உலகம்
45 இந்தியர்கள் பேருந்தில் பலியான அதிர்ச்சி சம்பவம்..! சவுதியில் நடந்தது என்ன?
Nov 18, 2025 02:01 PM
184
45 இந்தியர்கள் பேருந்தில் பலியான அதிர்ச்சி சம்பவம்..! சவுதியில் நடந்தது என்ன?
ஹைதராபாத்தில் இருந்து சவுதி அரேபியாவிற்கு புனித யாத்திரைக்காக சென்ற 45 இந்தியர்கள் பேருந்து விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜனார், கடந்த நவம்பர் 9ம் தேதியன்று, விமானம் மூலம் 54 பேர் , ஹைதராபாத்தில் இருந்து ஜெட்டாவுக்கு புனித யாத்திரைக்காக புறப்பட்டு சென்றுள்ளனர் .
அவர்கள் மெக்காவை அடைந்த நிலையில், அதில் நான்கு பேர் மெக்காவிலேயே இருந்துள்ளனர். மேலும் இன்னும் நான்கு பேர் காரிலேயே மதினா செல்வதாக கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை மதினா பகுதியை அடைந்தனர்.
மீதமிருந்த 46 பேரும் பேருந்து மூலம் மெக்காவில் இருந்து மதினா நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி அளவில், பேருந்து மதினாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், அதாவது முஃபிகட் அருகே சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது சாலையில் எதிரே வந்த டீசல் லாரி மீது பேருந்து நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனே பேருந்து தீ பிடித்து வெடித்துள்ளது. இந்த கொடூர விபத்தில், பேருந்தில் இருந்த 46 பேரில் 45 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் மொஹம்மது அப்துல் ஷோயப் என்ற ஒரு பயணி மட்டும் படுகாயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜனார் தெரிவித்துள்ளார்.
பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் வரும் 23ம் தேதி ஜெட்டாவில் இருந்து ஹைதராபாத் திரும்புவதற்கு விமான டிக்கட் பதிவு செய்திருந்ததாகவும் வி.சி.சஜனார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தனது சமூக வலைதள பக்கத்தில், இரங்கல் தெரிவித்ததோடு, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும் , ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் சௌதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் மற்றும் பிற உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்த தகவல் அறிவதற்கு 8002440003 என்ற அவசர உதவி எண்ணை பயன்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்த விபத்து தொடர்பாக தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ண ராவ், டெல்லியில் உள்ள ஒருங்கிணைப்புச் செயலாளர் கவுரவ் உப்பலைத் தொடர்புகொண்டு, அனைத்து தகவல்களையும் விரைந்து பெறுமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சௌதி அரேபியா தூதரகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்குமாறும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் அவர்களால் முடிந்த அந்த அனைத்து உதவிகளையும் செய்வார்கள் என்றும் , நம் நாட்டு அதிகாரிகளும், சவுதி அரேபியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பார்கள் எனவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் உறுதுணையாக இருக்கும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu