BIG STORIES
இண்டர்வியூ சென்ற பெண் கொன்று எரிக்கப்பட்ட கொடுமை...காட்டுக்குள் நடந்த கொடூரம்..! நண்பனுக்காக பழிக்குப் பழியா ?
Nov 01, 2025 02:43 AM
464
இண்டர்வியூ சென்ற பெண் கொன்று எரிக்கப்பட்ட கொடுமை...காட்டுக்குள் நடந்த கொடூரம்..! நண்பனுக்காக பழிக்குப் பழியா ?
திருச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு நேர்முகத்தேர்வுக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டுச்சென்ற இளம் பெண் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி படிப்பை முடித்த கையோடு வேலைக்காண நேர்முகத்தேர்வுக்கு செல்வதாக கூறி விட்டுச்சென்ற செல்ல மகள் , கொடூரர்களால் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதை கண்டு தாய் கதறி அழும் காட்சிகள் தான் இவை..!
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணிசாமி - கலா தம்பதியருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உண்டு. மகள் மீரா ஜாஸ்மினின் கல்லூரி படிப்பிற்காக, திருச்சி , சீனிவாசா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். எம் எஸ் சி கணிதம் பயின்று வந்த மீரா ஜாஸ்மின் , கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரி படிப்பை முடித்து உள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை மீரா ஜாஸ்மின் பெற்றோர்களிடம் நேர்முகத் தேர்வுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், தங்கள் பகுதிக்குட்பட்ட அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் , மீரா ஜாஸ்மின் பயன்படுத்திய செல்போன் டவர் எந்தப் பகுதியில் இருக்கிறது என ஆய்வு செய்தனர் . அப்போது சனமங்கலம் காப்பு காட்டுப் பகுதியில் காட்டியதால் அங்கு சென்ற போலீசார் அந்தப் பகுதியில் மீரா ஜாஸ்மின் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ஆடையின்றி கருகிய நிலையில் காணப்பட்ட மீராஜாஸ்மினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அரசு தலைமை மருத்துவமனையில் மீரா ஜாஸ்மின் உடலைப் பார்த்து அவரது தாய் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மீராஜாஸ்மினை கொலை செய்த பின்னர் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக பைக்கில் உள்ள பெட்ரோலை ஊற்றி எரித்தது தெரியவந்தது. அதேபோன்று இறந்து கிடந்த பெண்ணின் அருகில் இரண்டு பீர் பாட்டில்கள் இருந்துள்ளது. கொலை செய்யப்பட்ட மீராஜாஸ்மினின் செல்போனில் கடைசியாக அழைத்தது யார் ? என்ற விவரங்களை சேகரித்து போலீசார், விசாரித்த போது பள்ளி பருவ காதலால் நிகழ்ந்த கொடூர பழிக்குப்பழி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
பெரம்பலூரில் மீரா ஜாஸ்மின் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது அவரது தோழியின் சகோதரன் அவரை காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த காதல் விவகாரம் தெரியவந்ததும் மீராஜாஸ்மினின் பெற்றோர் , அந்த பையனை சத்தம் போட்டுள்ளனர். இதனால் அவமானப்பட்ட அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. அதன்பின்னர் மீரா ஜாஸ்மின் குடும்பத்தினர் பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு வந்த நிலையில் உயிரிழந்த அந்த பையனின் சகோதரி , மீராஜாஸ்மின் உடன் கல்லூரியில் படித்து வந்ததாக கூறப்படுகின்றது.
மேல்படிப்பு முடிந்து மீராஜாஸ்மினின் தோழிக்கு கடந்த ஆண்டு திருமணம் முடிந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும், வீட்டிற்கு தெரியாமல் தோழியை பார்க்க சென்றுள்ளார் மீராஜாஸ்மின் என்கின்றனர் காவல்துறையினர். வீட்டில் நேர்முகத்தேர்வுக்கு செல்வதாக கூறிவிட்டு தோழியை சந்திக்க தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மீராஜாஸ்மினுக்காக உயிரை விட்ட பையனின் பள்ளிக்கால நண்பர்கள் இருவர் உடனிருந்ததாக கூறப்படுகின்றது.
அவர்கள் மீரா ஜாஸ்மினிடம் நல்ல விதமாக பேசி பேருந்து நிலையம் அழைத்துச்செல்வதாக கூறி , பைக்கில் ஏற்றி அழைத்துச்சென்றதாக கூரப்படுகின்றது. ஆள் நடமாட்டம் இல்லா பகுதியில் வாயை பொத்தி காப்புக்காட்டு பகுதிக்குள் தூக்கிச்சென்று மீராஜாஸ்மினை சித்ரவதை செய்து கொலை செய்ததாகவும், அவரது உடல் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து மீரா ஜாஸ்மினின் உடலில் ஊற்றி தீவைத்து விட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொலையாளிகள் இருவரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும், உண்மையிலேயே நணபன் சாவுக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா ? என்றும் இந்த கொலை சம்பவத்தில் வேறு யருக்காவது தொடர்பு உள்ளதா ? என்ற கோணத்திலும் போலீசார் புலன்விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu