தமிழ்நாடு
கண்ணீரே வழித்துணையா…நின்றேனே இது விதியா…எல்லாமே தெரிந்தவன் நீ… காப்பாற்ற மனம் இல்லையா?
Jul 08, 2025 05:53 AM
120
கண்ணீரே வழித்துணையா…நின்றேனே இது விதியா…எல்லாமே தெரிந்தவன் நீ… காப்பாற்ற மனம் இல்லையா?
"கண்ணீரே வழித்துணையா…நின்றேனே இது விதியா…எல்லாமே தெரிந்தவன் நீ… காப்பாற்ற மனம் இல்லையா?" என்பதுபோல்தான், ஓடியாடி விளையாட வேண்டிய வயதில், நிற்கக்கூட முடியாத அந்த இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்துகொண்டு, நிர்க்கதியாய் நின்றுகொண்டிருக்கிறார்கள், இந்த பரிதாப தம்பதியர்...
நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால், அந்த குழந்தை உருண்டு பிரண்டு, தவழ்ந்து தாவி, தத்தி தத்தி நடந்து... ஓடியாடி விளையாடும்வரை பெற்றோர் கண்ணிமைக்காமல் தூக்கிவைத்துக்கொண்டு பார்த்துக்கொள்ளவேண்டியிருக்கும். நன்றாக நடக்க ஆரம்பித்து ஓடியாடி விளையாடும் அந்த இரண்டு வருடங்கள்வரை பெற்றோர்கள் தூக்கிவைத்துக்கொண்டு, சுமந்தபடியே இருக்கவேண்டும். ஒரு பக்கமாக சுகமாக இருந்தாலும் மறுபக்கம், பலருக்கு சுமையாகவும் இருக்கும். அதற்கே, பல பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகவேண்டிய சூழல்.
அப்படியிருக்க, எலும்பு பிரச்சனைகளோடு பிறந்து 11 ஆண்டுகளாக, எழுந்து நடக்கமுடியாமல் அந்த குழந்தையை தூக்கி சுமந்துகொண்டே இருக்கவேண்டும் என்றால் எப்படியிருக்கும்? முதல் குழந்தைதான் இப்படி என்றால், இரண்டாவது குழந்தையும் அதேபோன்ற பிரச்சனையில் பிறந்து, 7 வருடங்களாக தூக்கி சுமக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், எப்படி இருக்கும்?
சாப்பாடு கூட சாப்பிட முடியாது. அவர்களால் தண்ணீர்கூட எடுத்து குடிக்க முடியாது. கழிப்பறைக்குக்கூட பெற்றோர்கள்தான் கொண்டு சென்று அமரவைக்கவேண்டும். படுக்கையில் படுக்கவைப்பதுகூட பெற்றோர்கள்தான் செய்யவேண்டிய நிலை எனக்கூறி இதயம் கனக்கவைக்கிறார்கள், இந்த தம்பதியர்.
கரூர் மாவட்டம் மணவாடியை அடுத்த மருதம்பட்டி காலனியில் வசிப்பவர்கள் முருகன், முத்துலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு, திருமணமாகி 11 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். இந்த, 2 குழந்தைகளுக்கும் பிறந்த சில மாதங்களில் திரும்பி படுக்க முயற்சிக்கும் போதே அவர்களுடைய கால், கை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இருவரது கால்களுமே வளைய ஆரம்பித்து, தற்போது எழுந்து நடக்கக்கூட முடியாமல் பரிதவிக்கொண்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்கவில்லை எனவும் வேதனையோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.
“பிறந்த வீட்டிலேயும் கஷ்டம்... புகுந்த வீட்டிலேயும் கஷ்டம்... நடக்க முடியாமல் ரொம்ப அவதிப்படுறாங்க. உட்காரவும் முடியாம நிற்கவும் முடியாமல் அழுதுக்கிட்டே இருக்காங்க. எங்களுக்கும் நடக்கணும்னு ஆசையா இருக்குன்னு பிள்ளைங்க சொல்றாங்க. நடக்கணும், ஓடணும். மற்றப்பிள்ளைங்க மாதிரி ஸ்கூலுக்கு போயிட்டு வரணும்னு ஆசையா இருக்கு” என ஏக்கத்தோடு, கண்ணீர் மல்க தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார், பிள்ளைகளின் தாய் முத்துலட்சுமி.
திருப்பூரில் அச்சகத்தில் பணியாற்றும் முருகனுக்கு போதிய வருமானம் இல்லாததாலும், குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களுக்கு அரசு உதவ வேண்டும் எனக் கூறி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொறுப்பு மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் மனு அளித்து உதவி கோரியது, பார்ப்போரை கண்கலங்க வைத்தது. பொறுப்பு மாவட்ட ஆட்சியர் கண்ணன்,சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க வீடு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான உதவிகளை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், உத்தரவுகள் எப்போது செயல் வடிவம் பெறும்? இரண்டு குழந்தைகளுக்கும் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைக்கு நிரந்தர சிகிச்சை இல்லையா? இதற்கு முன், அரசு மருத்துவமனைகளில் அலைந்தார்களே, ஏன் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை?
பெருந்துரை அரசு மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனைகளில் காண்பித்தும் இதற்கு சிகிச்சையே இல்லை என்று கூறியது ஏன்? இதற்கு மருத்துவத்தில் என்ன தீர்வு? தமிழ்நாடு சுகாதாரத்துறை கண்டறிந்து, இந்த குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், இதேபோன்ற பிரச்சனைகளால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் தீர்வை காணவேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu