சென்னை விமான நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி

சென்னை விமானநிலையத்தில் இரண்டாயிரத்து 467 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விமான முனையத்தின் முதல் பகுதி கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை சனிக்கிழமை திறந்து வைக்கிறார்.
சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு முனையத்தையும் சர்வதேச முனையத்தையும் இணைத்து புதிய நவீன முனையமாக அமைக்கும் பணி கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரு கட்டங்களாக பணிகள் நடைபெறும் நிலையில் முதல் கட்டப் பணி நிறைவடைந்து திறக்கப்படுகிறது.
தற்போது திறக்கப்படும் இந்த புதிய முனையத்தில் குடியுரிமை சோதனை, சுங்கச்சோதனை ஆகியவைகளுக்கான விசாலமான கூடங்கள், கூடுதல் கவுன்ட்டர்கள், விவிஐபிகளுக்காக ஓய்விடங்கள், நவீன முறையிலான பயணிகள் தங்கும் அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பயணிகளுக்கான சோதனைகளை விரைந்து முடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முனையத்தில் தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பெருமைகளை பிரதிபலிக்கும்படி, வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட பணிகளும் முடிந்த பிறகு உள்நாட்டு முனையமும், சர்வதேச முனையமும் ஒருங்கிணைந்த முனையத்தில் இணைக்கப்பட உள்ளன.
Comments