தமிழ்நாடு
அரசு அதிகாரியின் குடும்பமே சிதைந்த அதிர்ச்சி சம்பவம்..! சிக்கியது உருக்கமான 'டைரி' வெளியான முக்கிய தகவல்கள்..!
Oct 29, 2025 04:52 PM
127
அரசு அதிகாரியின் குடும்பமே சிதைந்த அதிர்ச்சி சம்பவம்..!
"கடன் அதிகமாக வாங்கி விட்டேன், ஆபீஸிலும் நிறைய பணத்தை திருடிவிட்டேன், இதெல்லாம் எனது மனைவிக்கே தெரியாது.. இனி நானும் மனைவி குழந்தை யாரும் உயிருடன் இருக்க கூடாது.." என மத்திய அரசு ஊழியர் ஒருவர் டைரியில் உருக்கமாக எழுதிய வார்த்தைகள் தான் இவை..
சென்னையை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் தனது மகனை கொன்றுவிட்டு, மனைவி கழுத்தை அறுத்து, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை அண்ணாநகர் 18 வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நவீன் கண்ணா. செஸ் விளையாட்டு வீரரான இவருக்கு மத்திய அரசு ஊழியராக வேலை கிடைத்துள்ளது. இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்பு கட்டுப்பாட்டு கணக்காளர் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டர் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு நிவேதிதா என்ற பெண்ணோடு திருமணம் நடந்துள்ளது.
நிவேதிதா, தெற்கு ரயில்வேயின் பெரம்பூர் லோகோ அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் லவின் கண்ணன் என்ற மகன் இருந்தார்.
கடந்த 27 ஆம் தேதியன்று காலையில் நவீன், தனது மொபைல் போன், பைக்கை வீட்டிலேயே வைத்துவிட்டு தனியாக வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். சிறிது நேரத்திற்கு பின் நவீனின் தாய் புவனேஸ்வரி, நிவேதிதாவை எழுப்புவதற்காக அறைக்கு சென்றுள்ளார்.
அறை நீண்ட நேரமாக திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிறுவன் லவின் கண்ணா கழுத்தை துணியால் இறுக்கப்பட்டு இறந்த நிலையிலும், அருகே நிவேதிதா கழுத்தில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்திலும் உயிருக்கு போரடிக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே நவீன், வில்லிவாக்கம் மற்றும் கொரட்டூர் இடையேயான ரயில் தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டார். போலீசார் இந்த சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நவீனின் படுக்கை அறையில் ஒரு டைரி ஒன்று சிக்கியுள்ளது.
அதில் தான் அதிக கடன் பெற்று விட்டதாகவும் அலுவலகத்திலும் நிறைய பணம் திருடிவிட்டதாகவும் இது பற்றி தனது மனைவிக்கு தெரியாது என்றும் ஆகையால் இனி நானும் மனைவி குழந்தை யாரும் உயிருடன் இருக்க கூடாது என்று நினைத்து மனைவியை பிளேடால் கழுத்தை அறுத்துவிட்டு சென்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் போலீசார் நவீன் வேலை பார்த்து வந்த அலுவலக அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியே வந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் அதிகாரிகள், கணக்கு வழக்கை சரிபார்ப்பது வழக்கம்.
அப்படி அவர்கள் சரிபார்த்தபோது , ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஓய்வூதிய தொகை 3.96 கோடி ரூபாய் மாயமானது தெரியவந்துள்ளது.
அதிகாரிகள், நவீனுக்கு போன் செய்து இதுகுறித்து கேட்டுள்ளனர். பின்னர் நவீன் அலுவலகத்திற்கு வருவதை நிறுத்தி, சிம் கார்டையும் மாற்றி தலைமறைவாக இருந்துள்ளார்.
பணம் எங்கே சென்றது என அதிகாரிகள் பார்த்தபோது, நவீன் சிறிது சிறிதாக 1 வருடமாக 3.96 கோடி ரூபாயை கையாடல் செய்து, அதனை தனது பெற்றோரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது.
இந்த பணத்தை எல்லாம் ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்தால் லாபம் பார்க்கலாம் என நினைத்து நவீன் ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்து பணத்தை தொலைத்ததும் பின்னர் தெரியவந்துள்ளது.
நவீன் கையாடல் செய்து இருப்பது, துறை ரீதியான விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு, டெல்லிக்கு அது தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
பயத்தில் இருந்த நவீன், என்ன செய்வதென்று தெரியாமல் கடந்த 27 ஆம் தேதியன்று அதிகாலை 3 மணியளவில் நடந்ததை எல்லாம் தனது மனைவியிடம் நவீன் தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அவமான பட்டு வாழ்வதை விட குடும்பத்தோடு உயிரை மாய்த்து கொள்ளலாம் எனப்பேசி முதலில் மகனின் கழுத்தை நெரித்து நவீன் கொலை செய்துள்ளார்.
பின்னர் தனது மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். நிவேதிதாவை கழுத்தை அறுக்கும் போது தலையனை போன்றவற்றில் கத்தி பட்டு தலையணை முழுவதும் அறுக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் அதிகாலை வீட்டில் இருந்து புறப்பட்ட நவீன், அண்ணாநகரில் இருந்து கொரட்டூர் சென்று செல்போன் கடை ஒன்றில் புதிய செல்போனையும், சிம் கார்டையும் வாங்கி அம்மாவிற்கு போன் செய்துள்ளார்.தனது மனைவியும் மகனையும் 11 மணி வரை எழுப்ப வேண்டாம் என நவீன் தெரிவித்துள்ளார்.
ஆனால் நிவேதிதாவின் தாயார், நவீனின் தாயாருக்கு போன் செய்து அவளிடம் பேசவேண்டும் போனை கொடுங்கள் என கூறியுள்ளார்.
அதனால் நவீனின் தாயார் அறைக்கு சென்று பார்த்ததும் தெரியவந்துள்ளது. இதனாலேயே நிவேதிதா தற்போது உயிர் பிழைத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu