BIG STORIES
விஜயை முடக்க சதி என ஆதவ் குற்றச்சாட்டு.. வாய்க்கு வந்ததை ஆதவ் பேசுவதாக வில்சன் பதிலடி
Oct 14, 2025 01:49 AM
195
விஜயை முடக்க சதி என ஆதவ் குற்றச்சாட்டு.. வாய்க்கு வந்ததை ஆதவ் பேசுவதாக வில்சன் பதிலடி
கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து த.வெ.க.வையும், விஜயையும் முடக்க தமிழ்நாடு அரசு சதி செய்ததாக அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருவதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அவர் கருத்துகளை கூறுவதாகவும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வில்சன் விமர்சித்துள்ளார்.
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் த.வெ.க.வின் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவல்துறையின் அழுத்தம் காரணமாகவே வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்ததாகவும், கூட்டநெரிசல் சம்பவத்திற்கு த.வெ.க. தான் காரணம் எனும் தோற்றம் உருவாக்கப்பட்டதாகவும் கூறினார்.
கரூருக்கு விஜய் தாமதமாக வந்ததாக அபாண்டமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், காவல்துறை அனுமதித்த மதியம் 3 முதல் 10 வரைக்கு உள்ளாகத்தான் விஜய் சென்றதாகவும் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்தார். ((பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் வாகனம் நுழைந்தபோது ஒட்டுமொத்த காவல்துறை எங்கு நிறுத்த சொன்னதோ அங்கு நிறுத்திதான் அவர் பேசியதாகவும், எல்லாம் சரியாகத்தான் இருக்கிறதா? என்பதை அறிந்த பிறகே விஜய் பேசத் தொடங்கியதாகவும் ஆதவ் குறிப்பிட்டார். ))
கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற பிறகு கரூர் மாவட்ட எல்லையில் காத்திருந்தாகவும், நாங்கள் உள்ளே வந்தால் கலவரம் ஆகிவிடும் என காவல்துறை கூறியதால் வெளியேறியதாவும் ஆதவ் குறிப்பிட்டார். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்து கட்சியை முடக்க தி.மு.க. முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், ஒருநபர் ஆணையம் அமைத்த பிறகு அரசு அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து பேட்டியளித்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.
போலியான மனுக்களுக்கும் த.வெ.க.விற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், த.வெ.க. சார்பில், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரான தான் மட்டுமே உச்சநீதிமன்றத்தை நாடியதாகவும் ஆதவ் அர்ஜூனா விளக்கமளித்தார்.
பின்னர் பேட்டியளித்த தி.மு.க. தரப்பு வழக்கறிஞர் வில்சன், கரூர் கூட்டநெரிசல் வழக்கில் தமிழக அரசுக்கு பின்னடைவு இல்லை என்றார். நீதிமன்றத்தின் கருத்துக்கள் தமிழக அரசுக்கும், சம்பவம் குறித்த விசாரணைக்கும் எதிரானதாக இல்லை என்றும் வில்சன் குறிப்பிட்டார்.
சி.பி.ஐ. விசாரிக்கும் உத்தரவை இடைக்காலமாகமே உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகவும், மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது உறுதியானால் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்யும் என்றும் வில்சன் விளக்கமளித்தார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் பாதிக்கப்பட்டோருக்கு எந்தப் பயனும் இல்லை எனக்குறிப்பிட்ட வில்சன், கூட்ட நெரிசல் வழக்கில் இறுதி உத்தரவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.
உயர்நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்ததாக ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தால் தவறானது என்றும் நீதிமன்ற அவமதிப்பு என்றும் குறிப்பிட்ட வில்சன், நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருவதாக விமர்சித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu