தமிழ்நாடு
பைக்கில் வந்த போதை இளைஞர்; 20 பேர் பலியானது எப்படி..? வெடித்துச்சிதறிய 234 ஸ்மார்ட் போன்கள்..! பயணிகளின் உயிர்காத்த லேப்டாப் - நடந்தது என்ன?
Oct 25, 2025 12:55 PM
672
ஆந்திராவில் 20 பேர் உயிரிழக்க காரணமான வோல்வோ ஆம்னி பேருந்து விபத்திற்கு காரணமானதாக கூறப்படும் பைக்கில் வந்த இளைஞர், போதையில் இருந்ததை உறுதி செய்த சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது. மேலும் தீ விபத்து கோரமானதற்கு பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட 234 ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறியது தான் காரணம் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் அத்தோடு தீ கொழுந்துவிட்டு எரிந்தபோது தங்கள் கைமுட்டியாலும், லேப்டாப்பாலும் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பியதை பதைபதைப்புடன் பயணிகள் விவரித்துள்ளனர்.
தான் கண் விழித்தபோது, பேருந்து முழுதும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததாகவும், மூச்சுவிட முடியாமல் தவித்ததாகவும் நெலகூர்த்தி ரமேஷ் என்பவர் தெரிவித்தார். மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமே என்ற பதற்றத்தில் கைமுட்டியால் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அவர்களை முதலில் வெளியே தள்ளிவிட்டு, தானும் வெளியேறியதாக அவர் கூறினார். ரமேஷை தொடர்ந்து வேறு சிலரும் ஜன்னல் வழியே வெளியேறி, தீப்பிடித்து எரியும் பேருந்தைவிட்டு வெகுதூரம் ஓடி தப்பித்துள்ளனர்.
சக பயணி ஒருவர் அவசரமாக எழுப்பியதால் கண்விழித்ததாகவும், என்ன நடக்கிறது என்று சிறிது நேரம் புரியவில்லை என்றும் பகதூர்பள்ளியைச் சேர்ந்த கண்டசாலா சுப்பிரமணியம் என்பவர் தெரிவித்தார். எங்கும் கூச்சலும் அலறலும் நிலவியதாகவும், பையை எடுத்துக்கொண்டு முன்பக்க கதவு வழியாக வெளியேற முயன்றதாகவும், அது முடியாததால், யாரோ ஒருவர் மடிக்கணினியால் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததைப் பார்த்து அதன் வழியே தப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து மேலும் 10 பேர் அந்த ஜன்னல் வழியே வெளியே குதித்து உயிர் தப்பியுள்ளனர்.
உயிர் தப்பிய வித்யாநகரைச் சேர்ந்த ஜெயந்த் குஷ்வால், என்பவர், பேருந்தில் இருந்தவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை வெறித்தனமாக உடைத்து எப்படியாவது தப்பிக்க முயன்றதைப் பார்த்ததாகவும், அந்தக் காட்சி பயங்கரமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
யோசிப்பதற்கு ஒரு நொடிகூட இல்லை என்றும், யாரோ ஒருவர் பின்பக்க அவசர கதவை உடைத்ததைப் பார்த்து, அதன் வழியே தப்பியதாக, கால் எலும்பு முறிந்த ஹயாத்நகரைச் சேர்ந்த நவீன் குமார் தெரிவித்தார். கால் உடைந்ததால் தன்னால் பிறருக்கு உதவ முடியாமல் போனதாகவும், அந்தத் தருணத்தில் யாராலும் எதுவும் செய்ய முடியாமல் தவித்து நின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், பேருந்து தீப்பிடித்த நிலையில் அங்கிருந்து தப்பிச்சென்ற பேருந்தின் ஓட்டுநர் மிரியாலா லக்ஸ்மையாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர், பத்தாம் வகுப்பு படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, பேருந்து விபத்துக்குக் காரணமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய சிவசங்கர் என்பவர், மதுபோதையில் இருந்ததாகவும், விபத்துக்கு முன் பெட்ரோல் நிலையத்துக்கு அவர் வந்து சென்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன.
பேருந்துக்கு அடியில் சிக்கி இருசக்கர வாகனம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், சிவசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்த மங்கநாத் என்பவர், ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதற்காக, 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள 234 ஸ்மார்ட்போன்களை பார்சல் அனுப்பியுள்ளார். பேருந்து தீப்பிடித்தபோது, செல்போன்களின் பேட்டரிகளும் வெடித்ததில் தீ வேகமாகப் பரவியதாகவும் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu