உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி
Nov 13, 2025
முகப்பு
அடிக்கப்போகுதா புயல்? அடுத்த மூன்று நாட்கள்... மழை ஆட்டம் ஆரம்பம்... என்ன நடக்கப்போகுது?
Oct 22, 2025 09:50 AM
455
அடிக்கப்போகுதா புயல்? அடுத்த மூன்று நாட்கள்... மழை ஆட்டம் ஆரம்பம்... என்ன நடக்க போகுது..?
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என அறிவித்திருக்கிறது, வானிலை ஆய்வு மையம்!
இதுகுறித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா கூறும்போது, தமிழ்நாட்டில், 4 மாவட்டங்களுக்கு அக்டோபர் 22 ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.
அதேபோல், 11 மாவட்டங்களுக்கு 22 ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
வரும் 23 ஆம் தேதி... 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளது. என கூறியுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக முதல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், இரண்டாவதாக தெற்கு அந்தமானில் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது. இதனால், உலகின் மிகப் பிரபலமான Fujiwhara Effect-ஐ உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிவுறுத்தல் காரணமாக ராமநாதபுரம் மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
வங்கக் கடல் மற்றும் அரேபிய கடலின் பகுதியில் மொத்தமாக 4 வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுவதால் Fujiwhara Effect-க்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வுமைய இயக்குனர் அமுதா குறிப்பிட்டுள்ளார்.
Fujiwhara Effect என்பது ஒரு புயல் இன்னொரு புயலை வலுவிழக்க வைத்து அதன் மழை மேகங்களையும் தன்னுடன் சேர்த்துக் கொள்வதை குறிக்கும்.
1921-இல் ஜப்பானிய வானிலை ஆராய்ச்சியாளர் Sakuhei Fujiwhara என்பவர் இதனை முதல் முதலாக கண்டறிந்ததால், அவர் பெயரே இந்த விதமான செயல்பாட்டுக்கு வைக்கப்பட்டது.
இரண்டு வெவ்வேறு வேகமும், அழுத்தமும் கொண்ட புயல்கள் ஒன்றோடு ஒன்று ஈர்க்கப்படும்போது, வலுவான புயலானது வலுவிழந்த புயலை கிரகித்துக்கொள்ளும். ஒரே மாதிரியான வேகமும், அழுத்தமும் கொண்ட புயல்கள் Fujiwhara Effect-இல் சிக்கினால் அவை ஒன்றாக சேர்ந்து மேலும் வலுவான புயலாக மாறுவதற்கும், அல்லது ஒன்றோடு ஒன்று மோதி அதனதன் திசையில் செல்லவும் வாய்ப்பு உள்ளது.
தற்போதைய சூழலில் வங்கக்கடலில் நிலவும் இரண்டு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் தொடர்ந்து வலுவாகிக் கொண்டே வந்தாலும், அரபிக்கடலில் நிலவும் முதல் மேலடுக்கு சுழற்சி வலுவிழந்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் உள்ள இரண்டு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளும், அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களாக வலுப்பெறும்போது தான் Fujiwhara Effect-க்கான வாய்ப்பு அதிகரிக்கிறதா? குறைகிறதா? என்பது முழுமையாக தெரியும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா கடந்த 21 ஆம் தேதி தெரிவித்தார்.
மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மின்துறை மூலம் பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதாவது, மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் (Pillar Box) மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.
தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும். ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.
வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம். மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பங்களிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu