BIG STORIES
காதல்.. ரன்...வருஷம் 13..! பெண்ணை காதலித்து கூட்டிச்சென்றவருக்கு வெட்டு.. நம்ப வைத்து வெட்டி சாய்ந்த கொடுமை..
May 04, 2025 01:46 AM
450
பெண்ணை காதலித்து கூட்டிச்சென்றவருக்கு வெட்டு.. நம்ப வைத்து வெட்டி சாய்ந்த கொடுமை..
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பெண்ணை காதலித்து வீட்டில் இருந்து அழைத்துச்சென்ற இளைஞர் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசித்து வந்த நிலையில், 13 வருடம் கழித்து சொந்த ஊருக்கு திரும்பியதும் பெண்ணின் உறவினர்களால் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்டார்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள எட்டுபுளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி - மகாலட்சுமி தம்பதியர். இவர்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் பெண் குடும்பத்தினர் வசதி படைத்த பெரிய வீட்டுக்காரர்கள் என்பதால் ஊருக்கு செல்ல அஞ்சிய காதல் ஜோடி திருவோணம் என்ற கிராமத்தில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறினர். குழந்தைகள் பிறந்த பின்னரும் சொந்த ஊருக்கு செல்லாமல் 13 வருடங்களாக அங்கேயே வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெண் வீட்டாரை சந்தித்து சமரசம் பேசிய கலியமூர்த்தியின் தாய், தனது மகன் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறான் வர சொல்லலாமா ?என பெரிய வீட்டில் அனுமதி கேட்டுள்ளார்.
அதற்கு மகாலட்சுமி குடும்பத்தினர் புள்ள குட்டின்னு ஆயாச்சி வரச்சொல்லுங்கன்னு சம்மதம் தெரிவித்ததால் கலியமூர்த்தி , மகாலட்சுமி தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் 13 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த கிராமத்திற்கு திரும்பினர்.
சொந்த ஊரில் இரண்டு மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் உள்ளூரில் உள்ள சிலரது இழிவான பேச்சால் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமியின் தம்பி, தாய்மாமன், சித்தப்பா, அண்ணன் ஆகியோர் சேர்ந்து வீட்டில் தனியாக இருந்த கலியமூர்த்தியை சரமாரியாக வெட்டி உள்ளனர். “எங்க வீட்டு பெண்ணை எப்படிடா இழுத்துட்டு போவ”ன்னு கேட்டு சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது.
இதில் கலியமூர்த்திக்கு 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மகாலட்சுமி வீட்டுக்காரர்கள் ஊரில் பெரிய வீட்டு அந்தஸ்தில் இருப்பதாகவும், தங்கள் வீட்டு பெண்ணை காதலித்துகூட்டிச் சென்றவர் தங்கள் சாதியை சேர்ந்தவராக இருந்தாலும், அந்தஸ்தில் தங்களுக்கு நிகரானவர் இல்லை என்பதால் , அது தங்களுக்கு அவமானம் என்று வெறியுடனே இருந்ததாக கூறப்படுகின்றது.
தன்னையும் , கணவரையும் ஊருக்குள் வரவழைத்து 13 ஆண்டுகளாக தேக்கி வைத்து இருந்த பகை வெறியை தங்கள் குடும்பத்தினர் தீர்த்து கொண்டனர் என்று குற்றஞ்சாட்டிய மகாலெட்சுமி, கணவனை வெட்டியவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறினார் .
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu