BIG STORIES
ராமதாஸ் - அன்புமணி இடையே தொடரும் மோதல் ''பா.ம.க.வில் எனக்கே முழு அதிகாரம்...'' அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்
May 31, 2025 01:44 AM
177
ராமதாஸ் - அன்புமணி இடையே தொடரும் மோதல் ''பா.ம.க.வில் எனக்கே முழு அதிகாரம்...'' அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்
தந்தை ராமதாசுடனான மோதல் முற்றியுள்ள நிலையில், அவரால் பா.ம.க.வில் நிர்வாகிகளை நீக்கவோ, நியமிக்கவோ முடியாது என்றும் தலைவரான தனக்கே அந்த அதிகாரம் இருப்பதாகவும் அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாமக பொதுக்குழு தன்னை தலைவராக முறைப்படி தேர்வு செய்துள்ளதாகவும் பாமகவின் தலைவராக தேர்தல் ஆணையம் தன்னையே அங்கீகரித்துள்ளதாகவும் அன்புமணி கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழனன்று மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் பகிரங்கமாக முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அன்புமணி அழைப்பு விடுத்தார்.
சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அன்புமணி விடுத்த அழைப்பை ஏற்று வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ராஜாராம் வர்மனை தவிர மற்ற 22 பேரும் கூட்டத்திற்கு வருகை தந்தனர். அன்புமணியின் அனுமதியை பெற்று ராஜாராம் வர்மன் குடும்பத்துடன் மும்பை சென்றுள்ளதாக பா.ம.க. தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அண்மையில் ராமதாஸ் அழைப்பு விடுத்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வெறும் 8 பேர் மட்டுமே பங்கேற்று இருந்தனர். அவரது கூட்டத்தை சுமார் 100 மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்த நிலையில், அன்புமணி கூட்டத்திற்கு நிர்வாகிகள் அனைவரும் வருகை தந்ததால், கட்சி அன்புமணியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து நடைபெறும் ஆலோசனை கூட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, தான் கட்சியின் பொதுக்குழுவால் முறையாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் என்றும் தேர்தல் ஆணையமும் தன்னை முறையாக அங்கீகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தனக்கு பொறுப்புகள் வரும், போகும் ஆனால் கட்சி நிர்வாகிகள் மீதான அன்பு போகாது என கூறிய அன்புமணி, அடிமட்ட தொண்டனாகவும் செயல்பட தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
தன் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாசை சமூக நீதி போராளி எனக்குறிப்பிட்டு பேசிய அன்புமணி, ராமதாசின் கொள்கைகளை நிறைவேற்ற களத்தில் வேகமாக இறங்கி பணியாற்றுவோம் என்றார்.
இதனிடையே, அன்புமணியின் ஆதரவாளராக கருதப்படும் திலகபாமாவை பா.ம.க.வின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்ட ராமதாஸ், சையது மன்சூர் உசேன் என்பவரை நியமித்தார். இத்தகவல் வெளியான அரை மணி நேரத்திற்குள் ராமதாசின் அறிவிப்பிற்கு தடை போடும் வகையில், பொருளாளர் பதவியில் திலகபாமாவே நீடிப்பார் என அன்புமணி அறிவித்தார். திலகபாமாவைத் தொடர்ந்து மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வான மயிலம் சிவக்குமாரையும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவு பிறப்பித்தார்.
தொடர்ந்து நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவததாக அறிவித்து வரும் நிலையில், கட்சியில் நிர்வாகிகளை நீக்கவோ, நியமிக்கவோ அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் நீக்குவதாக கூறும் நிர்வாகிகள் தங்கள் பதவியிலேயே தொடர்வார்கள் என்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி தெரிவித்ததாக கூறப்படுகிறது. பா.ம.க.வில் நிர்வாகிகளை நீக்கவோ, நியமிக்கவோ தலைவரான தனக்கே அதிகாரம் உள்ளதாகவும் அன்புமணி கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தனது தாயை தான் தாக்க முயன்றதாக தந்தை ராமதாஸ் கூறியது வேதனை அளிப்பதாக அன்புமணி கூறினார். உலகத்திலேயே தனக்கு மிகவும் பிடித்தவர் தனது தாய் தான் என்றும் அவர் மீது ஒரு துரும்பு கூட விழ ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என்றும் அன்புமணி குறிப்பிட்டார். தாய் குறித்து பேசிக் கொண்டிருந்த போது அன்புமணி கண் கலங்கிய நிலையில் நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu