இந்தியா
பத்திரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா..! புன்னகைத்தபடி பூமியில் தடம் பதித்தார்
Jul 15, 2025 01:04 PM
67
பத்திரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா..! புன்னகைத்தபடி பூமியில் தடம் பதித்தார்
அமெரிக்காவின் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்சியம்-4 திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஜூன் 26ஆம் தேதியன்று பயணித்தார்.
சுக்லாவுடன் அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயிர்களின் வளர்ச்சியை ஆய்வு செய்வதற்காக சுபான்ஷூ சுக்லா பூமியில் இருந்து பாசிப்பயறு மற்றும் வெந்தயக்கீரை விதைகள் எடுத்துச் சென்றார்.
விண்வெளி நிலையத்தில் அந்த விதைகளை முளைக்க வைத்து தினமும் ஆய்வு மேற்கொண்டார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடைபெற்ற 60 அறிவியல் ஆய்வுகளில் சுபான்ஷு சுக்லா 7 முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த விண்வெளிப் பயணத்தின்போது 'ஆக்சியம்-4' குழுவினர் பூமியை 288 முறை சுற்றி வந்தனர்.
சுமார் 433 மணி நேரம் அங்கு தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், தங்களது ஆய்வுகளை முடித்துக்கொண்டு டிராகன் விண்கலம் மூலம் திங்கட்கிழமை மாலை பூமியை நோக்கிப் புறப்பட்டனர்.
திட்டமிடப்பட்டதற்கு 10 நிமிடங்கள் தாமதமாக இந்திய நேரப்படி, திங்களன்று மாலை 4.45 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் தனியாக பிரிந்து புறப்பட்டது.
சுமார் 22 மணி நேரம் பயணித்த டிராகன் விண்கலம் பிற்பகல் 3 மணியளவில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.
மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் வேகத்தில் பயணித்த விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு பாராசூட் உதவியுடன் அமெரிக்காவின் சான் டியாகோ அருகே கடலில் இறக்கப்பட்டது.
பின்னர், டிராகன் விண்கலம் கயிறுகளை கட்டி கப்பலில் ஏற்றப்பட்டது. அதில் விண்கலம் பாதுகாப்பாக ஏற்றப்பட்ட பின்னர் ஒருவர் பின் ஒருவராக விண்வெளி வீரர்கள் வெளியே வந்தனர்.
இந்திய வீரர் சுபான்ஷு புன்னகைத்தபடி டிராகன் விண்கலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே வந்தார்.
இதையடுத்து சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பூமியின் ஈர்ப்பு விசைக்கு மீண்டும் பழகுவதற்காக, 7 நாள்கள் சிறப்பு சிகிச்சை மையத்தில் அவர்கள் தங்கியிருப்பார்கள் என கூறப்படுகிறது.
மனிதனை விண்வெளிக்கும் அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு அனுபவ ரீதியாக உதவும் வகையில் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
1984ம் ஆண்டு ராகேஷ் சர்மாவின் விண்வெளி பயணத்திற்குப் பிறகு, இந்தியாவை சேர்ந்த ஒருவர் விண்வெளிக்கு சென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சுபான்ஷு சுக்லா பத்திரமாக பூமிக்கு திரும்பியதை அடுத்து அவரது தாய் மகிழ்ச்சி பெருக்கில் ஆனந்த கண்ணீர் விட்டார்.
மேலும், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் கேக் வெட்டி சுபான்ஷு சுக்லாவின் குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பியதை அடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu