BIG STORIES
கடற்கரையில் அடுத்தடுத்து சடலமாக கரை ஒதுங்கிய ஜவுளிக்கடை பெண் ஊழியர்கள்..! வங்க கடலுக்குள் நடந்தது என்ன?
Nov 01, 2025 02:21 AM
5502
கடற்கரையில் அடுத்தடுத்து சடலமாக கரை ஒதுங்கிய ஜவுளிக்கடை பெண் ஊழியர்கள்..! வங்க கடலுக்குள் நடந்தது என்ன?
சென்னை எண்ணூர் கடற்கரையில் அடுத்தடுத்து 4 பெண்கள் சடலமாக கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இடுப்பளவு நீரில் நீச்சல் அடிக்க ஆசைப்பட்டவர்கள் பலியான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னை அடுத்த எண்ணூர் கடற்கரையில் 4 பெண்கள் அடுத்தடுத்து சடலங்களாக கரை ஒதுங்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த எண்ணூர் உதவி ஆணையர் வீரக்குமார் தலைமையிலான போலீசார் கடற்கரையில் ஒதுங்கிய அந்த 4 பெண்களும் யார் ? எப்படி இங்கே வந்தனர் ? கடலில் குளித்தனரா? அல்லது கடலில் குதித்து விபரீத முடிவை எடுத்தனரா ? என்பது குறித்து விசாரணையை முன்னெடுத்தனர்.
அசோக் லேலாண்ட் கம்பெனிக்கு பின்புறம் உள்ள பெரிய குப்பம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவுக்கு மேல் 4 ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஹேண்ட் பேக்குகள் , சுடிதார் துப்பட்டாக்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் இருந்த கல்லூரி மற்றும் ஜவுளிக்கடை அடையாள அட்டையை வைத்து 4 பெண்களும் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஜவுளிக்கடையில் தீபாவளிக்காக பகுதி நேர பணியாளர்களாக வேலைப்பார்த்து வந்த தேவகி,பவானி, காயத்திரி மற்றும் 17 வயது கல்லூரி மாணவி என்பது தெரியவந்தது.
பெரிய குப்பத்தை சேர்ந்த அன்பு என்பவர் 4 பேரின் சடலங்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. கற்குவியலுக்கு அருகே 4 பேர் கடலில் மூழ்கியதாக சில இளைஞர்கள் கூச்சலிட்டதால் , தான் கடலில் குதித்து காப்பாற்ற சென்றதாகவும், அதற்குள்ளாக 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதால் , அவர்களின் சடலத்தை கரைக்கு இழுத்து வந்ததாகவும் மீனவர் அன்பு போலீசாரிடம் தெரிவித்தார்.
இந்த பகுதி கடல் 500 அடி தூரம் வரை 5 அடி ஆழம் மட்டுமே இருக்கும் என்றும் ஆனால் கற்களை ஒட்டிய பகுதியில் மண் அரிப்பின் காரணமாக ஆழமான பகுதிகள் இருப்பதாகவும், அந்த இடத்தில் அலையின் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்ற மீனவர் அன்பு, ஒதுக்கு புறமாக யாருக்கும் தெரியாமல் கற்குவியல் உள்ள கடலில் குளிக்க சென்றதால் 4 பேரும் அலையில் சிக்கி நீரில் மூழ்கியது யாருக்கும் தெரியவில்லை என்றார். தங்கள் கண்ணுக்கு முன்னாக நடந்திருந்தால் அவர்களை எப்படியாவது காப்பாற்றி இருப்போம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த பகுதிக்கு வரும் வெளியூர் நபர்களிடம் கடலில் குளிப்பது ஆபத்து என்று எச்சரித்தாலும், அவர்கள் சொல்பேச்சு கேட்பதில்லை என்றும் தங்களிடம் சண்டைக்கு வந்து விடுவார்கள் என்றும் மீனவர் அன்பு தெரிவித்தார்
சம்பவம் தொடர்பாக விவரித்த போலீசார் , கும்மிடிபூண்டியில் இருந்து கடற்கரையை சுற்றிபார்க்க வந்த இந்த 4 பெண்களும் கற்களில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பெண்களில் முதலில் ஒருவர் கடலில் இறங்கி குளித்த போது ராட்சத அலையில் இழுத்துச்செல்லப்பட்டதாக கூறபடுகின்றது. அவரை மீட்க ஒருவர் பின் ஒருவராக கடலுக்குள் இறங்கிய நிலையில் 4 பேரும் அலையில் சிக்கி நீரில் மூழ்கி பலியானது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர். கடல் அலையில் சிக்கி கற்கள் மீது மோதியதால் ஒரு சிலரது உடல்களில் லேசான சிராய்ப்பு காயங்கள் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 4 பேரின் சடலங்களையு ம் மீட்டு பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அறிமுகம் இல்லா கடற்கரைகளுக்கு காற்றுவாங்க செல்வோர் , கடலில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் உள்ளூர் மீனவர்கள் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக் கொண்டாலே இது போன்ற விபரீத உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கும் என்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu