BIG STORIES
வீட்டில் பூட்டை உடைத்து பெண்ணின் கழுத்தை நெரித்து முகமூடி கொள்ளையர் அட்டூழியம்...!
Oct 16, 2025 04:18 PM
288
வீட்டில் பூட்டை உடைத்து பெண்ணின் கழுத்தை நெரித்து முகமூடி கொள்ளையர் அட்டூழியம்...!
கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் பகுதியில் மங்கி குல்லாவுடன் வலம் வந்த கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பெண்ணின் கழுத்தை நெரித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேகேப்பள்ளியை சேர்ந்தவர்கள் லோகநாதன் - கீதா தம்பதியர். தங்களது 3 மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்ட நிலையில் கணவன் மனைவி மட்டுமே வீட்டில் வசித்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு கீதாவின் கணவர் லோகநாதன், துக்க நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலைக்கு சென்றுவிட, தனது பேத்திகள் 2 பேருடன் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 1 மணி அளவில், வீட்டின் இரும்பு கேட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. திடுக்கிட்டு எழுந்த கீதா, ஜன்னல் வழியாக பார்த்த போது முகமூடி அணிந்த சிலர் வெளிப்பக்க இரும்பு கேட்டை தள்ளிக்கொண்டு இருந்தனர்.
கீதா சத்தம் போட்டதும், அங்கிருந்து சென்ற அந்த கும்பல் அரை மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ஸ்குருடிரைவர், கட்டிங் பிளேயர் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து இரும்பு கேட்டை உடைத்து கீழே தள்ளியுள்ளது. இதனால் பதறிப்போன கீதா தனது 3 மகள்களுக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, சீக்கிரம் வாங்க மா, யாரோ கதவ உடைக்கிறாங்க என கதறியுள்ளார். அதற்குள்ளாக முகத்தை துணிகளால் மறைத்து கொண்டும், மாஸ்க் மற்றும் தலையில் மங்கி குல்லா அணிந்திருந்த கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கீதாவின் கழுத்தை நெறித்துள்ளது.
“உன்னை கொலை செய்துவிடுவோம் மரியாதையாக வீட்டில் இருக்கும் பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொடு” என மிரட்டியுள்ளனர். அங்கு தூங்கி கொண்டிருந்த அவரது பேத்திகள், சத்தம் கேட்டு விழித்துக்கொண்டு அழத்தொடங்கியுள்ளனர். கொள்ளையர்களோ கீதாவின் கழுத்தை நெறித்தவாரே, ஸ்குருடிரைவர், கட்டிங் பிளேயரை வைத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
கீதாவோ நாங்கள் கூலி வேலைக்கு செல்பவர்கள் , நகை பணம் ஏதும் இல்லை என்றும் எனது விட்டுக்காரர் ஒரு நோயாளி, நானும் ஒரு நோயாளி, நாங்கள் வாங்கும் சம்பளம் மருந்து மாத்திரைகளுக்கே சரியாகி விடுகிறது. வீட்டில் எதுவுமில்லை இருந்தால் எடுத்து கொள்ளுங்கள், என கெஞ்சியுள்ளார்.
அதற்குள் கீதாவின் மருமகன்கள், எதிர் வீட்டில் உள்ளவர்கள் என 10க்கும் மேற்பட்டோர் கீதாவின் வீட்டை நோக்கி சத்தமிட்டபடியே வந்ததாக கூறப்படுகின்றது. உடனடியாக அந்த முகமூடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்தப்பகுதியில் பதிவாகி இருந்த முகமூடி கொள்ளையர்களின் வீடியோக்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேகேப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் சுற்றிதிரிவதால் இரவு நேரங்களில் யாராவது கதவை தட்டினால், கதவை திறக்க வேண்டாம் எனவும் சிப்காட் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் 90800 82847 என்ற இன்ஸ்பெக்டரின் செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu