முகப்பு
தனிப் படையா அடியாள் படையா..? டி. எஸ். பி மீது என்ன நடவடிக்கை ? 5 போலீசார் கைது பின்னணி
Jul 01, 2025 10:26 AM
211
தனிப் படையா அடியாள் படையா..? டி. எஸ். பி மீது என்ன நடவடிக்கை ?
திருபுவனத்தில் திருட்டு தொடர்பான விசாரணையில் இளைஞர் அஜித்குமாரை அடித்து கொலை செய்ததாக ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாருக்காக நடத்தப்பட்டது இந்த தாக்குதல் ? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு ..
திருபுவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக இருந்தவர் 25 வயது இளைஞர் அஜித்குமார்.
சம்பவத்தன்று இந்த கோவிலுக்கு சாமி கும்பிட வந்த மருத்துவர் நிக்கி என்பவர் காரில் இருந்து 9 1/2 சவரன் நகைகள் களவு போனது.
அந்த நகைகளை கண்டுபிடிப்பதற்காக திருபுவனம் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தால் அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட தனிப்படை போலீசார், காவலாளி அஜித் குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
தனிப்படை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறி அப்பகுதி மக்கள் உறவினர்கள் கடும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக ஆறு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் நேரடியாக சம்பவ இடங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது அஜித்குமாரை அடித்துக் கொன்றதாக புகார் தெரிவித்த மக்கள் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்
இதன் தொடர்ச்சியாக அஜித்குமார் மர்ம மரண வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.
அஜித் குமாரை அடித்துக் கொலை செய்ததாக குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து பேரையும் கொலை வழக்கில் திருபுவனம் போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தன்று போலீசார் நடத்திய கெடுபிடி விசாரணை குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சம்பவத்தன்று ஒன்பதரை சவரன் நகை களவு போனதாக நிகிதா என்பவர் சென்னையில் செல்வாக்கு மிக்க ஒருவரிடம் பேசியதாக கூறப்படுகிறது இதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து டிஎஸ்பி சண்முகசுந்தரத்திற்கு நகையை கண்டுபிடித்து கொடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
உடனடியாக சண்முகசுந்தரம் தனது கட்டுப்பாட்டில் உள்ள குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை அனுப்பி இந்த நகை திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து இந்த ஐந்து காவலர்களும் இளைஞர்களும் அஜித் குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்று இருக்கின்றனர்.
முதலில் திருபுவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அங்கு வைத்து சரமாரியாக தாக்கியதால் அந்த காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், வேறு இடம் கொண்டு செல்ல கூறியதாக கூறப்படுகின்றது.
அஜித்குமார் நண்பர்கள் அருண்குமார், நவீன்குமார், லோகேஸ்வரன் , ஆகியோரையும் அழைத்து விசாரணை என்ற பெயரில் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதற்குப் பின்னரும் திருடப்பட்ட நகை தொடர்பாக எந்த விவரமும் தெரிய வராத நிலையில் ஒரு கட்டத்தில் தனிப்படை போலீசாரின் தாக்குதலை சமாளிக்க முடியாத அஜித் தான் மடப்புரம் கோவிலுக்கு பின்பக்கம் உள்ள அலுவலகத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் நகையை ஒளித்து வைத்திருப்பதாக தெரிவித்ததாகவும் அதனால் தாங்கள் அஜித்குமாரை அங்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது
அங்கு சென்ற பின்னர் நகை எங்கே என்று கேட்டபோது அடி தாங்க முடியாமல் தான் அப்படி கூறியதாக அஜித் குமார் தெரிவித்திருக்கிறார். உண்மையில் தான் எந்த நகையையும் திருடவில்லை என்று கதறி அழுத்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த தனிப்படை போலீசார் கையில் கிடைத்த பிளாஸ்டிக் பைப் மற்றும் இரும்பு கம்பிகளால் அவரை கடுமையாக தாக்கியதாகவும் அப்போது அவர் அவரது அலறல் சத்தம் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்ததாகவும் கூறப்படுகிறது.
அஜித்குமார் அலறல் சத்தத்தை தாங்கள் கேட்டதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
அவர் கடுமையான காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அவரை அவசர அவசரமாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் தனிப்படை போலீசார் சேர்த்துள்ளனர்.
அவர் உயிரிழந்ததும் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்திருக்கிறது.
ஒரு தவறை மறைக்க பல தவறுகளை அடுத்தடுத்து செய்ததால் இந்த தனிப்படை காவல்துறையினர், திருபுவனம் போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஒன்பதரை சவரன் நகை திருட்டு தொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் கடுமையாக விசாரிக்க உத்தரவிட்டதாக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் அவருக்கு மேல் உள்ள அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையின் கண்டனத்தை தொடர்ந்து டி.எஸ்.பி சண்முக சுந்தரத்தை சஸ்பெண்டு செய்து உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu