்தநிலையில்தான், இப்படியொரு முடிவை எடுத்துவிட்டாள்” என கூறியுள்ளார், ஷோபனாவின் அக்கா ஆனந்தி.


‘அதிகமாக விரதம் இருப்பது, டீ அதிகமாக குடிப்பது, சிக்குன் குன்யா பாதிப்பு என உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் அதற்கான சிகிச்சைகளும் மருத்துவ வழிகளும் நிறையவே இருக்கின்றன. அப்படியிருக்க ‘போல்டான, எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியசாலியான, நகைச்சுவை உணர்வுகொண்ட ஷோபனாவின் உயிர் போவதற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லையே?’ என்று அவரது ரசிகர்கள், இன்னும் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பிக்கொண்டிருப்பதால், மர்மமாகவேதான் தொடர்ந்துகொண்டு இருக்கிறது, ஷோபனாவின் தற்கொலை மரணம்!

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies