உருட்டுக்கட்டையுடன் முகமூடி கொள்ளையர் அட்டகாசம்
Nov 19, 2025
BIG STORIES
"பட்டாசு வாங்கக் கூட பணமில்லை!" பிரபல தொழிலதிபர் குடும்பத்தில் வறுமை.. சிக்கிய அந்த உருக்கமான கடிதம்..!
Oct 23, 2025 12:46 PM
5651
பிரபல தொழிலதிபர் குடும்பத்தில் நடந்த கொடூரம்.. சிக்கிய அந்த உருக்கமான கடிதம்.
ஊரில் செல்வாக்கு மிக்க தொழிலதிபராக வலம்வந்த ஒருவர், கடைசியில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வாங்க கூட பணமின்றி வறுமையில் தவித்து வந்திருக்கிறார். இறப்பதற்கு முன் உருக்கத்துடன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தொழிலதிபர் குடும்பத்தோடு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை ஈசிஆரை சேர்ந்தவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா. தொழிலதிபரான இவருக்கு ரேவதி என்ற மனைவியும், ரித்விக் அர்ஷத் மற்றும் தித்விக் அர்ஷத் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். தொழிலதிபர் சிரஞ்சீவி தாமோதர குப்தா, சென்னை அண்ணாசாலையில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சிசிடிவி கேமரா மொத்த விற்பனை கடை நடத்தி வந்தார்.
தொழிலதிபர் சிரஞ்சீவியின் மகன்கள் இருவரும் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10 மற்றும் 7ஆம் வகுப்பும் படித்துவந்தனர். இந்த நிலையில் மகன்கள் பள்ளி படிப்புக்காக, தொழிலதிபர் சிரஞ்சீவி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை ஈஞ்சம்பாக்கம் ‘சாகாஷ் வைபவ் என்கிளைவ்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியேறியுள்ளார்.
மேலும் சிரஞ்சீவி, தனது கடையை விரிவுப்படுத்த பல கோடிக்கு கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிரஞ்சீவிக்கு, கடந்த சில ஆண்டுகளாக கடையில் இருந்து சரியாக வருவாய் கிடைக்காததால், கடனை அவரால் திரும்ப கொடுக்கமுடியாமல் தவித்துவந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் தொழிலதிபர் சிரஞ்சீவியை பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால், சிரஞ்சீவி கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அதேநேரம் கடன் கொடுத்தவர்கள் தொழிலதிபர் மனைவி ரேவதிக்கும் நேரடியாக தொலைபேசியில் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடன் தொல்லையால் ‘தீபாவளி’ பண்டிகையை இவர்கள் கொண்டாடவில்லை. தனது மகன்களுக்கும் பட்டாசுகள் கூட சிரஞ்சீவியால் வாங்கி கொடுக்க இயலவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சேலத்தில் உள்ள சிரஞ்சீவியின் மாமா முரளி என்பவரின் வங்கி கணக்கிற்கு 1 லட்சம் ரூபாய் பணத்தை தொழிலதிபர் சிரஞ்சீவி அனுப்பியுள்ளார். பிறகு காலையில் எழுந்து தனது போனை பார்த்த முரளி, அதில் 1 லட்சம் ரூபாய் பணத்தை சிரஞ்சீவி அனுப்பி இருப்பதைக் கண்டு குழப்பம் அடைந்திருக்கிறார்.
பின்னர் இதுகுறித்து கேட்க உடனே முரளி, தொழிலதிபர் சிரஞ்சீவிக்கு போன் செய்துள்ளார். வெகு நேரம் போன் அடித்தும் சிரஞ்சீவி போனை எடுக்காததால் சந்தேகமடைந்த முரளி, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் ரேவதியின் தம்பி, சாய் கிருஷ்ணாவுக்கு தகவல் அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
அப்போது சாய் கிருஷ்ணா தனது சகோதரி ரேவதி வீட்டிற்கு வந்து கதவை தட்டியிருக்கிறார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த சாய், அருகில் இருந்தவர்கள் உதவியுடன், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது படுக்கை அறையில் ரேவதி, மற்றும் இரண்டு மகன்கள், பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடிய நிலையில் படுக்கையிலேயே இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
அதன் பின் தனது மாமாவான தொழிலதிபர் சிரஞ்சீவிவை அறைகளில் தேடியிருக்கிறார். அப்போது சிரஞ்சீவ், படுக்கை அறையில் உள்ள பாத்ரூமில் தனது கால்களை கட்டிய நிலையில் கத்தியால் கை மணிக்கட்டு மற்றும் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
இதைத்தொடர்ந்து சாய் கிருஷ்ணா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குவந்த நீலாங்கரை போலீசார், தொழிலதிபர் சிரஞ்சீவி மற்றும் அரவது மனைவி ரேவதி, 2 மகன்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் தொழிலதிபர் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது சிரஞ்சீவி எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு சிக்கியது.
அந்த கடிதத்தில் ‘ தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடன் எதையும் இதற்கு மேல் திரும்பி செலுத்த முடியாத காரணத்தால், சிரஞ்சீவி என்னும் நான், எனது குடும்பத்தோடு உயிரை மாய்த்து கொள்கிறோம். எங்களது இறப்பிற்கு யாரும் பொறுப்பல்ல. இது நான் எல்லோருக்கும் தெரிவித்து கொள்கிறேன்’ என எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர் கையெழுத்து மற்றும் அவரது மனைவி ரேவதியின் கையெழுத்தும் போடப்பட்டுள்ளது.
இறந்த பிறகு தங்களது இறுதி சடங்கிற்காக தனது மாமா முரளிக்கு, சிரஞ்சீவ் 1 லட்சம் பணம் அனுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து தொழிலதிபர் யார் யாரிடம் கடன் வாங்கியுள்ளார்? கடன் கொடுத்தவர்கள் மிரட்டினார்களா? என தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி செல்போன்களை கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் இரண்டு மகன்கள், மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu