BIG STORIES
தேவாவின் இசைக்கு உதவிய தம்பி சபேசன் திடீர் உயிரிழப்பு ஏன்?
Oct 24, 2025 01:27 AM
369
தேவாவின் இசைக்கு உதவிய தம்பி சபேசன் திடீர் உயிரிழப்பு ஏன்?
தமிழ் சினிமாவின் தேனிசை அடையாளமான இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேசன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் அவருக்கு வயது 68 . தமிழ் சினிமா இசைக் கோர்வையில் கானா பாடல்களால், இளைஞர்களை கொண்டாட வைத்தவரின், துள்ளலிசைப் பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு...
இளையராஜாவிடம் இசையை அறிந்தவர்... தேனிசை தென்றலின் சகோதரர்களில் மிக முக்கியமானவர் ..! அண்ணனின் இசைக்கு கீ போர்டில் உயிர் கொடுத்தவர்... சகோதரர் முரளியுடன் இணைந்து தவமாய் தவமிருந்து இசையமைப்பாளரானவர் சபேஷ் என்கிற சபேசன்...!
1990ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சி படத்தில் சபேசனின் உதவியுடன் தேவா இசை அமைத்த அத்தனை பாடல்களும் மெகா ஹிட்
அன்று முதல் தொடர்ச்சியாக தேவா இசையமைத்த அனைத்து படங்களுக்கும் தோளோடு தோள் கொடுத்து இசை கோர்வைக்கு சபேசன் உதவியதால் 300 படங்களுக்கு மேல் அதிர்ஷட காற்று அவர்கள் பக்கம் வீசியது
தன்னுடைய கானா குரலால் குத்தாட்ட பாடல்களை பாடி திரையரங்குகளை குலுங்க வைத்தவர் சபேசன்
80ஸ் மற்றும் 90ஸ் குழந்தைகளை சென்னையின் கானா பாடல்களால் குத்தாட்டம் போட்டு ஆட வைத்தது சபேசனின் காந்த குரல்
திரையரங்குகளில் வெற்றியை ருசிக்க தவறிய பல படங்களில் சபேசனின் குரலில் வெளியான பாடல்கள் இன்றளவும் ஆட்டம் போட வைக்கும் அதிரடி ரகம்
இப்படி அதகளமான பல பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கிய சபேசன் பின்னணி இசையில் வெளியான முதல் படம் ஆட்டோகிராப் என்றால் நம்மில் பலருக்கு வியப்பாக இருக்கும். அந்த அளவுக்கு காதலின் வலிகளை இசையால் கடத்தி இருப்பார் சபேசன்...
தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் முழு இசையமைப்பாளராக அறிமுகமான சபேசன் ரசிகர்களை இசையால் கலங்க வைத்தார்
சமுத்திரம், பொக்கிஷம், மாயாண்டி குடும்பத்தார், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.
சென்னையில் பிறந்து வளர்ந்ததால் கிராமத்து வாழ்க்கையையே அறிந்திறாத சபேசன், மாயாண்டி குடும்பத்தார் படத்தில் திருவிழா காட்சிகளில் நாட்டுப்புற இசையை அள்ளி வழங்கி ரசிகர்களை குதுகலிக்க வைத்தவர்
அண்மையில் சகோதரர்கள் மீண்டும் ஒன்றிணைந்து தேவாதி தேவா என்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர் அதில் பங்கேற்று சபேசன் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்
திரை இசைகலைஞர்கள் சங்க தலைவராகவும் சபேசன் பொறுப்பு வகித்தார். கடந்த 4 வருடங்களாக சிறுநீரக பிரச்சனை காரணமாக மாதம் இரு முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டாலும் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் களைகட்டிய தேவாவின் இசை நிகழ்ச்சிகளில் சபேசன் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21ந்தேதி வட பழனியில் உள்ள தனியர் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று திரும்பியவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது .
மூச்சு பேச்சில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ,சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மதியம் 12.15 மணிக்கு சபேசன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
தமிழ் சினிமாவில் பணிபுரிந்த சகோதரர்களில் என்றும் நன்றியுடைய ஒரு சில தம்பிகளில் ஒருவராக இறுதிவரை வாழ்ந்த சபேசனின் மறைவு அவரது இசைக்குடும்பத்துக்கு மட்டுமல்ல, இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பு.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu