BIG STORIES
“சம்பவத்தை கட்டுப்படுத்த வேண்டிய தலைவரே தாக்குதலை தூண்டலாமா..?" திருமாவளவன் மீது நீதிபதி அதிருப்தி
Oct 18, 2025 01:06 AM
1062
“சம்பவத்தை கட்டுப்படுத்த வேண்டிய தலைவரே தாக்குதலை தூண்டலாமா..?" திருமாவளவன் மீது நீதிபதி அதிருப்தி
சென்னை உயர் நீதிமன்றத்தின் அருகே விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருதரப்பு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது ஏன் ? என உயர் நீதிமன்ற நீதிபதி போலீசாருக்கு வழக்கு ஒன்றில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதுடன், அந்த சம்பவத்தை கட்டுப்படுத்த வேண்டிய தலைவரே தாக்குதலை தூண்டும் விதத்தில் செயல்பட்டது போல தெரிகிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை உயர்நீதிமன்றம் அருகே திருமாவளவன் சென்ற கார் , தனது ஸ்கூட்டர் மீது இடித்ததாக கூறி கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் ராஜீவ் காந்தி பார்கவுன்சில் வாயில் அருகே சாலையில் வைத்து விசிகவினரால் சரமாரியாக தாக்கப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார், 10 நாட்கள் கழித்து இரு தரப்பு புகார்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
அந்தவகையில் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி அளித்த புகாரில், திருமாவளவன் தூண்டுதலின் பெயரில் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் அவரது பெயரை தவிர்த்து தாக்கிய விசிக வினர் மீது ஆபாசமாக பேசியதாகவும், காயம் ஏற்படுத்தும் நோக்கில் தாக்கியதாகவும் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசிக வழக்கறிஞர் பார்வேந்தன் அளித்த புகாரில் , தனி நபரை தவறான நோக்கில் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, அமைதியை குலைக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே அவமதிப்பது போன்ற சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் 3 பிரிவுகளில் ராஜீவ்காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விசிக வழக்கறிஞர் பார்வேந்தன் அளித்த புகாரில் எந்த ஒரு இடத்திலும் மிரட்டியதாக கூறப்படாத நிலையில் போலீசார் மிரட்டல் சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்திருப்பது எப்படி ? என்று வழக்கறிஞர் ராஜீவ்காந்தி தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கிடையே வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பார்கவுன்சிலில் பா.ம.க வழக்கறிஞர் பாலு புகார் அளித்திருந்தார். இதனால் கடலூரை சேர்ந்த விசிக வழக்கறிஞர் ஒருவர், தனக்கு எதிராக சில ஆபாசமான வார்த்தையை பயன்படுத்தி மிரட்டல் விடுத்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பாலு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு முறையீடு செய்யபட்டது. கோரிக்கையை ஏற்று, அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டது. வழக்கறிஞர் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பிறகு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பார் கவுன்சிலுக்கு மனுதாரர் கடிதம் எழுதியதாகவும் அதன் பிறகு சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் , உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் பாலு கோரினார்.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜராகி இருந்த அரசு வழக்கறிஞர் முகிலன், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தாக்கபட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அப்போது நீதிபதி சதீஷ்குமார், ஒரு தரப்பு மட்டுமே சேர்ந்து கொண்டு, ஒரு வழக்கறிஞரை தாக்கியுள்ளனர் ஆனால் எதன் அடிப்படையில் இரண்டு தரப்பு மீதும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது ? என கேள்வி எழுப்பினார்.
வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த விஷயத்தில் காவல்துறை அமைதியாக இருந்ததாகவே தான் கருதுவதாக கருத்து தெரிவித்தார்.
மேலும் சம்பவத்தை கட்டுப்படுத்த வேண்டிய தலைவர் அதற்கு பதிலாக தூண்டும் விதத்தில் செயல்படுவதாக தெரிகிறது என கருத்து தெரிவித்த நீதிபதி சதீஷ்குமார் , தாக்குதல் நடந்த போது காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தனர் ? என கேள்வி எழுப்பினார். இதற்கு காவல்துறை தரப்பில், தாங்கள் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை மீட்டு பாதுகாத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார், சம்பவம் நடைபெற்ற இடத்தில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை கைப்பற்றி காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். சம்பவம் தொடர்பாக காவல்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu