BIG STORIES
ஆம்னி பேருந்துக்கு அடியில் சிக்கியதால் வெடித்த பைக்...! 23 பயணிகள் பலியானது எப்படி? தூக்கத்தில் பறிபோன உயிர்கள்
Oct 24, 2025 04:35 PM
336
ஆம்னி பேருந்துக்கு அடியில் சிக்கியதால் வெடித்த பைக்...! 23 பயணிகள் பலியானது எப்படி?
ஐதராபாத் அருகே சாலை விபத்தில் ஆம்னி பேருந்துக்கு அடியில் சிக்கிய பைக்கின் பெட்ரோல் டேங் வெடித்ததால் ஆம்னி பேருந்து தீப்பற்றி 23 பயணிகள் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 23ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 41 பயணிகளுடன் ஆந்திர மாநிலம், கர்னூல் வழியாக பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது. கர்னூல் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை 44 ல் சின்ன டேக்கூரு எனும் இடத்தில், சென்ற போது அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது இந்த சொகுசு பேருந்து வேகமாக மோதியது.
இதில், பைக்கில் இருந்தவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பைக் பேருந்துக்கு அடியில் சிக்கியது தெரியாமல் பேருந்தை ஓட்டிச்சென்றதால், சாலையில் உரசி பைக்கின் பெட்ரோல் டேங்கில் தீப்பற்றியதாகவும், அந்த தீ பேருந்தில் பரவ தொடங்கியது
உடனே பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், பேருந்தில் இருக்கும் பயணிகளை காப்பாற்ற முயலாமல் உடனே அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது. அதிகாலை என்பதால் பயணிகள் பேருந்துக்குள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். திடுக்கிட்டு விழித்த கீழ் வரிசை பயணிகள் சிலர் தீ பரவுவதை தாமதமாக அறிந்து பேருந்தில் இருந்து குதித்து தப்பி உள்ளனர். சிலர் பின் பக்கம் உள்ள எமர்ஜென்சி எக்சிட் கதவை உடைத்து கொண்டு காயங்களுடன் வெளியேறினர். இருப்பினும் மேல் படுக்கையில் படுத்து தூங்கி கொண்டிருந்தவர்கள் பெரும்பாலனவர்கள் எழுந்து கீழே இறங்குவதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது. வேகமாக பரவிய தீ மற்றும் புகையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட 23 பயணிகள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர்.
தகவலறிந்ததும் கர்னூல் போலீஸார், தீயணைப்பு படையினர் விரைந்தனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்து சாலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவர்களை ஆம்புலன்ஸில் கர்னூல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
பேருந்து இருக்கையில் அமர்ந்த படியே பலர் கருகி இறந்துள்ளனர். எலும்பு கூடுகளாக இருக்கும் இவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் ? என்பது குறித்து அறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனம் மீது மோதிய பின்னரும் பேருந்தை நிறுத்தாமல் 350 மீட்டர் தூரம் வரை ஓட்டுநர் ஓட்டிச் சென்றதாகவும், அப்போது பேருந்துக்கு அடியில் இருசக்கர வாகனம் சிக்கிக்கொண்டு தீப்பிடித்ததில், பேருந்தும் உடனடியாகத் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
தீவிபத்து ஏற்பட்டால் கண்ணாடிகளை உடைக்க சுத்தியல் போன்ற பேருந்தில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். படுக்கை வசதி கொண்ட அந்தப் பேருந்தில், கீழடுக்கில் இருந்தவர்கள் உடனே பேருந்தில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பிய நிலையில், மேலடுக்கில் இருந்தவர்கள் தப்பிப்பதற்குள் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான காவேரி டிராவல்ஸுக்குச் சொந்தமான வோல்வா பேருந்து, ஃபிட்னஸ், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக பலமுறை அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu