வாங்க சார்.. கே.எம்.சி.எச் போவோம்.. நான் குடிக்கலன்னு நிரூபிக்கிறேன்.. போலியான ப்ரீத் அனலைசர்..! அம்பலப்படுத்திய வாகன ஓட்டி..!
சென்னை ராயப்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் வாகன சோதனையின் போது போலியான ப்ரீத் அனலைசரை வைத்து வாகன ஓட்டிகளிடம் குடித்திருப்பதாக கூறி போலீசார் அபராதம் வசூலிக்க முயன்றதாக வாகன ஓட்டி ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த ராயப்பேட்டை சட்டம் ஒழுங்கு போலீசார், தீபக்கின் வாகனத்தை மடக்கி அவர் மது அருந்தியுள்ளாரா? என ப்ரீத் அனலைசர் இயந்திரத்தில் சோதனை செய்துள்ளனர்.
அப்போது தீபக் மது அருந்தியிருப்பதாகவும், தீபக்கின் உடலில் 45 சதவிகிதம் ஆல்கஹால் இருப்பதாக மெஷின் கூறுவதாக போலீசார் கூறியுள்ளனர்.
குடிப்பழக்கமே இல்லாத தீபக் இதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் தனக்கு குடிப்பழக்கம் இல்லை எனவும், உங்களுடைய இயந்திரம் கோளாறாக உள்ளது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதை வைத்து தான் வழக்கு போடுகிறோம். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக 1000 வழக்கு பதிவு செய்ய வேண்டும்... எனவே ஆல்கஹால் பதிவு இருந்த ரசீதில் கையெழுத்திடுங்கள் என போலீசார் வற்புறுத்தினர்.
தொடர்ந்து தான் குடிக்கவில்லை என உறுதியாக கூறிய தீபக், போலீசாரை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள், ரத்தைத்தை எடுத்து பரிசோதித்து பாருங்கள் , வாங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போகலாம் என அழைத்தார்
வாக்குவாதம் நீண்டு கொண்டே சென்றதால், போலீசார் வாகனத்தில் இருந்த மற்றொரு ப்ரீத் அனலைசர் இயந்திரத்தை எடுத்து வந்து, தீபக்கை ஊதச்சொல்லி 2 முறை சோதனை செய்தனர்.
அந்த 2 முறையும் தீபக் மது அருந்தவில்லை, அவருடைய உடலில் 0 அளவு ஆல்கஹால் இருப்பதாக வந்துள்ளது. அதன்பிறகு தீபக்கை போலீசார் விடுவித்துள்ளனர்.
குடித்து வாகனம் ஓட்டுபவர்களையும், குற்ற செயலில் ஈடுபடுபவர்களையும் விட்டுவிட்டு 1000 வழக்கு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக பழுதான இயந்திரத்தை வைத்து சோதனை செய்து பொய் வழக்கு போடும் பணியில் ஈடுபடுவது குறித்தும், குடிப்பழக்கம் இல்லாத தீபக்கிடம் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதை ஒப்பு கொள்ளுங்கள் என போலீசார் வற்புறுத்தியது நியாயமா ? என்று தீபக் வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்தார்
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரிக்கவும் , ப்ரீத் அனலைசர் மெஷினை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments