முகப்பு
வந்தாச்சி ‘பெஞ்ச்’ புரட்சி! இனி No கடைசி பெஞ்ச்.. மாற்றத்தை உருவாக்கிய திரைப்படம்..
Jul 13, 2025 04:38 AM
47
இனி No கடைசி பெஞ்ச்.. மாற்றத்தை உருவாக்கிய திரைப்படம்
அனைத்து பள்ளி வகுப்பறைகளிலும் ‘ப’ வடிவ (U-shape) இருக்கை வசதியை அமல்படுத்துமாறு தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கேரளா மற்றும் பஞ்சாப்பை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்த ‘ப’ வடிவ முறை இருக்கை வசதி ஏன் அறிவுத்தப்பட்டுள்ளது? அதற்கு என்ன காரணம் விரிவாக பார்க்கலாம்..
ஒரு திரைப்படம் பொழுதுபோக்கை தாண்டி என்ன செய்ய முடியும்? என்று நம்மில் பலருக்கும் கேள்வி எழலாம்.. ஆனால், நல்ல திரைப்படங்கள் பல நேரங்களில், சொல்லாமல் பல சமூக மாற்றங்களுக்கு வித்திடும். அப்படியான ஒரு மாற்றம்தான், கேரள, பஞ்சாப் பள்ளிகளைத் தொடங்கி, தற்போது தமிழ்நாடு வரை எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது.
பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டு மூன்று வரிசைகளாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த இருக்கை வரிசைகளில், முதல் வரிசையில் அமரும் மாணவர்களை படிப்பாளி என்றும், கடைசி வரிசையை ‘மாப்பிள்ளை பெஞ்ச்” என்றும் அங்கு அமரும் மாணவர்களை சேட்டைக்காரர்கள், என்றும் விமர்சிக்கப்பட்டே நமது பொதுபுத்தியில் பதிந்துவிட்டது.
இத்தகைய வரிசை முறை மாணவர்கள் மத்தியில், வேறுபாடுகளை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் அதனை மாற்றும் நோக்கத்துடன், அரை வட்ட வடிவில் மாணவர்கள் இருக்கை அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய மலையாளத் திரைப்படம் தான்‘ஸ்தனார்த்தி ஸ்ரீகுட்டன்’ (Sthanarthi Sreekuttan).
அரைவட்ட வடிவில் இருக்கைகள் போடப்பட்ட வகுப்பறையில், ஆசிரியர் நடுவில் நின்று அனைத்து மாணவர்களையும் நேரடியாக பார்த்து பாடம் நடத்துவார் என்பது, இந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்தாகும். இப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி சமூகப் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம்..
இந்த படம் வெளியானதிலிருந்து, மாணவர்களின் இருக்கை முறை தொடர்பான அதன் கருத்துக்கு வரவேற்பு கிடைத்துவருகிறது. அதன்படி இதுவரை கேரளாவில் 6 பள்ளிகளில் மாணவர்கள் இருக்கை முறை அரைவட்ட வடிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது, வகுப்பறைகளில் கடைசி பெஞ்ச் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது பள்ளி மாணாக்கர் மத்தியில் உளவியல் ரீதியாக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பல்வேறு பள்ளிகளிலும் இது ட்ரெண்டாகிறது. அதைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் கூட, தனது வகுப்பறையில் அரைவட்ட இருக்கைகள் அமல்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் இந்த இருக்கை முறை அறிமுகமாக உள்ளது. மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையிலும், ஆசிரியர்-மாணவர் இடையேயான தொடர்பை ஊக்குவிக்கும் வகையிலும், வகுப்பறைகளில் ‘ப’ வடிவ (U-shape) இருக்கை வசதியை அமல்படுத்துமாறு பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம், ஒவ்வொரு மாணவரும் பாடம் நடத்தும் பலகையையும், ஆசிரியரையும் தெளிவாகப் பார்க்க முடியும். மேலும், ஆசிரியர் அனைத்து மாணவர்களுடனும் எளிதாக கண் தொடர்பு கொள்ள முடியும் என கூறப்படுகிறது. ‘ப’ வடிவ அமைப்பு கலந்துரையாடல்கள், கேள்வி-பதில் அமர்வுகள் மற்றும் சகாக்களின் கற்றலை ஊக்குவிக்கிறது. மாணவர்கள் ஒருவரையொருவர் சிறப்பாகக் காணவும் கேட்கவும் முடிவதால், ஒத்துழைப்புக்கு இது துணைபுரிகிறது.
மேலும் ஆசிரியர்கள் ‘ப’ வடிவத்தின் மையப்பகுதிக்குள் இருப்பதால், ஆசிரியர்கள் எளிமையாக கற்பிக்கவும், இதனால் அனைத்து மாணவர்களையும் எளிதாகக் கண்காணிக்கவும் உதவுகிறது. இதனால் மாணவர்கள் கூடுதல் ஈடுபாட்டுடனும், தனிமைப்படுத்தப்படாமல் இருப்பார்கள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பக்க வாட்டில் போடப்பட்ட பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு கழுத்துவலியை கொண்டு வரும் என்றும் கரும்பலகையை கவனிப்பதில் சிக்கலை உருவாக்கும் என்றும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu