RECENT NEWS

சிக்கன் குழம்பில் ‘பல்லி’.. சாப்பிடுவதற்கு முன்பே வெளியான ப்ளான் ஆடியோ.. சிக்கிட்டான்...சிக்கிட்டான்...!

முகப்பு

ஆதாரம் உள்ளது... மாமியார் அனுப்பிய மெசேஜ்... வெடித்து கிளம்பிய ரவிமோகன் பிரச்சனைக்கு காரணம் இதுதானா?

May 18, 2025 09:33 AM

1822

ஆதாரம் உள்ளது... மாமியார் அனுப்பிய மெசேஜ்... வெடித்து கிளம்பிய ரவிமோகன்
பிரச்சனைக்கு காரணம் இதுதானா?

ஆதாரம் உள்ளது... மாமியார் அனுப்பிய மெசேஜ்... வெடித்த ரவிமோகன்; பிரச்சனைக்கு காரணம் இதுதானா?

“போர் முடிஞ்சு பார்டரிலிருந்து நேரா உங்களை நோக்கித்தான் கேமராவோட வர்றோம்... வெயிட் பண்ணுங்க ரவி மோகன்” என தமிழ்நாட்டு மீடியாக்கள் குறித்து, மீம்ஸ் போடும் அளவுக்கு, உக்கிரமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது, ரவிமோகன் -ஆர்த்தி -கெனிஷா விவகாரம். இப்போது, ரவி மோகனின் மாமியாரும் ஆர்த்தி ரவியின் அம்மாவுமான, சுஜாதா விஜயகுமாரும் இந்த அறிக்கை யுத்தத்தில் இணைந்திருக்கிறார்.

தயாரிப்பாளரும் நடிகருமான ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவின் திருமணத்திற்கு, தன்னுடன் கிசு கிசுக்கப்பட்ட பாடகி கெனிஷாவுடன் ஜோடி போட்டு வந்தார் ரவிமோகன். அந்த திருமண விழாவில், இருவரும் கையை பிடித்துக்கொண்டு, அக்னிகுண்டத்தில் மூன்று சுற்று சுற்றுவில்லை அவ்வளவுதான்.



மற்றபடி, கோல்டன் நிற ஆடைகளுடன் மாப்பிள்ளை- பெண் போல் ஜோடியாக சுற்றிக்கொண்டு, ஈ அல்ல, டைனோஸர் புகும் அளவுக்கு பலரையும் வாய் பிளக்கவைத்தார்கள், ரவி மோகனும் கெனிஷாவும்! போர் பதட்ட செய்திகளுக்கு நடுவிலேயும் இந்த அக்கப்போர் செய்தி பற்றி பேச வேண்டுமா? என இணைய தளவாசிகள் பலரும் கேள்வி எழுப்பும் அளவுக்கு போனது, இந்த சர்ச்சை.

கிசுகிசுக்கப்பட்ட பாடகியுடனேயே, மாப்பிள்ளைபோல் திருமணத்துக்கு ஜோடியாக வந்ததால், “அப்போ அதானே ரவி?” என கேள்வி எழும்ப ஆரம்பித்தது.



இதனைத் தொடர்ந்து, ஆர்த்தி ரவி ஓர் அதிரடி அறிக்கையை வெளியிட்டார்.
“நானும் சட்டமும் முடிவு செய்யும் வரை, நான் ஆர்த்தி ரவிதான். வழக்கு முடியும் வரை மீடியாக்கள் என்னை 'முன்னாள் மனைவி' என அழைக்க வேண்டாம்” எனவும் அறிக்கை வெளியிட்டார்.

ஆனால், ஆர்த்தி ரவிக்கு மட்டுமல்ல, அவரைப்பற்றியும் கெனிஷா பற்றியும் றெக்கை கட்டி பறக்கும் சர்ச்சைகளுக்கு, ‘பிரச்னையை லேஃப்ட் ஹண்ட்ல, ஹாண்டில் பண்ற மைக்கேல் ஹஸி’யாக மாறி, ஓர் அதிரடி அறிக்கையை வெளியிட்டார், ரவி மோகன்.



“இத்தனை வருடமாக என்னுடைய முதுகில் குத்தப்பட்டு இருந்தேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. எனது முன்னாள் மனைவியை மட்டுமே விட்டு விலக முடிவு செய்தேன், குழந்தைகளை அல்ல” என குறிப்பிட்டு, ஆர்த்தி ரவியை இன்னும் வெறுப்பின் உச்சத்துக்கு கொண்டுபோனார்.


அதே அறிக்கையில், “கடந்த 5 ஆண்டுகளாக எனது வருமானத்தை பெற்றோருக்கு கூட அனுப்ப விடவில்லை. என்னுடைய வீட்டை விட்டு ஏதுமில்லாமல் நான் வெளியேறிய போது எனக்கு அழகான துணையாக நின்றவர் கெனிஷா பிரான்சிஸ். அவர் ஒரு அழகான துணை” என கிசு கிசுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, திரையுலகத்தையே தீ பிடிக்கவைத்தார்.



இதனைத் தொடர்ந்து, ஆர்த்தி ரவி மீண்டும் ஓர் அறிக்கை விட, அதனைத் தொடர்ந்து, முதல் முறையாக ஆர்த்தி ரவியின் தாயாரும் ரவி மோகனின் மாமியாருமான சுஜாதா விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை, மீண்டும் பரபரப்பை பற்றவைத்தது. அந்த அறிக்கையின் மூலம், கடைசியாக ரவிமோகனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருப்பதும் அதனால், அவர் சூடாகி அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர ஆரம்பித்திருப்பதும், தெரியவந்துள்ளது.


“வணக்கம், கடந்த 25 வருடங்களாக திரைப்படத்துறையில் ஒரு தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். ஒரு பெண்ணாக இத்தனை காலம் இத்துறையில் நீடித்திருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்களுக்குத் தெரியும்.



இத்தனை ஆண்டுகளில் பட வெளியீட்டின்போது அந்தப் படம் சம்பந்தமில்லாமல் வேறு எதற்காகவும் நான் மீடியா முன்பு வந்தது இல்லை. இப்பொழுது, முதல்முறையாக என்னைப் பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்” என கூறியவர், தன்னை ஒரு கொடுமைக்காரி, குடும்பத்தை பிரித்தவள், பணப்பேய், சொத்தை அபகரித்தவள் என்ற விமர்சனங்களுக்கெல்லாம் பதில் கொடுத்துள்ளார்.



அந்த பதிலில், “கடந்த சில காலமாகவே கொடுமைக்காரி. குடும்பத்தை பிரித்தவள், பணப் பேய், சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னைப் பற்றி உலவி வருகின்றன. அப்பொழுதே, இதற்கு விளக்கம் தர வேண்டும் என விரும்பினேன். ஆனால், என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, மௌனமாய் இருந்து விட்டேன். இப்பொழுதும் நான் பதில் சொல்லவில்லை என்றால், என்னைப் பற்றி திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வரும் பொய்கள், உண்மையாகிவிடும் என்பதனால், இந்த விளக்கம்” எனக் கூறியவர், தான் சினிமா தயாரிக்கவும் நஷ்டப்படவும் காரணமே ரவிமோகன் தான் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.




“கடந்த, 2007 ஆம் ஆண்டு ‘வீராப்பு’ என்ற திரைப்படத்தை முதலில் தயாரித்தேன். சுந்தர் சி அவர்கள் கதாநாயகனாக நடித்த அப்படம் எனக்கு வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து, சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த எனக்கு, 2017 ஆம் ஆண்டு என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்கள் ‘நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும்’ என்ற யோசனையை வழங்கினார். அதனால், மீண்டும் திரைப்படம் தயாரிக்க துவங்கினேன். ஆனாலும் உறவு ரீதியாக நெருங்கிய ஒருவரை தொழில் ரீதியாக அணுகும்பொழுது அது குடும்பம் மற்றும் தொழில் இரண்டையும் பாதித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.



2017 ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘அடங்க மறு’ என்ற திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமாக அமையவில்லை” என வெளிப்படையாக சுட்டிக்காட்டியதோடு, ஆனாலும் தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆலோசனையை ரவி மோகன் வழங்கியதாகவும் அந்த ஆலோசனையின் பெயரில்தான், அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனால், ஃபைனான்சியர்களிடம் கை கட்டி நிற்கவேண்டிய சூழலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



அதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “இந்த காலத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பாளரின் பணி அந்தத் திரைப்படத்தின் துவக்கத்தின்போது, கேமராக்களுக்கு முன் கை கூப்பி நிற்பதும், பட வெளியீட்டின்போது ஃபைனான்சியர்களின் முன் கைகட்டி நிற்பதும் என்று ஆகிவிட்டது. இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல என்று கூறியுள்ளார் சுஜாதா விஜயகுமார்


‘அடங்க மறு’, ‘பூமி’ மற்றும் ‘சைரன்’ என மூன்று திரைப்படங்களைத் தொடர்ந்து, என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்களை, கதாநாயகனாக வைத்து எடுத்தேன். இந்த படங்களுக்காக கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கும் மேலாக ஃபைனான்சியர்களிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறேன். அந்தப் பணத்தில் 25 சதவிகிதத்தை ஜெயம் ரவி அவர்களுக்கு ஊதியமாக வழங்கி உள்ளேன். இதற்கு, என்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்குக்கு செலுத்திய பரிமாற்றம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளன” என கூறியுள்ளார்.



((மேலும், “ஒரு வருடம் முன்பு அவருடைய அம்மாவின் பல கோடி கடனுக்கு என்னை ஜாமீன் கையெழுத்திட வற்புறுத்தினார். என்னுடைய பொருளாதாரம் முற்றிலுமாக பிடுங்கப்பட்ட இடத்தில் நிற்கிறேன். 10 நாட்களுக்கு முன்பும் கூட அவருடைய அம்மா நான் கொடுத்த ஜாமீனுக்காக நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார். மனைவியும், அவருடைய குடும்பமும் இதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு பணம் -ஜாமீன் -கையொப்பங்கள் தேவைப்படும்போது ரவி மோகன் என்ற பெயர் தேவை. கடந்த 16 ஆண்டுகளாக நான் இந்த போராட்டத்தில் தான் இருக்கிறேன்” என்று ரவிமோகன் கொடுத்த அறிக்கைக்கு இதில் பதில் அளித்துள்ளார், சுஜாதா விஜயகுமார். ))


ரவி மோகனை பல கோடி ரூபாய் தன்னுடைய கடன்களுக்காக தான், பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் என மறுத்த மாமியார் சுஜாதா விஜயக்குமார், “இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. அவரை வெறும் கதாநாயகனாக மட்டுமே நான் பார்த்திருந்தால் கூட அப்படி நிர்பந்தப்படுத்தியிருக்க மாட்டேன். ஆனால், அவரை என் மாப்பிள்ளை என்பதைத் தாண்டி என் சொந்த மகனாகவே கருதினேன்.



அதனால், அவருக்கு எந்த ஒரு கஷ்டமும் வந்து விடக்கூடாது, என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு பெண் என்ற நிலையையும் கடந்து ஒவ்வொரு படம் வெளியிடும் போதும் விடியற்காலை ஐந்து மணி வரை, வாங்கிய கடனுக்காக, ஃபைனான்சியர்கள் நீட்டும் எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும், மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக் கொண்டேன். இன்று வரை அந்தக் கடன்களுக்கான வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்” என கூறியவர், கடனுக்கு பொறுப்பேற்று அவரிடம் கடிதம் வாங்கவில்லை என்றும் மறுத்துள்ளார்.



“சைரன் பட வெளியீட்டின்போதுகூட ஜெயம் ரவி அவர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட எனக்கு அடுத்த படம் நடித்துக் கொடுப்பதாகத்தான் கடிதம் கொடுத்தாரே தவிர, எங்கேயும் எப்பொழுதும் கடனுக்கு பொறுப்பேற்று, தான் கட்டுவதாக யாருக்கும் கையெழுத்து போடவில்லை. மேலும் ஜெயம் ரவி அவர்கள் எனக்கு நடித்துக் கொடுப்பதாக சொன்ன அடுத்த படத்திற்கு அவரே ஒரு இயக்குநரை தேர்வு செய்து, அவருக்கு முன் பணம் கொடுக்கச் சொன்னார். எந்தவித மறுப்பும் இல்லாமல் அதையும் நான் செய்தேன்.


ஒரு வருடமாக நான் பலமுறை முயற்சி செய்தும், எங்களை சந்திப்பதை தவிர்த்து வந்த ஜெயம் ரவி அவர்களை, இதை சாக்காக வைத்து சந்தித்து பேசி, குடும்பத்திற்குள் சமாதானத்தை எட்டலாம் என்பதற்காக மட்டுமே, ஒரு தயாரிப்பாளராக அல்ல; தாயாக பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். மாறாக அவர் சொன்னது போல் அவரை நிர்பந்தப்படுத்துவதற்காக அல்ல” என ரவி மோகனுக்கு அனுப்பிய குறுஞ்செய்திக்கான காரணத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார், சுஜாதா விஜயகுமார்.



“ரவி மோகன் சொன்னதுபோல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு தான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான, வேண்டாம் ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை தான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை, அப்படி ஒன்று இருந்தால், அதை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும் எனவும் ஆணித்தரமாக கூறியுள்ளார், சுஜாதா விஜயகுமார்.



அதேநேரம், இன்றும் ரவிமோகனை தனது மகனாகவே நினைப்பதாக கூறிய மாமியார் சுஜாதா விஜயகுமார், ரவி மோகனுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். “எப்பொழுதும் உங்களை ஒரு கதாநாயக பிம்பத்திலேயே நாங்கள் பார்க்கிறோம், ரசிக்கிறோம். நடந்து வருகின்ற பிரச்சனையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அறிக்கைகளில், நீங்கள் சொல்கின்ற பொய்கள், அந்த கதாநாயக பிம்பத்திலிருந்து உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது. என்றும் நீங்கள் ஹீரோவாகவே இருக்க வேண்டும். இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் ‘அம்மா அம்மா’ என்று அழைப்பீர்களே, அந்த அம்மாவின் ஆசை” என வாழை பழத்தில் ஊசியை சொறுகியதுபோல் குத்திக்காட்டியுள்ளார், சுஜாதா விஜயகுமார்.



மேலும், “இன்று வரை என் பேர குழந்தைகளுக்காக அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம், ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது. ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏற்கனவே, நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு ‘மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார்’ என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை” எனவும் தெரிவித்துள்ளார்.


அதாவது, ஆர்த்தி ரவியை பிரிய, ரவி மோகன் கூறிய காரணங்களை எல்லாம் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார், மாமியார் சுஜாதா விஜயகுமார். இதனால், மீண்டும் அதற்கு பதில் அளிக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறார், மக்க மிஸி ரவி மோகன்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

Honeymoon trip- ஆ? Honey Trap- ஆ?.. தேனிலவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை மர்மக் கொலை.. காணாமல் போன புதுப்பெண்!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies